27 December, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - இறுதிப்பகுதி – 53

‘Misericordia et Misera’ – Cover Page

கடந்த 52 வாரங்கள் நாம் மேற்கொண்ட ஒரு பயணம், இன்று நிறைவடைகிறது. "காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம்" என்ற பெயரில் நாம் மேற்கொண்ட இப்பயணத்தில், இரக்கமே உருவான இறைவன், நம்மை வழிநடத்தி வந்ததற்காக அவருக்கு நன்றிகூறுவோம். இந்த இறுதிப் பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுத்து வடிவில் வழங்கிய சில கருத்துக்களை, குறிப்பாக, இந்த யூபிலி ஆண்டின் இறுதியில் அவர் வெளியிட்ட "இரக்கமும் அவலநிலையும்" (‘Misericordia et Misera’) என்ற திருத்தூது மடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை இன்று அசைபோட முயல்வோம்.

இந்த யூபிலியையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் எடு, 'Misericordiae Vultus', அதாவது, 'இரக்கத்தின் முகம்' என்ற தலைப்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மடல் (Bull of Indiction).  25 பகுதிகள் கொண்ட இம்மடல், கத்தோலிக்கத் திருஅவையைத் தாண்டி, பல மதத்தவரையும், மத நம்பிக்கையற்றவரையும் கவர்ந்தது என்பது உண்மை.

இரக்கத்தின் யூபிலி தன் முதல் மாதப் பயணத்தை நிறைவு செய்த வேளையில், 2016ம் ஆண்டு, சனவரி 12ம் தேதி, 'இறைவனின் பெயர் இரக்கம்' (The Name of God is Mercy) என்ற தலைப்பில் நூல் ஒன்று வெளியானது. ஆந்திரேயா தோர்னியெல்லி (Andrea Tornielli) என்ற பத்திரிகையாளர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட பேட்டியின் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டது.
'இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு' என்ற எண்ணம், பல ஆண்டுகளுக்கு முன்னரே தன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த ஓர் எண்ணம் என்பதை, திருத்தந்தை, இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதி நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இரக்கமும், அவலநிலையும்' என்ற திருத்தூது மடல், நேர்மறையான அதிர்வலைகளை கத்தோலிக்கத் திருஅவையிலும், உலகச் சமுதாயத்திலும் உருவாக்கி வருகிறது என்பது உண்மை.
விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, மறைநூல் அறிஞரும், பரிசேயரும் இயேசுவிடம் கொணர்ந்த நிகழ்வை, இத்திருமடலின் அறிமுகமாக திருத்தந்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, உடனடியாக, மற்றொரு நிகழ்வையும் திருத்தந்தை அறிமுகம் செய்துள்ளார். லூக்கா நற்செய்தி 7ம் பிரிவில் கூறப்பட்டுள்ள அந்நிகழ்வில், பரிசேயர் ஒருவரது இல்லத்தில் இயேசு உணவருந்திய வேளையில், 'பாவியான ஒரு பெண்' இயேசுவின் காலடிகளை தன் கண்ணீரால் கழுவித் துடைத்த அந்நிகழ்வை திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு நிகழ்வுகளிலும், நிலவிய இருவேறு கண்ணோட்டங்களை அடிப்படையாக வைத்து, இரக்கத்தின் பணி திருஅவையில் எவ்விதம் தொடரவேண்டும் என்பதை திருத்தந்தை தெளிவுபடுத்தியுள்ளார். பரிசேயர்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரின் பார்வையில் அவ்விரு பெண்களும் ஏற்கனவே தீர்ப்பிடப்பட்டவர்கள். அவ்விருவரையும் மனிதப்பிறவிகள் என்று பார்க்காமல், பாவிகள், குற்றவாளிகள் என்று கண்டனம் செய்தது, மதத்தலைவர்களின் கண்ணோட்டம். அவ்விருவரும் மனிதப்பிறவிகள் என்ற கண்ணோட்டமே, இயேசுவின் மனதை நிறைத்திருந்தது. தண்டனை வழங்குவதையே தங்கள் முதல் குறிக்கோளாகக் கொண்டிருந்த மதத்தலைவர்களுக்கு எதிர் துருவமாக, இயேசு, அவ்விருவருக்கும் மன்னிப்பு வழங்குவதையும், இரக்கம் காட்டுவதையும் தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். மன்னிப்படைந்த இவ்விரு பெண்கள் அடைந்த மகிழ்வைப்பற்றிக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு பெறுவதாலும், தருவதாலும், நாம் பெறும் நலன்களைப் பற்றி விவரித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மன்னிக்கும் இறைவன் எப்படிப்பட்டவர் என்பதை மிக அழகாக சித்திரித்துள்ளார், திருத்தந்தை. 'இரக்கமும், அவலநிலையும்' என்ற திருத்தூது மடலின் இதயமாக இப்பகுதி அமைந்துள்ளது என்று சொன்னால், அது மிகையல்ல. "என் பாவங்கள் அனைத்தையும் உம் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்" (எசாயா 38:17) என்று, அரசர் எசேக்கியா கூறிய வார்த்தைகளையும், "அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்" (மீக்கா 7:19) என்று இறைவாக்கினர் மீக்கா கூறும் சொற்களையும், தன் மடலில் எடுத்துக்காட்டுகளாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.

"இறைவனின் இரக்கம் அனைத்துப் பாவங்களையும்விட பெரியது; இறைவனின் இரக்கத்தை எதுவும் தடைசெய்ய முடியாது" என்ற கருத்துக்களை பல தருணங்களில், பகிர்ந்து வந்துள்ளார், திருத்தந்தை. இரக்கத்தின் சிறப்பு யூபிலியையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'அவ்வெனீரே' (Avvenire) என்ற இத்தாலிய நாளிதழுக்கு வழங்கிய ஒரு பேட்டியில், இறைவன், நம் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்ல, மறந்தும்விடுகிறார் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்:
"இறைவனின் பெயர், இரக்கம். அதுவே அவரது வலுவற்ற அம்சமாகவும் விளங்குகிறது. அவரது இரக்கம், மன்னிக்கவும், மறக்கவும் செய்துவிடுகிறது. இறைவனுக்கு மோசமான ஞாபகசக்தி உள்ளதென்று நான் நினைக்கிறேன். அவர் ஒருமுறை மன்னித்துவிட்டால், அதை முற்றிலும் மறந்துவிடுகிறார். மன்னிப்பதில் அவர் மகிழ்வடைகிறார்."
திருத்தந்தை கூறும் இந்த எண்ணங்கள், எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளன: "அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்." (எபிரேயர் 8:12)

மன்னிப்பது இறைவனின் பண்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், மன்னிப்பது மட்டுமல்ல, நம் பாவங்களை மறப்பதும் இறைவனின் பண்பு என்பதை அறியும்போது, உள்ளத்திலிருந்து பெரும் சுமைகள் இறக்கப்படுவதுபோல் உணர்கிறோம். இத்தகைய உணர்வை, தன் திருத்தூது மடல் வழியே தந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே பண்பினை கத்தோலிக்கத் திருஅவையும் பெற்றிருக்கவேண்டும் என்பதை "இரக்கமும், அவலநிலையும்" என்ற தன் திருத்தூது மடலிலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மன்னிப்பதும், மறப்பதும், திருஅவையின் பண்பாக மாறவேண்டும் என்பதை தெளிவுபடுத்த, ஒரு சில பொருள் நிறைந்த முடிவுகளை இத்திருத்தூது மடலில் வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
இரக்கத்தின் சிறப்பு யூபிலியின் தனித்துவம் மிக்க ஒரு கொடையாக, இவ்வாண்டு, திருநீற்றுப் புதனன்று, இரக்கத்தின் மறைப்பணியாளர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனுப்பிவைத்தார். திருத்தந்தையும், திருப்பீடமும் மட்டுமே மன்னிப்பு வழங்கக்கூடிய ஐந்து பெரும் குற்றங்களை மன்னிக்கும் அதிகாரத்தை 1000த்திற்கும் அதிகமான அருள்பணியாளர்களுக்கு வழங்கி, அவர்களை உலகெங்கும் அனுப்பிவைத்தார் திருத்தந்தை.
இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் ஆற்றிய பணிகளால் பல நன்மைகள் விளைந்துள்ளன என்பதை தான் கேட்டறிந்ததாகக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மறைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் இனியும் தொடர்கிறது என்ற முடிவை, இம்மடலில் அறிவித்துள்ளார்.

அதேவண்ணம், 'கருக்கலைப்பு' என்ற பாவத்தில் ஈடுபட்டவர்கள், மனம் வருந்தி மன்னிப்பு வேண்டும்போது, அந்தப் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம், ஆயர்களுக்கும், குறிப்பிட்ட சில அருள்பணியாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இந்த யூபிலி ஆண்டையொட்டி, இந்தப் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம், அனைத்து அருள்பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இரக்கத்தின் யூபிலி நிறைவடைந்த பின்னரும், 'கருக்கலைப்பு' பாவத்தை மன்னிக்கும் அதிகாரம், அனைத்து அருள்பணியாளர்களுக்கும் தொடரும் என்று திருத்தந்தை, தன் திருத்தூது மடலில் அனுமதி வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, "கருக்கலைப்பு என்பது ஒரு பெரிய பாவம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விழைகிறேன். அதேவேளையில், இறைவனின் இரக்கத்தால் போக்கமுடியாத பாவம் எதுவும் இல்லை என்பதையும் நான் கூற கடமைப்பட்டுள்ளேன்" என்று திருத்தந்தை கூறும் சொற்கள், இறைவனின் இரக்கம், அனைத்து பாவங்களையும் அழிக்கும் சக்தி மிக்கது என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றன.

மன்னிப்பின் வழியே இறைவனின் இரக்கத்தைச் சுவைத்தவர்கள், அந்த இரக்கத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் உலக நாளை உருவாக்கித் தந்துள்ளார். திருஅவையின் வழிபாட்டு ஆண்டில், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முன்னதாக இடம்பெறும் பொதுக்காலம் 33வது ஞாயிறை, வறியோரின் உலக நாளெனச் சிறப்பிக்குமாறு திருத்தந்தை, இம்மடல் வழியே அழைப்பு விடுத்துள்ளார்.
உலக முடிவில் நம்மைச் சந்திக்கவரும் கிறிஸ்து அரசர், தேவையில் இருப்போருக்கு நாம் என்ன செய்தோம் என்ற அளவுகோல் கொண்டு தீர்ப்பிடுவார் என்பதை, (மத்தேயு 25:31-46) இம்மடலில் குறிப்பிட்டுள்ளத் திருத்தந்தை, தேவையில் இருப்போரை மையப்படுத்தி, வறியோர் உலக நாளை உருவாக்கியுள்ளார். "நற்செய்தியின் இதயத்துடிப்பாக வறுமை உள்ளது என்பதையும், நம் வாசல்களில் லாசர்கள் கிடக்கும்வரை (லூக்கா 16:19-21), நீதியும், சமுதாய அமைதியும் இருக்காது என்பதையும் சிந்தித்துப் பார்க்க இந்த உலகநாள் உதவும்" என்று, திருத்தந்தை இம்மடலின் இறுதிப் பகுதியில் கூறியுள்ளார்.

"இரக்கமும், நம்பிக்கையும் வாழும் ஓர் இடமாக, வரவேற்பையும், மன்னிப்பையும் வழங்கும் ஓர் இல்லமாக, திருஅவை, என்றென்றும் விளங்கவேண்டும்" (Let the Church always be a place of Mercy and Hope, where everyone is welcomed, loved and forgiven) என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையைக் குறித்து காணும் கனவு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் கடந்து, இனிவரும் காலத்திலும் நனவாக வேண்டும். இறைவனின் இரக்கத்தை இவ்வுலகிற்குக் கொணரும் தூதர்களாக நாம் வாழ்வதற்குரிய வரத்தை இறைவன் நம் அனைவருக்கும் வழங்க வேண்டுவோம்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலியையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு செபத்தை உருவாக்கியிருந்தார்.  கடந்த 52 வாரங்களாக நாம் மேற்கொண்ட இரக்கம் என்ற பயணத்தை, திருத்தந்தை வழங்கிய இச்செபத்துடன் நிறைவு செய்வோம்: 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, விண்ணகத் தந்தை கருணையுள்ளவராக இருப்பதுபோல, நாங்களும் இருக்கவேண்டும் என்றும், உம்மைக் காண்பவர், அவரைக் காண்பர் என்றும் எங்களுக்குக் கற்பித்துள்ளீர். உமது முகத்தை எங்களுக்குக் காட்டும், நாங்கள் மீட்படைவோம்...
காண இயலாத தந்தையின் காணக்கூடிய முகம் நீரே; இந்தக் கடவுளின் வல்லமை, மன்னிப்பிலும், கருணையிலும் வெளிப்படுகின்றது. உயிர்த்து, மாட்சிமை பெற்றுள்ள ஆண்டவராகிய உமது காணக்கூடிய முகமாக திருஅவை விளங்குவதாக!
அறியாமையிலும், தவறுகளிலும் இருப்போர் மீது பரிவு காட்டுவதற்கென, உமது பணியாளர்களையும் வலிமையற்ற நிலையை அணிந்துகொள்ளச் செய்தீர். உமது பணியாளர்களை அணுகிவரும் அனைவரும், இறைவன் அவர்களைத் தேடி, அன்பு செய்து, மன்னிக்கிறார் என்பதை உணரட்டும்.
கருணையின் யூபிலி ஆண்டு, அருள் நிறைந்த காலமாக அமைய, உமது ஆவியானவரை அனுப்பி, எங்கள் ஒவ்வொருவரையும் அருள்பொழிவு செய்தருளும். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையை அறிவிக்கவும், பார்வை இழந்தோருக்கு பார்வை தரவும், புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் திருஅவை பணியாற்றுவதற்கு இந்த யூபிலி ஆண்டு உதவட்டும்.
கருணையின் அன்னையான மரியாவின் பரிந்துரை வழியாக, இதை நாங்கள் மன்றாடுகிறோம். தந்தையோடும், தூய ஆவியாரோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கிறவரே, ஆமென்.


21 December, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 52

Apostolic Letter of Pope Francis – ‘Misericordia et Misera’

கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கி வந்துள்ளோம். இவ்வேளையில் உறவினர்கள், நண்பர்களுடன் நாம் மேற்கொள்ளும் சந்திப்புக்களை, இந்த விவிலியத் தேடலின் துவக்கத்தில், சிறிது கற்பனை செய்து பார்க்க உங்களை அழைக்கிறேன். நம் இல்லம் தேடிவரும் உறவினர்கள், நண்பர்களை வரவேற்று, விருந்து படைத்து, சில மணி நேரங்கள் அவர்களோடு செலவழிப்போம். அவர்கள் நம்மிடமிருந்து விடைபெறும் வேளையில், நாம் வாசல்வரை சென்று வழியனுப்பி வைப்போம். வீட்டிற்குள் எவ்வளவுதான் பேசியிருந்தாலும், அந்த இறுதி சில மணித்துளிகள் வாசலில் மீண்டும் சில பரிமாற்றங்கள் நடைபெறும். நமது உறவும், அதனால் வரும் மகிழ்வும், இனி வரும் நாட்களிலும் தொடரவேண்டும் என்ற எண்ணத்தில், வாசலில் பரிமாற்றங்கள் நிகழும். முக்கியமாக, அடுத்த சந்திப்பைப் பற்றிய திட்டங்கள் அங்கு பேசப்படும். பலசமயம், அந்த இறுதித் தருணங்களில், பரிசுகளும் பரிமாறப்படுவதுண்டு. அவ்வேளையில், நம் வாசல் கதவு, குறிப்பாக, அக்கதவு, தானியங்கி கதவாக இருந்தால், அது திறந்தே இருக்கும் வண்ணம், அதனருகே நம் பாதத்தை வைத்தபடி பேசிக்கொண்டிருப்போம்.
இதையொத்த ஓர் அழகியச் செயலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டின் இறுதியில் செய்துள்ளார். திருஅவை என்ற இல்லத்தில் நாம் அனைவரும் இணைந்து கொண்டாடிய யூபிலி ஆண்டின் இறுதியில், நாம் புறப்பட்ட நேரத்தில், திருத்தந்தை வாசல் வரை வந்து, இந்த யூபிலி அனுபவம் தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு திருத்தூது மடலை நமக்கு பரிசாக அளித்துள்ளார்.
“Misericordia et Misera” அதாவது, "இரக்கமும் அவலநிலையும்" என்ற பெயரில் திருத்தந்தை வெளியிட்ட திருத்தூது மடலைப் பற்றி பல செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில், ஒரு செய்தியின் தலைப்பு, வாசல்வரை வந்து நம்மை வழியனுப்பி வைக்கும் திருத்தந்தையைச் சித்திரிக்கிறது. AgenSIR என்ற இத்தாலிய, கத்தோலிக்க வலைத்தளத்தில், நவம்பர் 22ம் தேதி, திருத்தூது மடலைப் பற்றி வெளியான செய்திக்கு, Pope Francis places his foot on the threshold of our hearts to keep it open அதாவது, "நம் இதயக்கதவு திறந்தவண்ணம் இருக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாதத்தை கதவு நிலையில் வைத்துள்ளார்" என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
Pope Francis signs the Apostolic Letter ‘Misericordia et Misera’

நவம்பர் 20, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொணர்ந்தார். இந்த யூபிலி ஆண்டையொட்டி உலகெங்கும் திறக்கப்பட்டிருந்த பல்லாயிரம் புனிதக் கதவுகளில் இறுதிக் கதவாக, புனித பேதுரு பசிலிக்காவின் முகப்பில் இருந்த புனிதக் கதவை, திருத்தந்தை மூடினார்.
இதைத் தொடர்ந்து, புனித பேதுரு வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்றியத் திருத்தந்தை, திருப்பலியின் இறுதியில், "இரக்கமும் அவலநிலையும்" என்று தலைப்பிடப்பட்ட திருத்தூதுமடலை வெளியிட்டார். புனிதக் கதவுகள் மூடப்பட்டாலும், இரக்கத்தின் யூபிலி ஆண்டு முடிவடைந்திருந்தாலும், இதயக் கதவுகள் திறந்திருக்க வேண்டும்; இரக்கம் நம் வாழ்வில் தொடரவேண்டும் என்பதை, இந்த யூபிலி ஆண்டின் இறுதி நாட்களில், திருத்தந்தை, பலமுறை கூறியுள்ளார். இந்த எண்ணத்தின் வெளிப்பாடாக, திருத்தந்தை, திருத்தூது மடலை வெளியிட்டது, அவர், வாசல் வரை வந்து, கதவு நிலையில் கால் வைத்து நின்று, நமக்கு பரிசளிக்கிறார் என்ற உருவகத்தை நினைவுக்குக் கொணர்கிறது.

திருஅவை வரலாற்றில், திருத்தந்தையர், எழுத்து வடிவில் வெளியிடும் கருத்துக்களில், திருத்தூது மடல் முக்கியமான ஒன்று. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய 'இரக்கமும் அவலநிலையும்' என்ற திருத்தூது மடல், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்டது. கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில், இதற்கு முந்தைய யூபிலி, 2001ம் ஆண்டு, சனவரி 6ம் தேதி நிறைவுற்றபோது, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், "Novo Millennio Ineunte", அதாவது, "புதிய மில்லென்னியத்தின் துவக்கத்தில்" என்ற தலைப்பில், திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டார். 21ம் நூற்றாண்டு, அல்லது, 3வது மில்லென்னியம் என்று அழைக்கப்படும், புதிய மில்லென்னியத்தின் துவக்கத்தில், திருஅவை மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இம்மடலில் கூறியுள்ளார்.
புதிய மில்லென்னியத்தில் திருஅவை, தன் பணிகளை துணிவுடன் மேற்கொள்ள, இன்னும் ஆழத்திற்குச் செல்லவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த, லூக்கா நற்செய்தி 5ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்வை (லூக்கா 5:1-5) திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார். கெனசரேத்து ஏரிக்கரையில் தன்னை நெருக்கிய மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க, ஏரியில் நின்றுகொண்டிருந்த சீமோனின் படகில் ஏறி, இயேசு மக்களுக்கு கற்பிக்கிறார். கற்பித்து முடிந்ததும், சீமோனிடம் ஒரு புதிரான கட்டளையிடுகிறார் இயேசு. அந்த மீனவர்களை, பகல் நேரத்தில் மீன்பிடிக்கும்படி பணிக்கிறார். "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" (லூக்கா 5:4) என்று இயேசு கூறிய அந்தக் கட்டளையை மையமாகக் கொண்டு, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இத்திருத்தூது மடலில் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

பொதுவாகவே, திருத்தந்தையர் வெளியிடும் திருத்தூது மடல்கள், இறையியல் கருத்துக்களையும், மறையுண்மை விளக்கங்களையும் வழங்கும் ஏடுகளாக இருப்பதில்லை. மாறாக, இறைமக்களை, செயல்களுக்கு வழிநடத்திச்செல்லும் அறிவுரை மடல்களாக இருக்கும். புதிய ஏற்பாட்டில், பவுல், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய அனைத்துத் திருத்தூதர்கள் எழுதியுள்ள மடல்களையும் வாசித்தால், அவற்றில், நடைமுறை வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகளே அதிகம் உள்ளன. இந்த வழிமரபில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இரக்கமும், அவலநிலையும்' என்ற திருத்தூது மடல், இரக்கத்தின் இலக்கணம், பண்புகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு கருத்துத் தொகுப்பாக இல்லாமல், நிறைவுற்ற யூபிலியின் தொடர்ச்சியாக, நாம் மேற்கொள்ளவேண்டிய இரக்கப்பணிகள் பற்றிய ஓர் அழைப்பாக அமைந்துள்ளது. இத்திருத்தூது மடலும், யோவான் நற்செய்தியில் இடம்பெறும் ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பமாகிறது.
விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண், இயேசுவுக்கு முன் கொண்டுவரப்பட்ட நிகழ்வை (யோவான் 8:1-11) தன் திருத்தூது மடலின் ஆரம்பமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்துள்ளார். இந்த நற்செய்திப் பகுதியைக் குறித்து புனித அகஸ்டின் வழங்கிய ஒரு மறையுரையில், இந்நிகழ்வின் இறுதியில், அப்பெண் மீது குற்றம் சுமத்திய கூட்டம் அனைத்தும் கலைந்தபின், அங்கு, இயேசுவும், அப்பெண்ணும் மட்டுமே இருந்தனர் என்பதைக் குறிப்பிட, "அவர்கள் இருவர் மட்டுமே அங்கிருந்தனர்: இரக்கமும், அவலநிலையும்" என்று, அச்சூழலை அழகாக விவரித்துள்ளார். புனித அகஸ்டின் கூறிய இந்தக் கூற்றிலிருந்து, "இரக்கமும் அவலநிலையும்" என்ற சொற்களைத் தான் தேர்ந்ததாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மடலின் துவக்கத்தில் கூறியுள்ளார்:
"விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசு சந்தித்த நிகழ்வைக் கூறும் புனித அகஸ்டின், 'இரக்கமும், அவலநிலையும்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார். இறைவனின் அன்பு, ஒரு பாவியை எவ்விதம் தொடுகிறது என்ற மறையுண்மையை விவரிக்க, 'இரக்கமும் அவலநிலையும்' என்று புனிதர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளைவிட இன்னும் அழகாக யாராலும் சொல்லமுடியாது. இரக்கமும், தெய்வீக நீதியும் இந்நிகழ்வில் வெளிப்படுகின்றன. இரக்கத்தின் சிறப்பு யூபிலியின் நிறைவைக்குறித்து மட்டுமல்ல, வருங்காலத்தில் நாம் செல்லவேண்டிய பாதையைக் குறித்தும், இந்நிகழ்வு பாடம் சொல்லித்தருகிறது" என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திருத்தூது மடலை அறிமுகம் செய்துள்ளார்.
இந்த அறிமுக வரிகளைத் தொடர்ந்து, திருத்தந்தை கூறும் வார்த்தைகள், திருஅவையில் இரக்கம் தொடர்ந்து செயலாற்றவேண்டும் என்பதை, மிகத் தெளிவாகக் கூறியுள்ளன.
இரக்கம் நிறைந்த ஒரு காலமாக, இந்தப் புனித ஆண்டு கொண்டாடப்படுவதற்கும், இரக்கம் இனியும் நம் வாழ்வில் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கும், நற்செய்தியின் இந்நிகழ்வு ஓர் அடையாளமாக உள்ளது.
இரக்கம் நிறைந்து வழிந்த காலமாக அமைந்த இந்தப் புனித ஆண்டு, தொடர்ந்து நம் சமுதாயத்தில் கொண்டாடப்படவேண்டும். திருஅவை வாழ்வில், இரக்கம், ஓர் அடைப்புக்குறிக்குள் சிக்கிக்கொண்ட இடைச்செறுகலாக மாறிவிட முடியாது. நற்செய்தியின் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தி, திருஅவையின் உயிர் துடிப்பாக இரக்கம் உள்ளது என்று, திருத்தந்தை ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

ஆணித்தரமான இந்த அழைப்பைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் பிடிபட்ட அந்தப் பெண்ணை இயேசு சந்திக்கும் நிகழ்வுக்கு, தனக்கே உரிய பாணியில் விளக்கம் தந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அவர் கூறியுள்ள விளக்கத்தில், ஒரு சில கருத்துக்கள் நம் இதயத்தைத் தொடுகின்றன:
இந்த நற்செய்தி பகுதி, பாவத்திற்கும், தீர்ப்பிற்கும் இடையே நிகழும் கருத்து சந்திப்பு அல்ல; மாறாக, ஒரு பாவிக்கும், மீட்பருக்கும் இடையே நிகழும் சந்திப்பு... அந்தப் பெண்ணின் பாவம் என்ற அவலம், இரக்கம் நிறைந்த அன்பால் உடுத்தப்பட்டது... அந்தப் பெண்ணைக் கண்டனம் செய்து தீர்ப்பு வழங்க விரும்பியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இயேசு ஒரு நீண்ட மௌனத்தைப் பதிலாகத் தந்தார். அவர் இவ்வாறு செய்ததற்குக் காரணம், அந்த மௌனத்தின் வழியே, அந்தப் பெண்ணின் உள்ளத்திலும், அவரை தண்டிக்கத் துடித்த மற்றவர் உள்ளங்களிலும் இறைவனின் குரல் ஒலிக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். எனவே, மௌனம் காத்தார். நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம், இனிப் பாவம் செய்யாதீர் (யோவான் 8:11) என்று இயேசு கூறும்போது, அந்தப் பெண், தன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கவும், ஒரு புதிய வாழ்வைத் தொடரவும் உதவி செய்கிறார்.
22 பகுதிகள் கொண்ட இத்திருத்தூது மடலில், திருத்தந்தை கூறும் கருத்துக்களை, குறிப்பாக, அவர் பரிந்துரைக்கும் செயல் திட்டங்களை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


18 December, 2016

Life-affirming Dreams வாழவைக்கும் கனவுகள்

Today, December 17, 2016, Pope Francis celebrated his 80th Birthday. We pray the Almighty to shower him with good health of mind and body as well as a long, service-filled life.
Pope Francis – 80th Birthday



St. Joseph's dream, by Philippe de Champaigne

4th Sunday of Advent

Christmas is just around the corner… Next Sunday we celebrate Christmas. ‘Around the corner’ is a lovely expression to add excitement and expectation. I am sure thousands are children are spending these last few days and nights dreaming of their Christmas gifts. They are also dreaming of Santa Claus bringing these gifts to them. Of course, some grown ups are trying the kill these dreams of children, calling those dreams dangerously childish. In general, adults look at dreams as childish. Imagine a world without dreams! It would be unimaginable!
When I began thinking of this week’s reflection, a news headline captured my attention. Terminally-ill boy, five, dies in Santa Claus' arms after fulfilling one last wish to see him from Mail Online. It was reported as happened in a hospital in Tennesse, U.S.A. But later reports raised doubts about the veracity of this news story. Still, the news of a five year old boy dying in the arms of Santa Claus (a gentleman by name Eric Schmitt-Matzen) was moving as well as uplifting. I had to reluctantly delete this story from my reflection.

My attention was equally grabbed by another news items that appeared in various news papers.  
“Indian businessman spends daughter's marriage budget on 90 houses for the homeless”
Ajay Munot, a wealthy wholesale trader of cloth and wheat in the Aurangabad district of eastern India, had planned to spend Rs 70-80 lakh — the equivalent of more than £93,000 — on a lavish wedding for his daughter. But instead, Mr Munot decided to instead spend the money on helping the region's poor. He built 90 houses for the homeless poor. His daughter Shreya and her husband handed over the keys of the houses to the poor. Shreya said that that was the best wedding gift her Dad had given her and that the blessings she received from the poor no money could buy!

When I read this news, I was pleasantly surprised, even stunned to believe it. Why was I stunned? Because, things like this do not happen in the normal world. ‘Normal’ is the catch word! What is normal? To spend lavishly on the wedding is normal, while spending money on such noble deeds sound more like a dream-stuff.
After reading the news, I also glanced through the comments left by readers. The comments began with positive appreciation. Here is a specimen: There is hope for humanity yet! Good luck to the newly weds. What an admirable start!
But, within a few hours, there were comments like these:
Marriage ends in divorce anyway.
Single house units wasting precious land and infrastructure is the wrong way to go anywhere in the world!
I have visited this place. He hand picked Hindu families. He completely ignored the Sikh, Christian or Muslim families.

When we read the occasional positive news from our otherwise negative media, our minds and hearts get elated. But soon the ‘adult’ in us begin to impute reasons and pass judgements, sometimes, very uncharitable. The ‘adult’ in us seems to be fettered by the so called ‘normal’, negative day to day world and refuse to take flights of fantasy or dare to dream!

We are talking of dreams today – dreams of an adult! Yes, today’s Gospel talks of Joseph meeting an angel in his dreams. The New Testament identifies Joseph as ‘the just man’. Joseph is a silent saint. No word of his is recorded in the gospels. Indeed no word was needed, since his whole life was a great Gospel!
Joseph is honoured by the Church as well by popular devotion as the patron and guardian of so many aspects of human life. He is the patron of the Catholic Church, of virgins, of families, of labourers, of immigrants, of holy death and many, many more... I wish to add one more to this list. I wish to honour St Joseph as the guardian and patron of dreams. It is interesting that both Joseph, the Patriarch (in the Old Testament) as well as Joseph, the Husband of Mary (in the New Testament) are portrayed as ‘dreamers’.
Joseph is mentioned in Matthew’s gospel only on three occasions. In all of them, he is portrayed as being visited by the angel of God in his dreams. One of those instances is given as today’s gospel:
Matthew 1: 18-24. Two other instances where Joseph is mentioned, also speak of the angel visiting him in dreams: Matthew 2: 13-14 and Matthew 2: 19-21

Analysis of these three passages will give us good reasons to say that Joseph is indeed the guardian and patron of dreams. Joseph must have felt extremely happy to have been betrothed to Mary, probably the most admired young girl in Nazareth. But his joy was short lived. His dreams of having a glorious life with Mary, came crashing down when he learnt that Mary was pregnant. It was left to him to either make this public or solve this problem more quietly. He decided on the latter. He was a gentleman to the core. If Joseph had decided on making this public, he would have been honoured; but Mary would have faced death by stoning.
As Joseph was struggling to solve this problem, the angel came to him in a dream. If Joseph was a selfish person thinking only of his honour and did not care about Mary, the angel would have found it difficult to enter Joseph’s conscious or subconscious world. God would find it difficult to enter a selfish person’s heart. The more selfless and sensitive a heart, the brighter the chances of divine interventions… not only during waking hours but also during dreams!

On December 15, last Thursday, Pope Francis met around 7000 persons connected with the famous ‘Child Jesus Hospital’ in Rome. During his talk, he referred to the Sunday’s Gospel and elaborated on a life shaped by dreams:
“I would recommend two ingredients (for a Christian life). The first is to keep alive the dreams. Dreams are never anesthetized, here anaesthesia is prohibited! God, I feel in Sunday's Gospel, communicates sometimes through dreams; but above all God invites us to realize big dreams, even if difficult. … I like to think that God has dreams for each of us. A life without dreams is not worthy of God; a life weary and resigned, without enthusiasm is not a Christian life.
“I would add a second ingredient, after the dreams: the gift. One can live chasing two different goals: with primary emphasis on having or giving. … We are always faced with this dilemma: on the one hand to do something for one’s own interests, to success, to be recognized; on the other, follow the intuition to serve, to give, to love… Every day you can leave the house with the heart a little 'inward looking, or with an open heart, ready to meet, to donate. It gives much more joy to live with an open heart than with closed hearts! Do you agree? I wish you a Christmas as well, to live with an open heart, preserving this beautiful family spirit, and thank you so much.”

All human beings dream. Then why make Joseph the patron of dreams? I can think of two reasons. There could surely be more.
Reason 1: Joseph was capable of interpreting his dreams as good news even during his agony. For many of us this may not be easy. When we are hemmed in by trials all around us, we tend to lose our normal, day to day activities, especially our sleep. Even if we manage to get some sleep, we may get more nightmares than dreams. Joseph must have been in such a predicament after learning that Mary was pregnant. Still, he recognised his dreams as divine promptings and interventions. Only persons without deceit, persons who are just, are capable of this. Don’t we wish we could be like Joseph?
Reason 2: It is easy to dream dreams; but not easy to act on them. In all the three gospel passages we cited, Joseph woke up from sleep and followed the instructions from the angel. If these instructions were easy, cosy things, then we won’t mind following them. Easy, cosy instructions are dictated to us through our ‘commercial dreams’… a cream would change our complexion in a matter of days, or a toothpaste would make our friends flock around us all the time. We tend to follow these dreams, don’t we? The instructions that Joseph received in his dreams were demanding, tough decisions – taking a pregnant woman as his wife, taking a baby and his mother at night and travelling to a strange land… Don’t we wish we could be like Joseph? Don’t we wish to honour St Joseph, the Patron of dreams?

By recognising his dreams as divine promptings, and by taking concrete actions on his dreams, Joseph saved not only Mary and Jesus, but also saved the world by letting the Saviour become ‘Emmanuel’ among us! May St Joseph, the Patron of Dreams, help us dream dreams and be ready to pay the price to make them come true!

Pope Francis blessing sick children from Bambin Gesu Hospital
திருவருகைக்காலம் - 4ம் ஞாயிறு

அடுத்த ஞாயிறு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. ஒரு குழந்தையை மையப்படுத்திக் கொண்டாடப்படும் இவ்விழா, பல கோடி குழந்தைகள் மனதில் கனவுகளை வளர்க்கும் விழா. இவ்விழாக் காலத்தில் தனக்குக் கிடைக்கப்போகும் பரிசைப் பற்றியக் கனவுகள், பலகோடி குழந்தைகளின் உள்ளங்களில் அலைமோதும். அந்தப் பரிசை வழங்கப்போவது கிறிஸ்மஸ் தாத்தா என்ற கனவையும், குழந்தைகள் சுமந்து வாழ்கின்றனர். குழந்தைகளின் இத்தகையக் கனவுகள் அர்த்தமற்றவை, ஆபத்தானவை என்று அறிவுரைகள் வழங்கும் பெரியவர்களையும் நாம் காணலாம். பொதுவாகவே, கனவுகள் காண்பதும், கனவுலகில் வாழ்வதும் குழந்தைத்தனம் என்பது, வயதில் வளர்ந்துவிட்ட பலரின் தீர்ப்பு. கனவுகள் இன்றி மனுக்குலம் இதுவரை வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சென்ற ஞாயிறு, பாலை நிலம் பூத்துக் குலுங்கும் என்று, இறைவாக்கினர் எசாயா, கற்பனை கலந்து கண்ட கனவைப் பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, மீண்டும் கனவைப் பற்றி சிந்திக்க வந்திருக்கிறோம். குறிப்பாக, கனவுக்கு செயல் வடிவம் கொடுப்பதுபற்றியும், அவ்விதம் செயல்வடிவம் கொடுப்பதற்கு நம்மிடம் உள்ள தடைகள் பற்றியும் சிந்திக்க வந்திருக்கிறோம். நமது சிந்தனைக்குத் துணையாக, கடந்த வாரம் நிகழ்ந்த இரு செய்திகளை நினைவுக்குக் கொணர்வோம்.

முதல் செய்தி, ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்ந்தது - ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்த முர்தாசா அஹ்மாதி (Murtaza Ahmadi) என்ற ஆறு வயது சிறுவன், உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர், இலயனல் மெஸ்ஸி (Lionel Messi) அவர்களைச் சந்தித்தான்.
இரண்டாவது செய்தி, இந்தியாவில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நிகழ்ந்தது - தன் மகளின் திருமண பரிசாக, ஒரு செல்வந்தர், 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தந்தார்.

முதல் செய்தியில் கூறப்பட்டுள்ள சிறுவன் முர்தாசா, ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்தவன். உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர், மெஸ்ஸி அவர்களின் தீவிர இரசிகன். பிளாஸ்டிக் பை ஒன்றை, கால்பந்தாட்ட பனியன் போலச் செய்து, அதில் மெஸ்ஸி என்ற பெயரையும், 10 என்ற எண்ணையும் எழுதி, அச்சிறுவன் உடுத்தியிருந்த புகைப்படம், மெஸ்ஸியின் இரசிகர் வட்ட வலைத்தளத்தில் பதிவாகி, உலகெங்கும் வெகு வேகமாகப் பரவியது. அதன் விளைவாக, அச்சிறுவன், தன் கனவில் கண்டுவந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களை, டிசம்பர் 13, கடந்த செவ்வாய், கட்டார் நாட்டில் நிகழ்ந்த ஒரு கால்பந்தாட்ட விளையாட்டில் சந்தித்தான்.

இரண்டாவது செய்தி, இந்தியாவில் நிகழ்ந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரைச் சேர்ந்த மனோஜ் முனோத் (Manoj Munot) என்ற செல்வந்தர், தன் மகளின் திருமணச் செலவைக் குறைத்துக்கொண்டு, அத்தொகையில், 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார். அவரது மகள், ஷிரேயாவும், அவரது கணவரும் இணைந்து, அந்த ஏழைகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்கினர். "என் தந்தை எனக்களித்த மிகப் பெரிய திருமணப் பரிசு இதுதான். வறியோர் எங்களுக்குத் தந்த ஆசீர்வாதங்களை, எவ்வளவு பணம் தந்தாலும் எங்களால் வாங்கியிருக்க முடியாது" என்று மணப்பெண் ஷிரேயா கூறினார்.

இந்த இரு செய்திகளும், அவை நமக்குள் உருவாக்கும் பல்வேறு  எண்ணங்களும் சில பாடங்களைப் புகட்டுகின்றன. முதல் செய்தியில் நாம் சந்திக்கும் முர்தாசா, வறுமையும், ஆபத்தும் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்த சிறுவன். அச்சிறுவனின் குடும்பம், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பித்து, வேறொரு நாட்டிற்குப் புலம்பெயர்ந்த குடும்பம் என்றும் சில செய்திகள் கூறுகின்றன. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களைப் பற்றி, தன் மனதுக்குள் வளர்த்துக்கொண்ட கனவுகளே, அச்சிறுவன் சந்தித்த வேதனைகளிலிருந்து அவனை ஓரளவு காத்தது என்று சொல்லலாம். சிறுவன் முர்தாசா, தன் கனவு நாயகனைக் கண்டான் என்பதை மகிழ்வுடன் எண்ணிப் பார்ப்பவர்கள் உண்டு. ஒரு சிலரோ, அச்சிறுவன் பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியது தவறு என்ற பாணியில் விமர்சனம் கூறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

செல்வந்தர் மனோஜ் அவர்கள், ஏழைகளுக்கு வீடுகட்டித் தந்த நற்செயலை, பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க முடியும். இந்தியாவில், பணத்தட்டுப்பாடு உருவானபின்பு, ஓர் அரசியல்வாதி, கோடி கோடியாகச் செலவு செய்து, தன் மகளின் திருமணத்தை நடத்தினார் என்ற செய்தி வெளியான சில வாரங்களில், மனோஜ் அவர்களைப்பற்றிய இந்தச் செய்தியும் வெளியானது.
பிரித்தானிய நாளிதழ் ஒன்று (The Independent) இச்செய்தியை வெளியிட்டதும், ஆரம்பத்தில், மனோஜ் அவர்களைப் பாராட்டி, வாழ்த்தி, வாசகர் கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால், சிறிதுநேரம் சென்று, எதிர்மறையான கருத்துக்களும் வெளிவந்தன. "இதுபோன்ற செல்வந்தர்களின் திருமணம், பெரும்பாலும் விவாகரத்தில்தான் முடிகின்றனஎன்று ஒருவரும்,இப்படி, சிறு, சிறு வீடுகளை கட்டி, நிலத்தை வீணாக்குவதைவிட, அடுக்குமாடி அமைப்பில் கட்டியிருந்தால் நல்லதுஎன்று மற்றொருவரும்அந்த இடத்தைச் சென்று பார்த்தேன். அங்கு, இந்துக்களுக்கு மட்டுமே வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை" என்று வேறொருவரும், எதிர்மறை கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

நல்ல செய்திகளைக் கேட்கும்போது, முதலில் நம் உள்ளங்களில் நல்ல எண்ணங்களும், அதிர்வுகளும் உருவாகின்றன. ஆனால், நாம் அறிவிலும் வயதிலும் முதிர்ந்தவர்கள் என்ற கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்ததும், சந்தேகங்கள், விமர்சனங்கள், எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை எழுகின்றன. வயது வந்தவர்கள் என்ற காரணத்தால், நம்மில் பலர், கனவுகளுக்கு முக்கியத்துவம் தராமல் வாழப் பழகிக்கொள்கிறோம்.

கனவுகளைப்பற்றி, இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம்... இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் புனித யோசேப்பு. மரியாவின் கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். அவரை, வாழ்வின் பல நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகிறோம். திருஅவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர்... என்று பலவழிகளில் பெருமைப்படுத்துகிறோம். மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். புனித யோசேப்புவை, கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம்.
மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்ட கனவுகள் பற்றி மூன்றுமுறை கூறப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த மரியாவை ஏற்பதா, விலக்கிவைப்பதா என்று யோசேப்பு போராடிக்கொண்டிருந்த வேளையில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி, அவருக்கு, கனவில் ஒரு செய்தி வருகிறது. இந்நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. (மத். 1: 18-24) கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து, குழந்தை இயேசுவைக் கண்டு திரும்பிய பின்னர், யோசேப்புவின் கனவில் தோன்றிய வானதூதர், அவரை எகிப்திற்கு ஓடிப்போகச் சொல்கிறார். இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளம் குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு யோசேப்பு எகிப்துக்குச் செல்கிறார். (மத். 2: 13-14) எகிப்தில் அகதிகளாய் இவர்கள் வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான். மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்திவர, அவர் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்புகிறார். (மத். 2: 19-21)

இம்மூன்று சம்பவங்களையும் ஆழமாகச் சிந்தித்தால், ஒருசில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வை முதலில் சிந்திப்போம். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒரு சில நாட்களில், மரியா கருவுற்றிருந்தார் என்ற கசப்பான, பேரிடியான உண்மை யோசேப்புவுக்குத் தெரியவருகிறது. இச்சூழலில், யோசேப்பு, தன் பெயரை, தன் பெருமையை மட்டும் காப்பாற்ற நினைத்திருந்தால், ஊர் பெரியவர்களிடம் இதைத் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தால், தன்னைக் காப்பாற்றியிருப்பார். மரியாவோ ஊருக்கு நடுவே, கல்லால் எறியப்பட்டு, கொடூரமாய் கொலையுண்டிருப்பார்.

இந்தச் சிக்கலான சூழலில், யோசேப்புவின் கனவில் ஆண்டவரின் தூதர் தோன்றினார் என்கிறது இன்றைய நற்செய்தி. தன்னை நீதிமான் என்று ஊரில் நிலைநாட்டினால் போதும், மரியா எக்கேடுகெட்டாகிலும் போகட்டும் என்ற சுயநலக் கோட்டைக்குள் யோசேப்பு வாழ்ந்திருந்தால், இறைவனின் தூதர் அவரை நெருங்கியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான். சுயநல மனங்களில் கடவுள் நுழைய நினைத்தாலும், அவரால் முடியாது. மென்மையான மனங்களில் மேலான எண்ணங்களும், கனவுகளும் தோன்றும். அப்படித் தோன்றிய ஒரு கனவையே இன்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இந்தக் கனவில் யோசேப்புவுக்கு இறைவன் தந்த செய்தியை நாம் இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்: யோசேப்பே, தாவீதின் மகனே, சட்டங்களை, சமுதாயக் கட்டுப்பாடுகளை மட்டும் மனதில் எண்ணிக் குழம்பாதே. அவற்றையும் தாண்டி, மனிதாபிமானத்தோடு நடந்துகொள். இவ்வாறு நீ நடந்தால், உன்னையும் மரியாவையும் மட்டுமல்ல. இவ்வுலகையும் காப்பாற்றும் வழியொன்றை நீ திறப்பாய்என்பது, யோசேப்பு கனவில் பெற்ற செய்தி என்று நாம் சிந்திக்கலாம்.

சுயநலனைக் கடந்து, அடுத்தவர் நலனை முன்னிறுத்துவோர் உள்ளங்களில் கனவுகள் தோன்றும்; அக்கனவுகள், செயல்வடிவமும் பெறும் என்பதை, புனித யோசேப்புவின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியை பின்புலமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 15 இவ்வியாழனன்று சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். உரோம் நகரில், குழந்தைகள் நலனுக்கென இயங்கிவரும் புகழ்பெற்ற குழந்தை இயேசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள், நோயுற்ற குழந்தைகள், அவர்களது குடும்பத்தினர், மருத்துவமனைக்கு உதவிகள் செய்வோர் என்று, ஏறத்தாழ 7000 பேரை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை சந்தித்தபோது, கனவுகளைப் பற்றி இவ்வாறு பேசினார்: "கனவுகளை, உயிர் துடிப்புடன் வாழவைக்க வேண்டும். கனவுகளுக்கு மயக்கமருந்து கொடுக்கக்கூடாது" என்று கூறியத் திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வழியே கனவுகள் பற்றிய பாடங்களை, இறைவன் நமக்குச் சொல்லித் தருகிறார் என்று தொடர்ந்தார்:
"கனவுகள் கடினமாக இருந்தாலும், அவற்றை நனவாக்க, நடைமுறை வாழ்வாக்க, இறைவன் அழைக்கிறார். இறைவன் நம் ஒவ்வொருவரையும் குறித்து கனவு காண்கிறார். கனவுகள் இல்லாத வாழ்க்கை, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை அல்ல. உற்சாகமற்ற, சோர்ந்துபோன வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வு அல்ல" என்று வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, கனவுகளுடன் தொடர்புள்ள மற்றோர் அம்சத்தைக் குறித்தும் பேசினார்: "கனவுகளைத் தொடர்ந்து வருவது, பரிசு. வாழ்வில் இருவகை இலக்குகளை நாம் துரத்திச் செல்லமுடியும். ஒன்று, மேலும், மேலும் நமக்கென சேகரித்து வைத்துக் கொள்வது; மற்றொன்று, தருவது. ஒவ்வொருநாள் காலையிலும் வீட்டைவிட்டு வெளியேறும்போது, நமது உள்ளம் நம்மைச் சுற்றியே வட்டமிடுகிறதா, அல்லது, மற்றவர்களைச் சந்திப்பது, பிறருக்குத் தருவது என்ற திறந்த மனநிலையில் உள்ளதா?" என்ற கேள்வியை எழுப்பினார், திருத்தந்தை.

எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்புவும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்களை எண்ணிப்பார்க்கலாம்.
முதல் காரணம் : அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச் சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும், கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை, நற்செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக, யோசேப்பைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.
இரண்டாவது காரணம் : யோசேப்பு தன் கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு க்ரீமைப் பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும்  நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?

ஆனால், யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும் கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு யோசேப்பை உந்தித் தள்ளிய சவால்கள்... திருமணத்திற்கு முன்னரே கருவுற்ற பெண்ணை, தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது; ஏரோதின் பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும், தாயோடும், எகிப்துக்கு ஓடிச்செல்வது; மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது... என்று யோசேப்புவுக்கு வந்த எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன. இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவற்றை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது. சிக்கலானச் சூழல்களின் நடுவிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதால், அக்கனவுகளில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று நாம் கொண்டாடலாம்.

1963, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே நல்லுறவு வளரும் என்பதை, "எனக்கொரு கனவு உண்டு" (I have a dream) என்ற உலகப்புகழ்பெற்ற உரையாக வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களையும், அதே கனவு, தென்னாப்ரிக்காவில் நனவாகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து, அந்தக் கனவைப் பெருமளவு நனவாக்கி, 2013ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி, புகழுடல் எய்திய நெல்சன் மண்டேலா அவர்களையும், ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்ல, சாதியப் பிரிவுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய தளைகளிலிருந்தும் இந்தியா விடுதலை பெறவேண்டுமென்று கனவுகள் கண்டு, அவற்றை கவிதைகளாக விட்டுச்சென்ற மகாகவி பாரதியார் அவர்களையும் வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. கனவு காணவும், அக்கனவை நனவாக்கவும் துணிபவர்கள் வாழ்வதால்தான், இவ்வுலகம் இன்றும் வாழ்ந்து வருகிறது.

கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி, செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும் மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை 'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகள் காண்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!