28 June, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 28


Modern-Day Slavery

Human Trafficking and Modern Day Slavery

மன்னிப்பின் அவசியத்தை வலியுறுத்த இயேசு கூறிய 'மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை'யில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. பத்தாயிரம் தாலந்துகள், கடன்பட்டிருந்த பணியாளர் அரசரிடம் கொண்டுவரப்பட்டார். அந்தக் கடனை ஈடுசெய்வதற்கு, அந்தப் பணியாளர், அவரது மனைவி, மக்கள், அனைவரையும் விற்கச் சொல்லி அரசர் ஆணையிட்டார் என்று இந்த உவமையின் முதல் பகுதியில் வாசிக்கிறோம்.
கடனை மீண்டும் தரமுடியாத பணியாளரும், அவரது குடும்பத்தினர் அனைவரும் விற்பனைப் பொருளாகவேண்டும் என்று அரசர் விடுத்த கொடுமையான ஆணை, இன்றைய உலகில் நிலவும் அவலங்களை நம் மனக்கண்முன் கொணர்கிறது. தனி மனிதர்களும், அவர்கள் குடும்பத்தினரும் விற்பனை செய்யப்படுவது, தலைமுறை தலைமுறையாகக் கொத்தடிமைத் தொழில் செய்வது போன்ற கொடுமைகள் 21ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றன. தனி மனிதர்களைப் போல, வறுமைப்பட்ட நாடுகளும் கடன்பட்டு கலங்கி நிற்பதை சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். சில நாட்களுக்கு முன், பிரித்தானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவை எட்டியபோது, பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள், பூகம்பங்கள் ஆகியவற்றை அறிவோம். பண பரிமாற்றங்கள் உலக அரசுகளை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைக்கின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

2015ம் ஆண்டு, சனவரி முதல் தேதி, புத்தாண்டு நாளன்று கொண்டாடப்பட்ட 48வது உலக அமைதி நாளுக்கென, "இனி ஒருபோதும் அடிமைகள் அல்ல, உடன்பிறப்புக்களே" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை வெளியிட்டார். இச்செய்தியில், அடிமைத்தனத்தின் வரலாறு, அதன் இன்றைய நிலை, அதனை அறவே ஒழிக்கும் வழிகள் என்ற கருத்துக்களைப் திருத்தந்தை பகிர்ந்துள்ளார். 'அடிமைத்தனத்தின் பல்வேறு முகங்கள் - நேற்றும், இன்றும்' என்ற பகுதியில், வளர் இளம் பருவத்தினர்சிறுவர், சிறுமியர், குழந்தைகள் ஆகியோர் இன்று எவ்வாறெல்லாம் அடிமைகளாக்கப்படுகின்றனர் என்று, திருத்தந்தை சுட்டிக்காட்டும் கொடுமைகள், வேதனையைத் தருகின்றன. உடல் உறுப்புக்களின் வர்த்தகம், சிறார் இராணுவப்பணி, தர்மம் கேட்கும் தொழில், போதைப்பொருள் கடத்தல், தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக்கப்படுதல் என்பவை, திருத்தந்தை சுட்டிக்காட்டும் சில கொடுமைகள்.
திருத்தந்தை அவர்கள் பட்டியலிடும் இந்தக் கொடுமைகளைக் கேட்கும்போது, இறைவாக்கினர் ஆமோஸ், இஸ்ரயேல் மக்களைப் பற்றி கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன:
இறைவாக்கினர் ஆமோஸ் 2: 6-7
ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள். ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்: ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்.

பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் மனநிலையும், தவறான கொள்கைகளால் போரிலும், மோதல்களிலும் ஈடுபடும் அடிப்படைவாத உணர்வுகளும் அடிமைத்தனம் வளர்வதற்கு முக்கிய காரணங்கள் என்று, உலக அமைதி நாளுக்கென வழங்கியுள்ள செய்தியில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நவீன அடிமைத்தனம்' செழித்து வளர்வதற்கு மிக முக்கியக் காரணமாகக் கூறுவது, பொதுமக்களாகிய நாம் காட்டும் 'அக்கறையின்மை'. அடிமைத்தனம் ஓர் உலகளாவியப் பிரச்சனை என்று சொல்லிவிட்டு, நாம் அனைவரும் அக்கறையின்றி ஒதுங்கிவிடுவதால், இக்கொடுமை, மனித சமுதாயத்தில் புரையோடிப்போனப் புண்ணாக மாறியுள்ளது என்று இச்செய்தியில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள் என்ற அனைத்துத் தளங்களிலும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தந்தை இச்செ.ய்தியில் விண்ணப்பித்துள்ள அதேவேளையில், தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்யமுடியும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். எடுத்துக்காட்டாக, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்குவதில் நாம் எடுக்கும் முடிவுகள், நவீன அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு உதவும் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளது, நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.
நாம் பொருள்களை வாங்க முடிவு செய்யும்போது, அது வெறும் பொருளாதார அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு அல்ல; கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்புலத்தில், குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் பொருள்களுக்குப் பின்புலத்தில், அதிர்ச்சி தரும் உண்மைகள் புதைந்துள்ளன. மிகக் குறைந்தக் கூலிக்கு, அநியாயமாகக் கசக்கிப் பிழியப்படும் மனித உழைப்பு, பல மணிநேரங்கள் ஓரிடத்தில் அமர்ந்தபடி பொருள்களை உருவாக்கவேண்டும் என்பதற்காக, குழந்தைகள், சங்கிலியால் பிணைக்கப்பட்டு துன்புறுதல் போன்றவை, ஒரு சில கசப்பான உண்மைகள்.
கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்படும் இந்த அவல வரலாற்றின் பக்கங்களை அறிந்திருந்தும், நாம் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களை வாங்குவதையே, நமது 'அக்கறையின்மை' என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். இரத்தக்கறை படிந்த இப்பொருள்களை நாம் வாங்க மறுக்கும்போது, ஏதோ ஒருவகையில், இந்த அடிமைத்தனத்தை ஒழிக்க முயல்கிறோம் என்பது, திருத்தந்தை நமக்கு முன் வைக்கும் ஓர் அழைப்பு, ஒரு சவால்!

உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை (Globalised indifference) என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல்வேறு நேரங்களில் கூறிவரும் கருத்து. உலக அமைதி நாள் செய்தியின் இறுதியில், அக்கருத்தை மீண்டும் ஒருமுறை கூறி, உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மைக்கு ஒரு மாற்று மருந்தாக, 'நாம் அனைவரும் உடன்பிறப்புக்கள் என்ற உணர்வை உலகமயமாக்குவோம்' என்ற அழைப்பையும் உலக அமைதி நாள் செய்தியில் திருத்தந்தை விடுத்துள்ளார்.

திருத்தந்தையின் உலக அமைதி நாள் செய்தி, 2014ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி, மனித உரிமைகள் நாளன்று வெளியானது, மிகப் பொருத்தமாக இருந்தது. அதற்கு முன்னதாக, டிசம்பர் 2ம் தேதி, அடிமைநிலை ஒழிப்பு உலக நாள் கடைபிடிக்கப்பட்ட வேளையில், வத்திக்கானில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு நடைபெற்றது. அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், உலகின் சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து, 2020ம் ஆண்டுக்குள் நவீன அடிமைமுறையை ஒழிப்போம் என்ற அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற இத்தகைய நிகழ்வில், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவர் பேராயர் Justin Welby, கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் பிரதிநிதி, இந்து மதம் சார்பில் இந்தியாவிலிருந்து வந்திருந்த மாதா அமிர்தானந்தமயி, உட்பட 13 சமயத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மனித வர்த்தகம், பாலியல் தொழில், கட்டாயத் தொழில்முறை போன்றவை மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றம் என, துணிவாக, தெளிவாகக் கூறியதுடன், தங்கள் தலைமைத்துவ பொறுப்பைப் பயன்படுத்தி, தாங்கள் வாழும் சமூகங்களில் இவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சமயத் தலைவர்கள் உறுதி எடுத்தனர். நவீன அடிமைத்தனத்தில் தற்போது சிக்குண்டிருப்பவர்களை 2020ம் ஆண்டுக்குள் மீட்பதற்கும் இத்தலைவர்கள் உறுதி கூறினர். Global Freedom Network (GFN) என்ற அமைப்பின் முயற்சியால் இந்நிகழ்வு நடைபெற்றது. இவ்வமைப்பின் கணிப்புப்படி, நவீன அடிமைமுறையில் ஏறக்குறைய 3 கோடியே 60 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் எனத் தெரிகிறது.

நாம் தேடலை மேற்கொண்டுள்ள உவமைக்குத் திரும்புவோம். தன்னையும், தன் மனைவி, மக்களையும் விற்பனைப் பொருளாக்கவேண்டும் என்று அரசர் ஆணையிட்டதும், "உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்" (மத்தேயு 18: 26-27) என்று இவ்வுவமையின் முதல் பகுதி நிறைவு பெறுகிறது.
அரசர் இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்தால், அவரது கடனைத் திருப்பித் தந்துவிடுவதாக பணியாள் வேண்டுகிறார். பத்தாயிரம் தாலந்துகள் கடனை பத்தாயிரம் ஆண்டுகள் சென்றாலும் தன் பணியாளரால் திருப்பித் தரமுடியாது என்பது அரசருக்குத் தெரிந்தது. அப்பணியாள் தன் காலில் விழுந்து பணிந்தது, அரசரைப் பாதித்திருக்க வேண்டும். எனவே, அப்பணியாள் வேண்டிக்கேட்ட பொறுமையையும் தாண்டி, ‘அவரது கடன் முழுவதையும் அவர் தள்ளுபடி செய்தார்.

தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழி நமக்கு நினைவிருக்கலாம். அதாவது, தலையைத் தாக்கவந்த அம்போ, வாளோ தலைப்பாகையை மட்டும் தாக்கிச் சென்றது என்ற பொருளைத் தருகிறது, இந்தப் பழமொழி. ஆனால், இங்கு நடந்தது என்ன? அரசர் கொண்ட பரிவின் காரணமாக, தலையை வெட்டவந்த வாள், தலைப்பாகையை எடுத்துவிட்டு, ஒரு மகுடத்தை அந்தப் பணியாளரின் தலையில் சுமத்திச் சென்றது.  கழுத்தை இறுக்கி, உயிரைப் பறிக்கவந்த தூக்குக் கயிறு, திடீரென ஒரு மாணிக்க மாலையாக மாறி, கழுத்தை அணிசெய்தது. அரசர் காட்டிய இரக்கத்தைக் கண்டு, அந்தப் பணியாளர், நன்றி உணர்வில் மூழ்கி, மூச்சிழந்து, பேச்சிழந்து மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அவ்விதம் நடக்கவில்லை. இந்த அற்புத நிகழ்வையடுத்து அங்கு நடந்ததை, இவ்வுவமையின் இரண்டாம் பகுதி விவரிக்கின்றது. இதனை நமது அடுத்தத் தேடலில் தொடர்வோம்.



26 June, 2016

Putting the hand to the plough... கலப்பையில் கைவைத்தபின்...



Following Jesus
13th Sunday in Ordinary Time

A few years back, one of my friends told me this sad episode. A new Tamil movie was released the previous week featuring a popular actor. Usually films are released on Fridays, right? On Thursday night one of the youngsters, who was a die-hard fan of this actor, spent the whole night pasting posters for the movie throughout the town. Early next morning, this young man was standing in the long queue for the first-day-first-show ticket, almost for three to four hours, unmindful of the scorching heat of May. No sleep, no food… He got his ticket and then reality set in. He felt hungry and drowsy. He did not want to miss the first show. So, he decided to get some tea just across the road. As he was crossing the road, he fainted and a speeding lorry ran over him. He died on the spot. Sad… really sad…
Did this really happen? Not very sure. But, dear friends, all of us know that similar incidents CAN HAPPEN and HAVE HAPPENED quite many times in India. Only in India? Again, not so sure. We in India display our hero worship in a way unparalleled in the rest of the world. We know the amount of frenzy that can set in when a movie star or a cricket star appears in public. Sometimes, such frenzy turns into madness and violence can result. How many lives have been lost due to this madness / violence! More so in the area of politics. There have been immolations and murders committed for political leaders.
Why are we talking of all these now? The Gospel today (Luke 9: 51-62) talks about Jesus, the leader and his followers.

This Gospel passage talks of four incidents. All the four can teach us lessons for life. The first one is about the disciples – James and John. Jesus, on his way to Jerusalem, was not received well in a town. James and John were seething with rage. They wished to bring down fire from heaven to destroy the town. A fitting lesson to those people who should have known better. For James and John, the sons of thunder, hurling thunder and lightning, fire and brimstone, from heaven must have been child’s play! Moreover, they were the ones who wanted to be seated at the right and left of the Lord. (Mt. 20: 20-21)
I am just wondering what our political leaders would have done in a situation like this. Here are two very energetic, enthusiastic followers who are willing to go the full distance – destroying a town for not giving due respect to their leader. Our leaders would have been thrilled to have such sycophants and, in all probability, given them some important portfolios in the ministerial cabinet. Thank God, Jesus is not like them. He turned to his disciples and rebuked them. He was probably very angry with them, since they wanted to use heavenly powers for destruction.
How easy it is to use power for destruction! It is painful that our political leaders seem to judge loyalty in terms of how much destruction can be wrought by the followers. They don’t stop there… When natural calamities occur, they capitalise on them to gain political mileage. In the recent floods that destroyed many parts of Tamil Nadu, our leaders played politics without any shame.

The second incident is about a person who wanted to follow Jesus wherever he went. Jesus must have turned around and looked at this person with deep love and concern. The word ‘wherever’ used by the young man must have grabbed the attention of Jesus. Where was Jesus going? To Jerusalem. As the opening lines of today’s Gospel says, he was determined to go to Jerusalem, probably knowing what was awaiting him there. He was going for a head-on collision with political and religious authorities. At that moment, should he encourage another disciple to follow him? That was the concern of Jesus.
Inadvertently, my mind goes to the present day political leaders who would be more concerned in taking along more followers especially during a clash. In the ego clashes that occur between big leaders, the followers get hurt and killed. As an Indian, I feel ashamed of having such power mongers. I am more ashamed of the followers who have such blind loyalty to these leaders.
Jesus tries to tell this person what would be awaiting him if he were to follow him ‘wherever he goes’. There is really nowhere… “Foxes have holes, and birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head.” (Luke 9:58) This statement from Jesus is more of an invitation to share his vagabond life. How many of us really believe that all human beings are only PILGRIMS on earth?

The third and fourth incidents are similar. Two persons want to fulfil their family duties BEFORE following Jesus. At first glance, the response of Jesus seems rather rude. “Don’t bother about burying your parents or saying goodbye to the family members… Just plunge into action. Follow me HERE and NOW. No delays.”
The reference of Jesus to the man with a plough, reminds me of the first reading today – taken from the First Book of the Kings 19: 19-21. The incident narrated in this passage is quite dramatic:
Elijah went from there and found Elisha son of Shaphat. He was ploughing with twelve yoke of oxen, and he himself was driving the twelfth pair. Elijah went up to him and threw his cloak around him. Elisha then left his oxen and ran after Elijah. "Let me kiss my father and mother good-by," he said, "and then I will come with you." "Go back," Elijah replied. "What have I done to you?"
So Elisha left him and went back. He took his yoke of oxen and slaughtered them. He burned the ploughing equipment to cook the meat and gave it to the people, and they ate. Then he set out to follow Elijah and became his attendant.

From this passage it is not clear whether he was allowed to say goodbye to his parents. But, it is quite clear that he said a definitive goodbye to his earlier life. He slaughtered his oxen, burnt his ploughing equipment… In 1519, Capitan Hernando Cortez  and his followers left Cuba and landed in Mexico. In order to motivate his followers to face all the hardships of Mexico and not think of Cuba again, Captain Cortez burnt the ship in which they reached Mexico. The English expression “burning the boats” may have stemmed from this incident. Cortez burning the ship was more of a compulsion imposed on the followers, whereas Elisha burning the ploughshare was a spontaneous, courageous act of a follower.

Following Jesus, the real leader, requires a HERE-and-NOW decision. If not, we may be submerged in the flood of cares and concerns of this world. We may also begin to drift along with the flood, namely going with the crowd!
Pope Francis, in one of his Angelus messages made this appeal specially to the youth present in St Peter’s Basilica:
Dear brothers and sisters, remember this well: Do not be afraid to go against the current! Be courageous! And like this, just as we do not want to eat food that has gone bad, we will not carry with us rotten values, that ruin life and take away our hope. Forward!

We know of the famous saying ‘Justice delayed, is justice denied.’ Similarly, I feel that delaying to act on an inspiration is denying it. Today is a gift and that is why we call it the ‘present’. Let us make use of this gift properly. “If today you hear his voice, harden not your hearts…” (Ps.95: 7-8)


Following Jesus
பொதுக்காலம் - 13ம் ஞாயிறு

சில ஆண்டுகளுக்கு முன், என் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட வேதனையான நிகழ்ச்சி இது. தமிழில் ஒரு புதுத் திரைப்படம் வெளியாவதற்கு முந்தின நாள், அந்தத் திரைப்படத்தின் விளம்பரச் சுவரொட்டிகளை இரவு முழுவதும் ஒட்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். அடுத்த நாள், அந்த ஹீரோவின் படத்தை முதல் காட்சியில் பார்க்கும் ஆர்வத்தில் (வெறியில்??) கோடை வெயிலில், பல மணி நேரம் வரிசையில் நின்று, டிக்கட் வாங்கிவிட்டார். முதல் காட்சிக்கு டிக்கட் பெறும்வரையில் அவர் அவராகவே இல்லாததால், பசி, உறக்கம் என்ற தன் தேவைகள் அனைத்தையும் மறந்திருந்தார். டிக்கட் வாங்கிய பிறகுதான் அவருக்கு தன் உடல் பசி தெரிந்தது. காட்சி ஆரம்பமாவதற்குள், ஒரு டீயும், பன்னும் சாப்பிடலாம் என்று அவர் அந்தத் திரை அரங்கத்தின் முன் இருந்த கடைக்குச் செல்ல, சாலையைக் கடக்கும்போது, மயக்கத்தில் தடுமாறி, அந்தப் பக்கம் வேகமாக வந்த ஒரு லாரியில் அடிபட்டு... அந்த இடத்திலேயே இறந்தார்.
இரசிகர்கள் என்ற பெயரில், சினிமா நடிகர்களுக்காக, அல்லது விளையாட்டு (கிரிக்கெட், கால் பந்தாட்டம்) வீரர்களுக்காகக் கூடும் கூட்டத்தைப் பார்த்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் காணப்படும் ஆர்வம், சில சமயம் வெறியாக மாறும்போது, அங்கு வெடிக்கும் வன்முறைகளில் ஒரு சில உயிர்கள் பறிபோயுள்ளன. இது, பல நாடுகளிலும் காணப்படும் அவலம்.
சினிமா, விளையாட்டு இவற்றால் அழியும் உயிர் பலிகளைவிட, அரசியல் விளையாட்டில் இன்னும் அதிகமாக உயிர்கள் பலியாவதை இந்தியாவில் பார்த்து வருகிறோம். அரசியல் தலைவர்களுக்காகத் தீ குளிப்பது, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்வது... என்று நடக்கும் உயிர் பலிகள் நம்மை நிலை குலைய வைக்கின்றன.

தலைவன், தொண்டன், உயிர்பலி இவற்றைப்பற்றி ஏன் இந்த விவாதம்? இன்றைய நற்செய்தி, இயேசு என்ற தலைவனையும், அவரைத் தொடரும் சீடர்களையும், தொடர விழையும் ஏனைய இளையோரையும் மையப்படுத்தி அமைந்துள்ளது. லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் நாம் வாசிக்கும் இப்பகுதியில், நான்கு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்விலும் நமக்குத் தேவையான பல பாடங்கள் உள்ளன.

முதல் நிகழ்வு, இயேசுவின் சீடர்களைப் பற்றியது. இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், ஓர் ஊரில் அவருக்குச் சரியான வரவேற்பு இல்லை. உடனே, அவரது சீடர்கள் யாக்கோபு, யோவான் இருவரும் ஆவேசத்தோடு இயேசுவிடம் வந்து, ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். (லூக்கா 9: 54) யாக்கோபு, யோவான் இருவரும் 'இடியின் மக்கள்' என்ற பெயர் தாங்கியவர்கள் அல்லவா? எனவேதான் இந்த ஆவேசம். நினைவிருக்கிறதா? இந்த இருவரும்தான் இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் அமர விரும்பியவர்கள். (மத். 20: 20-21)
நம்ம ஊர் அரசியல் தலைவர் என்றால், தொண்டர்களின் இத்தகைய ஆவேசத்தைக் கண்டு, அதுவும், தலைவனுக்காக ஊரையேக் கொளுத்தத் துடிக்கும் அவர்களது ஆவேசத்தைக்  கண்டு உள்ளம் குளிர்ந்து, அவர்கள் விரும்பிய அப்பதவிகளை ஒதுக்கிக்  கொடுத்திருப்பார். இயேசு நம்ம ஊர் அரசியல் தலைவர் இல்லையே... அவர் உலகத் தலைவர்கள் அனைவரையும் விட, மிகவும் வித்தியாசமானவர் ஆயிற்றே!
ஆவேசப்பட்ட சீடர்களுக்கு இயேசு தந்த பதில் என்ன? அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். (லூக்கா 9: 55) அவர் கடிந்து கொண்டதற்குக் காரணம் இருந்தது. அந்த ஊரை அழிப்பதற்கு, வானத்திலிருந்து சக்தியைக் கொண்டு வர நினைத்தனர், அந்தச் சீடர்கள். கடவுளின் சக்திகளைத் தவறான நோக்கங்களுக்கு, அதுவும் அழிவு நோக்கங்களுக்குப் பயன்படுத்த எண்ணிய அவர்களது சுயநலத்தை இயேசு அதிகம் கடிந்துகொண்டார்.
தொண்டர்களின் ஆர்வம், ஆவேசம், தங்களிடம் உள்ள அதிகாரம்... இவற்றை அழிவுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை எண்ணி நாம் வெட்கப்படுகிறோம். இந்தத் தன்னலத் தலைவர்களுக்காக, தங்கள் உயிரையும், பிற உயிர்களையும் பலியாக்கும் தொண்டர்களையும் எண்ணி வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம்.
இது மட்டுமல்ல, தாங்கள் அழிவை உருவாக்காமல் இருந்தாலும், பிற வழிகளில் மக்கள் சந்திக்கும் ஆபத்தையும், அழிவையும் தங்கள் ஆதாயமாக்கிக் கொள்ளும் தலைவர்களையும் நாம் காண்கிறோம். கடந்த ஆண்டு இறுதியில், தமிழ்நாட்டை உருகுலையச் செய்த வெள்ளத்தில், அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட விளையாட்டு, நம் மனங்களை இரணமாக்கின. இயற்கை அழிவையும் தங்கள் ஆதாயமாக்கும் இந்த அரசியல் தலைவர்களின் உள்ளங்களில் அடிப்படை மனித உணர்வுகளை இறைவன் விதைக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இரண்டாவது நிகழ்வு: இயேசுவைத் தொடர நினைக்கும் ஓர் இளைஞன், "நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்று சொல்கிறார். இயேசு அவரை ஆதங்கத்துடன் பார்க்கிறார். "எங்கே சென்றாலும்..." என்று அந்த இளைஞன்  சொன்னதுதான் அந்த ஆதங்கத்திற்குக் காரணம்... தான் எங்கே போகிறோம் என்பது இயேசுவுக்குத் தெளிவாக இருந்தது. அவர் எருசலேம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டார் என்று இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில் வாசிக்கிறோம். எருசலேம் நோக்கிச் செல்வது, அங்கிருந்த அதிகாரங்களுடன் மோதுவதற்கு. இந்த மோதலில் தனக்கு என்ன நிகழும் என்பதையும் இயேசு ஓரளவு உணர்ந்திருந்தார். இந்த நேரத்தில், இந்த மோதலில், இன்னும் ஒரு தொண்டரை ஈடுபடுத்த வேண்டுமா என்பதுதான் இயேசுவின் ஆதங்கம்.
மீண்டும் நம்ம ஊர்த் தலைவர்கள் நம் நினைவுக்கு வருகின்றனர். போராட்டங்களை முன்னின்று நடத்தி, அடிபட்ட தலைவர்கள் ஆயிரத்தில் ஒருவராக, இல்லை, இல்லை... இலட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பர். பொதுவாக, போராட்டம்,  எதிர்ப்பு, மோதல் என்று வந்தால், தொண்டர்களை அந்த மோதலில் ஈடுபடுத்திவிட்டு, ஒதுங்கிக்கொள்வது நம் தலைவர்களின் இலக்கணம். இயேசு, இத்தகையத் தலைவர் இல்லை...

தன் போராட்டத்தைப்பற்றி மறைமுகமாகச் சொல்லி, அதில் பங்குபெற இயேசு அந்த இளைஞனுக்கு விடுக்கும் அழைப்பு அழகானது: இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை என்றார். (லூக்கா 9: 58) பறவைகளும், மிருகங்களும் பாதுகாப்பற்றச் சூழலில் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்கின்றன. எந்த நேரத்தில் அவற்றின் உயிர் வேட்டையாடப்படும் என்பது தெரியாது. இவ்விதம் நாள் முழுவதும் பாதுகாப்பற்று வாழும் இவ்வுயிர்கள், மாலையில் திரும்பிச் செல்லும்போது, கூடுகளும், பதுங்குக் குழிகளும் பாதுகாப்பு தருகின்றன. தனக்கு அந்தப் பாதுகாப்பு கூட இல்லை என்பதை இயேசு தெளிவாக்குகிறார். இன்றைய அரசுத் தலைவர்களோடு ஒப்பிட்டால், இயேசுவை, பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று முத்திரை குத்தலாம்.

பிழைக்கத் தெரியாத தலைவர் என்று எண்ணிப்பார்க்கும்போது, இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் நினைவுக்கு வருகிறார். இம்மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் மானிக் ஷொர்கார் (Manik Sarkar) அவர்களைப் பற்றிய விவரங்கள் நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சொந்த வீடு எதுவுமில்லாதவர். வங்கிக் கணக்கில் இவரிடம் உள்ள தொகை ரூபாய் 10,000க்கும் குறைவு. ஆம்... நான் எந்த பூஜ்யத்தையும் தவற விடவில்லை... அது பத்தாயிரம்தான். கோடியில் ஒருவராய் இருக்கும் இவரைப் போன்ற தலைவர்களுக்கு நேர்மாறாக, கோடி, கோடியாய் சேர்த்திருக்கும் தலைவர்களை நமக்குத் தெரியும்.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு தகவலின்படி, (Mail Online - 29, September, 2012) அமெரிக்க அரசுத்தலைவரையும், அவரது குடும்பத்தையும் ஓராண்டு பாதுகாக்க, மக்கள் வரிப்பணத்திலிருந்து 140 கோடி டாலர்கள் செலவாகின்றன என்றும், பிரித்தானிய அரசக் குடும்பத்தைப் பாதுகாக்க 6 கோடி டாலர்கள் செலவாகின்றன என்றும் தெரிய வந்துள்ளது. இத்தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் உண்மையான பாதுகாப்பு உணர்வுடன் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்கின்றனரா என்பது பெரும் கேள்விக் குறியே! இத்தகையச் செய்திகளை வாசிக்கும்போது, தலைவர்களின் உண்மையான பாதுகாப்பு எதில் அடங்கியுள்ளது என்ற கேள்வியும் எழுகின்றது!

மூன்றாவது, நான்காவது நிகழ்வுகள்:
இச்சம்பவங்களில் இரு இளையோர் தங்கள் குடும்பம் சார்ந்த கடமைகளை, கணக்குகளை முடித்துவிட்டு, இயேசுவைப் பின்தொடர விழைகின்றனர். இயேசு அவர்களிடம் சொல்லும் பதில்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, கடுமையான வார்த்தைகளாக ஒலிக்கின்றன.
தன் பெற்றோரை அடக்கம் செய்துவிட்டு வர விழையும் இளைஞனிடம் "இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்." என்கிறார் இயேசு. வீட்டாரிடம் விடைபெற்று வர விழைந்த மற்றோருவரிடம், "வேண்டாம். இப்போதே புறப்படு. பின்னால் திரும்பிப் பார்க்காதே." என்று சொல்கிறார்.

இந்த ஞாயிறுத் திருப்பலியில் நாம் வாசிக்கும் முதல் அரசர் நூலில் ஒரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது. எலிசா என்ற இளைஞன் தன் வயலில் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்தார். எலியா என்ற இறைவாக்கினர் வந்து அவரை இறைவாக்கு உரைப்பவராகத் தேர்ந்து கொண்டார். "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்." என்று கேட்கும் எலிசாவுக்கு, அந்த அனுமதியை எலியா கொடுத்தாரா என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, எலிசா செய்த செயல் வியப்பைத் தருகிறது.
அரசர்கள் முதல் நூல் 19: 21
எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

எலிசாவின் இந்தச் செயலை மனதில் வைத்து, இயேசு கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல (லூக்கா 9: 58) என்ற வரிகளைச் சொல்லியிருக்கலாம். இயேசுவைப் பின்பற்றுவது, அவரைப்போல வாழ முற்படுவது மிக, மிக உயர்ந்ததோர் எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், தாமதிக்க வேண்டாம். நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. மாறாக, அதை ஆறப்போட்டால்... ஆற்றோடு போய்விடும். அதாவது, நமது ஏனைய எண்ணங்கள், கவலைகள், கணக்குகள், வாழ்வின் நிர்ப்பந்தங்கள் என்ற அந்த வெள்ளம் இந்த நல்லெண்ணத்தை ஆற்றோடு கொண்டுசெல்ல வாய்ப்புண்டு.
நம் வாழ்வைச் சூழும் வெள்ளத்தில் நமது நல்லெண்ணங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க, எதிர் நீச்சல் போடவேண்டியிருக்கும். கல்வியாண்டைத் துவங்கியுள்ள இளையோரே, உங்கள் கல்வி, பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை என்ற பல தளங்களிலும் உங்களுக்குள் உருவாகும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயலாற்றுங்கள். ஒருமுறை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நண்பகல் மூவேளை செபத்தின் இறுதியில், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் இளையோரிடம் சிறப்பான ஓர் அழைப்பை விடுத்தார். திருத்தந்தையின் இந்த வார்த்தைகளுடன் இன்றைய ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்வோம்:
"நான் சொல்வதை நன்கு நினைவில் கொள்ளுங்கள். வெள்ளமெனச் செல்லும் உலக போக்கிற்கு எதிராக, எதிர் நீச்சல் போட தயங்கவேண்டாம். துணிவு கொள்ளுங்கள்... கெட்டுப்போன உணவை நாம் உண்பது கிடையாது. அதேபோல், கெட்டுப்போன விழுமியங்களை மனதில் சுமந்து வாழவேண்டாம். முன்னேறுங்கள்!"

ஒன்றே செய்யினும், நன்றே செய்க; நன்றே செய்யினும், இன்றே செய்க.



21 June, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 27

Debt Relief Now

தவறு செய்யும் ஒருவரை, எத்தனை முறை மன்னிப்பது என்று கேட்ட புனித பேதுருவிடம், வரைமுறை ஏதுமின்றி மன்னிக்கவேண்டும் என்று இயேசு பதிலளித்தார். முழுமையைச் சுட்டிக்காட்டும் 7 என்ற எண்ணைப் பயன்படுத்தி, 'எழுபது தடவை ஏழு முறை' (மத்தேயு 18: 22) மன்னிக்கவேண்டும் என்று இயேசு அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.
மன்னிப்பு என்பது, அரைகுறையாக, அளந்து தரவேண்டிய கடனாக இல்லாமல், முழுமையானதாக, அளவேதுமின்றி அள்ளித்தரவேண்டிய கொடையாக இருக்கவேண்டும் என்பதே பேதுருவுக்கும், நமக்கும் இயேசு வழங்கும் பாடம். இந்தப் பாடத்தை இன்னும் ஆழமாக வலியுறுத்த, இயேசு கூறிய உவமையே, மன்னிக்க மறுத்தப் பணியாள் உவமை. விண்ணரசின் பண்பை விளக்கும் உவமை என்ற அறிமுகத்தோடு இயேசு இந்த உவமையைக் கூறினார். இதோ, இயேசு வழங்கிய அந்த உவமை:

மத்தேயு நற்செய்தி 18: 23-34
இயேசு பேதுருவிடம் கூறியது: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தாஎனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
மன்னிப்பு என்ற பாடத்தை வலியுறுத்த, இந்த உவமையின் இறுதியில் இயேசு கூறும் சொற்கள், ஓர் எச்சரிக்கை போல் ஒலிக்கின்றன: உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். (மத்தேயு 18: 35)

'கடன்படுதல்' என்ற கருத்தை மையப்படுத்தி மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும் இரு உவமைகள் சொல்லப்பட்டுள்ளன. மத்தேயு நற்செய்தியில் நாம் தேடலை மேற்கொண்டுள்ள இந்த உவமையில் 'மன்னிப்பு' என்ற பாடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 'கடன்படுத'லை மையப்படுத்தி லூக்கா நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள உவமையோ, 'அன்பை' வலியுறுத்துகிறது.
பரிசேயர் ஒருவரது வீட்டில், இயேசு, உணவருந்த சென்றார். அப்போது, அந்நகரில் பாவியான ஒரு பெண், அழையாத விருந்தினராக, அங்கு இயேசுவைத் தேடி வந்தார். இந்நிகழ்வை, நாம், பத்து நாட்களுக்கு முன், அதாவது, ஜூன் 12, ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொண்டோம். அச்சூழலில் இயேசு கூறிய உவமை இதோ:
லூக்கா நற்செய்தி 7: 40-43
இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியேஎன்றார்.
'கடன் அன்பை முறிக்கும்' என்பது, உலகம் சொல்லித் தரும் எச்சரிக்கைப் பாடம். 'கடனைத் தள்ளுபடி செய்வது, அன்பைக் வளர்க்கும்' என்பது, இயேசு சொல்லித்தரும் எளிய பாடம்.

மன்னிக்க மறுத்த பணியாள் உவமையில் மூன்று பகுதிகளை நாம் காணலாம். அரசருக்கும், பணியாளருக்கும் இடையே நிகழும் அற்புதமான மன்னிப்பு நிகழ்ச்சி முதல் பகுதியாகவும், மன்னிப்பு பெற்ற பணியாளர், தன் உடன் பணியாளரை மன்னிக்க மறுத்தது இரண்டாவது பகுதியாகவும், மன்னிப்பு தர மறுத்த பணியாளரை அரசர் மீண்டும் தண்டித்தது மூன்றாவது பகுதியாகவும் அமைந்துள்ளன.

அரசரிடம் பணியாளர் பட்டக் கடன் தொகையும், மன்னிப்பு பெற்ற பணியாளரிடம் உடன் பணியாளர் பட்டக் கடன் தொகையும், பல விவிலிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பணியாளர், அரசரிடம் பட்டக் கடனை, ஒரு மலையாக உருவகித்தால், மன்னிக்கப்பட்டப் பணியாளரிடம் உடன் பணியாளர் பட்டக் கடன் ஒரு சிறு தூசி என்றுதான் சொல்லவேண்டும். இத்தகைய ஒரு வேறுபாட்டை இயேசு இந்த உவமையில் கூறியுள்ளார். அரசரிடம் பணியாளர் பட்டக் கடன், 'பத்தாயிரம் தாலந்து' என்றும் உடன் பணியாளர் பட்டக் கடன் 'நூறு தெனாரியம்' என்றும் இயேசு குறிப்பிடுகிறார்.
'பத்தாயிரம்' என்ற எண்ணிக்கை, கிரேக்க மொழியில் 'myriad' என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. கிரேக்க மொழியில் அதுவே மிகப்பெரும் எண்ணிக்கையாகக் கருதப்பட்டது. அதாவது, 'அளவிடமுடியாத' என்ற கருத்தைச் சொல்வதற்கு, பத்தாயிரம் அல்லது, 'myriad' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அதேபோல், யூதர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்ட பணத்தில், மிக அதிகமான மதிப்பு பெற்றது, 'தாலந்து' என்ற பணம். எனவே, எண்களில் மிக அதிகம் என்று கருதப்பட்ட 'பத்தாயிரம்' என்ற சொல்லையும், பணத்தில் மிக அதிகமான மதிப்பு பெற்ற 'தாலந்து' என்ற சொல்லையும் இயேசு இவ்வுவமையில் இணைத்து, அந்தப் பணியாளர் அரசரிடம் 'பத்தாயிரம் தாலந்து' கடன்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மக்கள் மத்தியில் ஒரு நாள் கூலி, ஒரு 'தெனாரியம்' என்று வழங்கப்பட்டது. ஒரு 'தாலந்து' என்பது, 6000 'தெனாரியத்'திற்கு ஈடான பணம். எனவே, 'பத்தாயிரம் தாலந்து' என்ற எண்ணிக்கை, 60,000,000 நாட்கள், அதாவது, ஏறத்தாழ 1,60,000 ஆண்டுகளுக்கு உரிய கூலித் தொகை. இதற்கு மாறாக, உடன் ஊழியர் பட்டக் கடன் 100 நாள் கூலிக்கு இணையானது. உவமையின் முதல் பகுதியில் சொல்லப்பட்டுள்ள பணியாளர், அரசரிடம் பட்ட கடன் தொகையை ஈடுசெய்ய அவர், 1,60,000 ஆண்டுகள், ஊதியம் ஏதுமின்றி, அரசரிடம் பணியாற்றவேண்டும் என்பதை இயேசு சொல்லாமல் சொல்கிறார்.

இத்தகைய எண்ணிக்கைகளைச் சிந்திக்கும்போது, அதுவும் ஒருவர் மற்றொருவருக்கு செலுத்தவேண்டிய கடன் இவ்வளவு பெரிய தொகையா என்று எண்ணிப்பார்க்கும்போது, வறுமைப்பட்ட, கடன்பட்ட நாடுகளை மனம் எண்ணிப் பார்க்கிறது. உலகச் சமுதாயம், இரண்டாவது மில்லென்னியத்தை (2000) முடித்து, மூன்றாவது மில்லென்னியத்தில் (2001ம் ஆண்டில்) அடியெடுத்து வைத்தபோது, வறுமை நாடுகளின் கடன் தொகையை செல்வம் மிகுந்த நாடுகள் இரத்து செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் உலகெங்கும் எழுந்தது. விவிலியத்தில் கூறப்பட்ட யூபிலி ஆண்டு என்ற கருத்தின் அடிப்படையில் இந்த வேண்டுகோள் எழுந்ததென்று சொல்லப்பட்டது.

மூன்றாவது மில்லென்னியம் துவங்கிய வேளையில், வறுமைப்பட்ட நாடுகளின் கடன்கள் ஓரளவு இரத்து செய்யப்பட்டன. 1999ம் ஆண்டிலிருந்து, 2004ம் ஆண்டு முடிய கடன் தொகை இரத்து செய்யப்பட்டதால், அத்தொகையைக் கொண்டு வறுமைப்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்ந்த ஒரு சில வளர்ச்சிகளைப் பற்றிய பின்வரும் விவரங்கள் தெரிய வந்தன:
·         தான்சானியா நாட்டில் இலவசக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பட்டது. பல நூறு பள்ளிகள் கட்டப்பட்டன; பல்லாயிரம் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
·         புர்கினா பாஸோ நாட்டில், உயிர்காக்கும் மருந்துகளின் விலை, வெகுவாகக் குறைக்கப்பட்டது; சுத்தமான குடிநீர் வசதிகள் பெருகின.
·         உகாண்டா நாட்டில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தது.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிய நாடுகள் பலவற்றின் கடற்கரைப் பகுதிகளை விழுங்கிய 'சுனாமி'யைத் தொடர்ந்து, 15 ஆசிய நாடுகளின் கடன்தொகைகள் இரத்து செய்யப்பட்டன. 'வறுமையை வரலாறாக்குக' (Make Poverty History) என்று, உலகின் பல நாடுகளில் 2005ம் ஆண்டு துவங்கிய கொள்கைப் பரப்பு முயற்சியால், இன்னும் பல நாடுகளின் கடன் இரத்து செய்யப்பட்டது.
வறுமைபட்ட நாடுகளின் கடனை இரத்துசெய்யும் பல்வேறு முயற்சிகள் 1999ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டாலும், உலகின் கடன்பட்ட நாடுகளின் வளர்ச்சி இன்னும் நிறைவடையவில்லை என்பது உண்மை.

செல்வம் மிகுந்த, வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு, வறுமைப்பட்ட அல்லது, வளரும் நாடுகள் செலுத்தவேண்டிய கடனைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா, உமக்கே புகழ்' என்ற திருமடலில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இயற்கைக்கு நாம் அளிக்கவேண்டிய கடனைக் குறித்தும் இம்மடலில் அவர் எழுதியுள்ளார். இத்திருமடலின் 52ம் பகுதியில், திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள் இதோ:
"பிற நாடுகளுக்கு செலுத்தவேண்டிய கடன் தொகை, வறுமைப்பட்ட நாடுகள் மேற்கொள்ளக்கூடிய வளர்ச்சிப்பணிகளைக் கட்டுப்படுத்தும் கருவியாக மாறிவிட்டது. இயற்கைக்கு செலுத்தவேண்டியக் கடன், வேறுவிதமாக அமைந்துள்ளது...
இயற்கை வளங்கள் பலவற்றின் பிறப்பிடங்களாக விளங்கும் வளரும் நாடுகள், இவற்றைப் பயன்படுத்தி தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளன. தங்கள் வளர்ச்சியைத் தியாகம் செய்து, செல்வம் மிகுந்த நாடுகளின் முன்னேற்றத்திற்காக, வளரும் நாடுகள், தங்கள் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன...... இயற்கைக்குச் செலுத்தவேண்டிய இக்கடனை அடைப்பதற்கு, வளர்ச்சிபெற்ற நாடுகள் உதவி செய்யவேண்டும். அளவுக்கதிகமாக, இயற்கைச் செல்வங்களை விழுங்கிவரும் போக்கினை, வளர்ச்சிபெற்ற நாடுகள் கட்டுப்படுத்தினால், வறுமைப்பட்ட நாடுகள் வாழ்வதற்கு ஏதுவானச் சூழல் உருவாகும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருமடலில் கூறியுள்ளார்.

கடன்களை மன்னிப்பது, யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய அம்சம் என்றால், 'மூன்றாம் உலக நாடுகள்' என்றழைக்கப்படும், வறுமைப்பட்ட நாடுகள், செல்வம் மிகுந்த நாடுகளுக்கு செலுத்தவேண்டிய கடன், இந்த யூபிலி ஆண்டில் மன்னிக்கப்பட வேண்டும் என்று மன்றாடுவோம். மேலும், 'இயற்கைக்கு செலுத்தவேண்டியக் கடன்' என்று திருத்தந்தை சுட்டிக்காட்டும் கடனைத் தீர்ப்பதற்கு, அனைத்து நாடுகளும், குறிப்பாக, செல்வம் மிகுந்த நாடுகள், தங்கள் முயற்சிகளைத் தீவிரமாக்க வேண்டும் என்றும் மன்றாடுவோம்.