26 September, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 39


Father and son in a park

பாசமுள்ள பார்வையில் - 
"இன்னும் ஒரு 5 நிமிடங்கள், ப்ளீஸ்..."

இளம் தந்தையொருவர், 5 வயது மகன், ஹென்றியை அழைத்துக்கொண்டு, தன் வீட்டுக்கு முன்புறம் அமைந்திருந்த பூங்காவுக்குச் சென்றார். அங்கு, ஹென்றி ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்ததை, அருகிலிருந்த 'பெஞ்சில்' அமர்ந்து இரசித்துக் கொண்டிருந்தார் தந்தை. அவர் அருகே மற்றொரு இளம் தாய் வந்தமர்ந்தார். சிறிது நேர அமைதிக்குப் பின், அப்பெண், "சிவப்பு சட்டை போட்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பவன் என் மகன்" என்று பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார். இளம் தந்தை, "அப்படியா? அவனுக்கருகே அடுத்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பவன் என் மகன்" என்று கூறினார். அரைமணி நேரம் இருவரும் பல விடயங்கள் குறித்துப் பேசினர். பின்னர், இளம் தந்தை எழுந்து, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவண்ணம், தன் மகனிடம், "ஹென்றி, வா போகலாம்" என்று கூற, சிறுவன் அவரிடம், "இன்னும் ஒரு 5 நிமிடங்கள் அப்பா" என்று கெஞ்சினான். 5 நிமிடங்கள் சென்று, தந்தை மீண்டும் அழைக்க, ஹென்றி மீண்டும், "ப்ளீஸ் அப்பா. இன்னும் ஐந்தே நிமிடங்கள்" என்று கூறினான். இவ்வாறு, நான்கு, அல்லது, ஐந்து முறை நடந்தது.
இதைப்பார்த்துக்கொண்டிருந்த அந்த இளம் தாய், "நீங்கள் உண்மையிலேயே ரொம்ப பொறுமைசாலி" என்று புகழ்ந்தார். அந்த இளம் தந்தை, அப்பெண்ணிடம், "என் மகன் கேட்கும் ஐந்து நிமிடங்கள் அவனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும்தான்" என்று கூறியதும், அப்பெண் புரியாமல் அவரைப் பார்த்தார். இளம் தந்தை, தொடர்ந்து விளக்கம் அளித்தார்: "ஹென்றியின் அண்ணன் ஜூலியன், சென்ற ஆண்டு, இதே பூங்காவுக்கருகே, சாலை விபத்தில் இறந்தான். எங்கள் வீடு, பூங்காவுக்கு எதிரே இருப்பதால், என் மகன் ஜூலியன், பூங்காவில் சைக்கிள் ஓட்ட விரும்பி, என்னையும் அழைத்தான். ஆனால், நான் அப்போது வேலையில் மூழ்கியிருந்ததால், அவனோடு செல்ல மறுத்துவிட்டேன். ஜூலியன் வீட்டைவிட்டு, பூங்காவிற்குச் செல்ல, சைக்கிளில் சாலையைக் கடந்தபோது, குடிபோதையில் கார் ஒட்டி வந்த ஒருவர், ஜூலியன் மீது மோதியதால், வீட்டுக்கெதிரிலேயே அவன் இறந்துபோனான். என் மகன் ஜூலியன் என்னிடம் கேட்டதெல்லாம் ஒரு ஐந்து நிமிடங்கள்தாம். அதை அவனுக்கு அன்று நான் கொடுத்திருந்தால், அவன் ஒருவேளை இன்று உயிரோடு இருந்திருப்பான். இப்போது, ஹென்றி கேட்கும் ஐந்து நிமிடங்கள், அவனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும் தான். இந்தப் பூங்காவில் நான் அமரும் நிமிடங்கள் எல்லாம், என் ஜூலியனுக்காக நான் செலவிடும் நிமிடங்கள்" என்று அந்த இளம் தந்தை, கலங்கிய கண்களுடன் கூறி முடித்தார்.

Job restored to prosperity – Artwork by Laurent de La Hyre

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 39

யோபு நூலின் முடிவுரையான 42ம் பிரிவில் இன்று அடியெடுத்து வைக்கிறோம். ஆண்டவர் சூறாவளியிலிருந்து யோபிடம் பேசியதற்கு, யோபு வழங்கும் இரண்டாவது பதிலுரையோடு இந்தப் பிரிவு ஆரம்பமாகிறது. சூறாவளியிலிருந்து ஆண்டவர் தன் முதல் உரையை வழங்கி முடித்ததும், யோபு தன் கரங்களால் வாய்பொத்தி நின்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் செயல், யோபின் பணிவைக் காட்டும் அடையாளம். இரண்டாவது உரையின் இறுதியில், யோபு ஆண்டவர் முன்பு முற்றிலும் சரண் அடைவது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
யோபு நூல் 42: 1-6
அப்பொழுது யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்: நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்; அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது. 'அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?" என்று கேட்டீர்; உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்; அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை. அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்; வினவுவேன் உம்மை; விளங்க வைப்பீர் எனக்கு. உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்; ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்.

தான் சரணடைவதற்குக் காரணம், ஆண்டவரை நேரில் சந்தித்ததே என்று, யோபு, தன் இறுதிச் சொற்களில் கூறியுள்ளார். தான் அதுவரை பெற்றிருந்த இறை அறிவு, மனிதர்களிடமிருந்து கேட்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. கடவுளைப்பற்றி அவர் கேட்டறிந்த உண்மைகளையும், அவர் வாழ்வில் நிகழ்ந்த வேதனை அனுபவங்களையும் இணைக்க முடியாமல் யோபு துன்புற்றார் என்பதை இந்நூல் முழுவதும் நாம் புரிந்துகொண்டோம்.
பொதுவாக, ஒருவரது வாழ்வு சீராக, சமநிலையில் பயணிக்கும்போது, இறைவனைப்பற்றி நாம் கேட்டறிந்த அறிவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், வாழ்வு தடம்புரண்டு, துன்பத்தில் சிக்கித் தவிக்கும்போது, கடவுளைப்பற்றியக் கேள்வியறிவு பயன் தராது. இறைவனைப்பற்றிய நேரடி அனுபவம், அறிவு, இவையே அந்த நெருக்கடி நேரங்களில் கரம் கொடுக்கும். இதுதான் யோபின் வாழ்விலும் நிகழ்ந்தது.

ஆண்டவரைப்பற்றி, யோபோ, அவரது நண்பர்களோ கொண்டிருந்த ஏட்டளவு அறிவு, அவர் அடைந்த துன்பங்களுக்கு தகுந்த பதிலிருக்க முடியாமல் திணறியது. இப்போதோ, சூறாவளியின் வழியே, ஆண்டவரை நேருக்கு நேர் சந்தித்துவிட்டார், யோபு. இச்சந்திப்பு, தனக்குத் தேவையான உண்மைகளை விளக்கியுள்ளன என்று யோபு கூறியுள்ளார்.

யோபு இறைவனிடம் சரணடையும் இந்த வரிகளில், இறுதியாக, அவர் சொல்வது, நம் கவனத்தை ஈர்க்கிறது. புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன். என்ற சொற்களை வாசிக்கும்போது, புழுதியும், சாம்பலும் நிறைந்த ஓரிடத்தில் யோபு மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதைப்போன்ற ஒரு காட்சி நம் மனங்களில் தோன்றுகிறது. ஆனால், இந்த வரியை, எபிரேய மொழியில் நேரடியாகக் காணும்போது, "புழுதியும், சாம்பலுமாக இருந்து மனம் வருந்துகிறேன்" என்றும் பொருள் கொள்ளமுடியும். பல விவிலிய விரிவுரையாளர்கள், இந்த மொழிபெயர்ப்பு பொருத்தமானதென்று கூறியுள்ளனர். இறைவனுக்கு முன், புழுதியாக, தூசியாக, சாம்பலாக மனிதர்கள் தங்களையே உருவாக்கப்படுத்திப் பேசுவது, விவிலியத்தில் இன்னும் சில இடங்களில் காணப்படுகிறது. இறைவன் மனிதரை உருவாக்கியது, மண்ணிலிருந்து, அல்லது, தூசியிலிருந்து என்பதை, தொடக்க நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்.
தொடக்க நூல் 2: 7
அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.

இதே யோபு நூலில், தன் துன்ப நிலையை விவரிக்கும்போது, கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்; புழுதியும் சாம்பலும்போல் ஆனேன் (யோபு 30:19) என்று யோபு தன்னை உருவகப்படுத்திப் பேசினார்.
ஆண்டவர் சோதோம் நகரை நெருப்பால் அழிக்கவிருப்பதாக ஆபிரகாமிடம் சொன்னபோது, அந்நகரில் 50 நீதிமான்கள் இருந்தால், அவர்களை முன்னிட்டாவது, அந்நகரை அழிக்காமல் விட்டுவிடவேண்டும் என்று, ஆபிரகாம், ஆண்டவரிடம் மன்றாடத் துவங்கினார். 50 நீதிமான்கள் இருந்தால் அழிக்கமாட்டேன் என்று ஆண்டவர் கூறியதும், ஆபிரகாம் தொடர்ந்து ஆண்டவரிடம் 45, 40 என்று நீதிமான்களின் எண்ணிக்கையை, படிப்படியாகக் குறைக்கத் துவங்குகிறார். இந்த எண்ணிக்கை பேரத்தை ஆரம்பிக்கும்போது, ஆபிரகாம் இறைவனிடம் கூறுவது இதுதான்:
தொடக்க நூல் 18:27-28
அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?" என்றார்.

மனிதர்கள் தூசி என்பதை இறைவன் நன்கு அறிவார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறியுள்ளார்:
திருப்பாடல் 103: 14-16
அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது. மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.

புழுதியாக, சாம்பலாக இறைவன்முன் சரணடையும் யோபின் இறுதி வார்த்தைகளை, யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், இவ்வாறு தொகுத்துக் கூறுகிறார்: "நான் இதுவரை பேசிவந்ததையும், என் நண்பர்கள் பேசியதையும் இப்போது நான் நிராகரிக்கிறேன். இப்போது, இறைவனை சந்தித்துவிட்டேன். நான் இவ்வுலகில் தனித்து விடப்படப் போவதில்லை என்ற உறுதியைப் பெற்றுள்ளேன். புழுதியைப்போல், சாம்பலைப்போல் நலிவுற்ற மனிதனாகிய நான், என் தற்போதைய நிலையில் ஆறுதல் அடைகிறேன்."

யோபு நூல் 3ம் பிரிவில் துவங்கி, 42ம் பிரிவு, 6வது இறைவாக்கியம் வரை நீடித்த யோபு நூலின் கவிதை, யோபு, இறைவனிடம் முற்றிலும் சரணடையும் மனநிலையுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, யோபின் கதை நிறைவு செய்யப்படுகிறது. முதல் 2 பிரிவுகளில் கூறப்பட்ட கதை, மீண்டும் 42ம் பிரிவில் 7 முதல், 17 முடிய காணப்படும் 11 இறை வாக்கியங்களில் ஆனந்தமான முடிவை அடைகிறது.

இந்த இறுதிப்பகுதியில், ஆண்டவர், முதலில், யோபின் நண்பர்களில் ஒருவரான எலிப்பாசுவின் வழியாக, மூன்று நண்பர்கள் கூறிய கருத்துக்களை கடுமையாகச் சாடுகிறார். யோபு ஏதோ ஒருவகையில் தவறு செய்திருக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் கூறிவந்த நண்பர்களை, இறைவனின் கடுமையான சொற்கள் குற்றவாளிகளாக்குகின்றன. இந்த மூன்று நண்பர்களும், தங்கள் குற்றங்களுக்குப் பரிகாரமாக எரிபலியை ஒப்புக்கொடுத்தபின், யோபின் மன்னிப்பையும் தேடவேண்டும் என்று இறைவன் பணிக்கிறார். அவர்கள் சார்பாக, யோபு மன்றாடினால், அவர்களை தான் மன்னிப்பதாக இறைவன் வாக்களிக்கிறார்.

ஆண்டவரின் சொற்களுக்கேற்ப, தன் நண்பர்கள் சார்பாக, யோபு, மன்றாடும்போது அந்த நால்வருக்கிடையே ஒப்புரவு நிகழ்கிறது. இந்த ஒப்புரவைத் தொடர்ந்து, யோபின் வாழ்வை இறைவன் இரண்டு மடங்காக ஆசீர்வதிக்கிறார் என்றும், யோபின் வேதனை, நோய் இவற்றின் காரணமாக அவரைவிட்டு விலகிச்சென்ற அனைவரும் மீண்டும் திரும்பிவருகின்றனர் என்றும் முடிவுரை கூறுகிறது (யோபு 42: 10). யோபின் மனைவியைக் குறித்து இப்பகுதியில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், அவரும் மீண்டும் யோபிடம் திரும்பி வந்திருக்கவேண்டும் என்பதையும், அவரையும் யோபு ஏற்றிருப்பார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

யோபுக்குப் பிறந்த 10 குழந்தைகளில், மூன்று பெண்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ளவை நம் கவனத்தை ஈர்க்கின்றன:
யோபு 42:13-15
அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். மூத்த மகளுக்கு எமிமா என்றும், இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரேன் அப்பூக்கு என்றும் பெயரிட்டார். யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.

பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்குவது, இஸ்ரயேல் மக்களிடம் இல்லாத புதியதொரு மரபு. யோபு நூல், பல வழிகளில், புதிய எண்ணங்களை விதைத்துள்ளது என்பதற்கு, இந்த ஒரு இறைவாக்கியம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. யோபு நூலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய புதிய, அல்லது, பழைய எண்ணங்களை, அடுத்த சில தேடல்களில் சிந்திப்போம்.


24 September, 2017

Let God be God கடவுள், கடவுளாகவே இருக்கட்டும்


The Labourers in the Vineyard by Eugene Burnand

25th Sunday in Ordinary Time

Long queues are more of a norm than an exception in India. I have experienced these queues at the railway reservation counters. (I am talking of an era when online booking was not in vogue.) Once when I went to book a train ticket, the queue was rather long and only one counter was open. I had mentally resigned myself to the fact that it would take at least half an hour for me to reach the counter. Thank God, I brought a book with me. So, I tried to immerse myself in the book. After half an hour, I was closer to the counter. I was actually the next person in line. At that time, another counter was opened and those who stood behind me rushed to the new counter and were attended to immediately. I could sense a wave of irritation sweep over me.

Fr Ron Rolheiser, one of my favourite homilists and columnists, recounts a similar incident that happened to him at an airport. He draws a parallel between his experience and the parable of the Labourers in the Vineyard (Matthew 20:1-16) given for our reflection today. Here is Fr Rolheiser’s account of what happened to him at the airport and his subsequent reflection:
I was alright with the long wait and moved patiently in the line - until, just as my turn came, another security crew arrived, opened a second scanning machine, and a whole line-up of people, behind me, who hadn't waited the forty minutes, got their turns almost immediately. I still got my turn as I would have before, but something inside of me felt slighted and angry: "This wasn't fair! I'd been waiting for forty minutes and they got their turns at the same time as I did!" I'd been content waiting, until those who arrived later didn't have to wait at all. I hadn't been treated unfairly, but some others had been luckier than I'd been.
That experience taught me something, beyond the fact that my heart isn't always huge and generous. It helped me understand something about Jesus' parable concerning the workers who came at the 11th hour and received the same wages as those who'd worked all day and what is meant by the challenge that is given to those who grumbled about the unfairness of this: "Are you envious because I'm generous?”
Are we jealous because God is generous? Does it bother us when others are given unmerited gifts and forgiveness? You bet! And ultimately that sense of injustice, of envy that someone else got  a break is a huge stumbling block to our happiness. Why? Because something in us reacts negatively when it seems that life is not making others pay the same dues as we're paying.
(From the homily of Fr Rolheiser: ON BEING JEALOUS OF GOD'S GENEROSITY - 2005-09-18

Jesus is the ‘story-teller par excellence’! He packs his parables with many surprising punches and unexpected reversals. The parable of the labourers in the vineyard is no exception. The owner of the vineyard employs labourers at various hours of the day, including the eleventh hour. Here is an extract from the homily of Fr Joseph Pellegrino talking of these labourers:
The hired laborers of the parable were the lowest class of Jewish workingmen. They and their families lived on the poverty level. If they were unemployed for even a day, the family would go hungry.
Their situation was known to be so bad that when they were hired for a day's work, Old Testament law commanded they be given salaries before sundown. Thus, they were able to shop and put bread and milk on the table…
The men standing in the plaza at 5 PM were not street bums. The plaza was the labor exchange. They would come there before sunrise with their tools. Their lucky friends had been already hired. The balance waited hoping. The fact that the last men waited till 5 PM showed how badly they wanted employment…

The Law of Moses that imposes that daily wages be paid by 6 p.m. (Deuteronomy 24:14-15) brings to mind the injustices committed against daily-wages labourers today. Most of them and their families go to bed hungry. Although the workers slog the whole day, they are cheated of their due wages. As we consider this parable, we pray that the warning given in this law, namely, the ‘cry of the poor will be considered seriously by the Lord’ is heeded by the masters who employ labourers. The Law of Moses often reminds the people of Israel that they should not forget the fact that they had been strangers in a foreign land. If only all of us learn the one unchangeable lesson that all of us are pilgrims on this earth, many social ills that beset us – including cheating the poor – can be healed. Let us get back to today’s parable…

The focus of the parable is not the labourers but the owner of the vineyard. This man seems to go against all that we think is logical. For instance, we would expect him to pay the labourers, starting from the ones who had worked the whole day. But, he begins with the last ones. Jesus seems to make a point here. The owner of the vineyard could have easily sent away the full day labourers giving them their due wages – namely, one denarius and then he could have called in the eleventh hour men and given them whatever he wanted. That way, things would have gone on smoothly. But, parables are not meant to smooth things out. They are supposed to drive home a point. By seeing the eleventh hour labourers get paid one denarius, the expectation of the full-day labourers must have soared. Hence, their disappointment became all the more poignant when they too were paid only one denarius. Many of us would feel that the owner was unfair. But from the point of view of the owner, he had not done any injustice to those who had worked all day. They were not deprived of their just wages – the wages agreed upon. When it came to the eleventh hour workers, the owner wanted to go beyond calculations and be generous.

Generosity and Justice are two facets of God that often seem to clash. We can understand a ‘generous God’ who lavishes gifts on us. We can also understand a ‘just God’ who pays what is due to each of us. But, a generous-just God or a just-generous God seems to give us headaches. This is because our definition of generosity and justice are very different from that of God. Unfortunately, we tend to make God think like us.
This parable rudely upsets our picture of God. It tells us that our human standards are useless in measuring God or attempting to understand Him. What is God up to?  There is an indication in Isaiah 55, 8: "For my thoughts are not your thoughts, my ways not your ways - it is the Lord who speaks."
God is telling us through this strange parable: "Don't cut me down to your size. I will not squeeze into your stereotypes. You wish your enemies revenge, but I want mercy. You fashion God made to your own image, but I will not play your game. I have my own. And it will surprise you every time. I am a complete original. There is no one like me." (Fr Joseph Pellegrino)

Instead of shaping or creating God in our image, let us allow God to be God… the illogical, generous, prodigal Father who can blend Justice and Love in a unique style, very different from ours. If we allow God to be God, then probably some traces of this divine generosity may rub off on us too!

பொதுக்காலம் 25ம் ஞாயிறு

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஒருநாள், பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு, நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. அவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றிநான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கிவிட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின், வரிசையில் நின்றுகொண்டிருந்த பலர், அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர், எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்து சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள், அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.

வீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்று தீர்மானித்துவிட்டேன். அதேபோல், அரைமணி நேரம் சென்றதும், என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப் பின் வந்து வரிசையில் நின்ற சிலர் எனக்கு ஈடாக, அல்லது எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர். இதைக் கண்டு நான் ஏன் எரிச்சல் கொண்டேன்? என்னுடைய வரிசையில் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன்? எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா? அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா? நியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அரைமணி நேரமாவது அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். இல்லையா?
நியாயமாகப் பார்த்தால் என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம், நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள். என் எரிச்சல், கோபம் எல்லாம் எனக்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லித் தந்தன. என் மனம் இன்னும் கொஞ்சம் பரந்து விரிய வேண்டும் என்ற உண்மையை இந்தக் கோபம் எனக்கு உணர்த்தியது.

இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லியிருக்கும் உவமையை நினைத்துப் பார்க்கும்போது, இதேபோன்றதொரு கோபம் தலைதூக்கியதை உணர்ந்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கும் கோபம் வரலாம். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள் இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு முதலாளியைப் பற்றிய உவமை இது.  இந்த உவமையை முற்றிலும் புரிந்துகொள்வது கடினம் என்று ஒரு சில விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவேதான், இந்த உவமை ஒரே ஒரு நற்செய்தியில், அதாவது மத்தேயு நற்செய்தியில் மட்டும் உள்ளது என்பது, அவர்கள் கணிப்பு.

தன் திராட்சைத் தோட்டத்தில் பணி செய்ய ஆட்களைத் தேடிச் செல்லும் ஒரு முதலாளியின் கதை இது. காலை 6 மணி முதல் அவர் ஆட்களை பணிக்கு அமர்த்துகிறார். மாலை ஐந்து மணி வரை ஆட்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றனர்.
மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலை 6 மணிக்கு  கூலி கொடுக்கப்படவேண்டும். தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் ஊதியம் பெற்றால்தான் அவர்கள் வீட்டில் உணவு இருக்கும். எனவே, அவர்களுக்கு மாலை 6 மணிக்கு கூலி கிடைத்தால்தான் அவர்களால் இரவு உணவை தன் மனைவி, மக்களுக்கு வாங்கிச் செல்ல முடியும் என்ற எண்ணத்தில் இந்த சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனவே, உவமையில் வரும் முதலாளி மாலை ஆறுமணி ஆனதும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கத் துவங்குகிறார்.

மோசே வழங்கிய இந்த பரிவுமிக்க சட்டத்தைப்பற்றி (இணைச்சட்டம் 24: 14-15) சிந்திக்கும்போது, இன்று நிகழும் பல அவலங்கள் மனதை காயப்படுத்துகின்றன. தங்கள் உழைப்புக்குக் கிடைக்கவேண்டிய கூலி கிடைக்காமல், பசியும், பட்டினியுமாக படுக்கச் செல்லும் பல குடும்பங்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம். வறியோரின் வயிற்றில் அடிப்பவர்கள், வளமாக வாழ்ந்துவிட முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று செபிப்போம். இனி தொடர்ந்து, இந்த உவமையை இயேசுவின் வார்த்தைகளிலேயே கேட்போம்:
மத்தேயு நற்செய்தி 20: 8-16
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்து, கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் என்று இயேசு கூறினார்.

இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சிகரமான புரட்டிப்போடுதல் நிகழ்கின்றது. பாரம்பரியம் என்ற பெயரில், சமுதாயம் பின்பற்றிவந்த தவறான வழிமுறைகளைப் புரட்டிப்போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் புரட்டிப் போடுதல் நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலை செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கச் சொல்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது.
ஒரே ஒரு மணி நேரம் உழைத்த அவர்களுக்கு ஒரு நாள் முழுவதற்குமான கூலி - அதாவது, ஒரு தெனாரியம் - கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குத் தலை கால் புரியாத, ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலை 6 மணி முதல் மாலை 6 வரை உழைத்தவர்களுக்கும் இதைக் கண்டு மகிழ்ச்சி... அவர்களுக்கு வேறொரு வகையில் மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் உழைத்தவர்களுக்கே ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கிடைத்ததென்றால், தங்களுடைய 12 மணி நேர உழைப்பிற்கு, 12 தெனாரியம் கிடைக்கலாம் என்று அவர்கள் மனம் கணக்கிட்டிருக்கும். எனவே அவர்களும் ஆனந்த எதிர்பார்ப்பில் நின்று கொண்டிருந்தார்கள்.
ஆனால், நடந்தது என்ன? அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. நமது கண்ணோட்டத்திலும், அவர்களது ஏமாற்றமும், கோபமும் நியாயமாகத் தெரிகிறது. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கவில்லை. அனைவருக்கும், நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராள குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால். இவற்றை நாமும் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறோம் என்பது உண்மைதானே!

இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராள குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவற்றைப் பற்றி அவ்வப்போது நாம் எண்ணிப் பார்க்கிறோம். இறைவனின் அன்பு அளவற்றது, நிபந்தனையற்றது என்பதையெல்லாம் சிந்திக்கும்போது, அவரது நீதி எங்கே என்ற கேள்வி எழுகிறது. அவர் நீதியானவர் என்பதை வலியுறுத்தும்போது, அவர் அன்பு எங்கே போயிற்று என்ற சந்தேகம் எழுகிறது. நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில், இயேசு சொல்லும் உவமைகள் அமைந்துள்ளன.
இந்த உவமைகள் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளும், நமது எண்ணங்களில் வளர்ந்துள்ள கடவுளும், மாறுபட்டவர்கள். இந்த உவமையின் இறுதியில், அந்த முதலாளி கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு முறை, கவனமாகக் கேட்போம்.
தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை... உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’
"நான் கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்? கடவுளை கடவுளாய் இருக்க விடாமல், நமது எண்ணங்களின்படி, அவரை, பல விதங்களில் வளைத்து, நெளித்து விடுகிறோமோ என்று அஞ்சுகிறேன். அளவுகடந்த அன்பும், தரமறியாது வழங்கும் தாராள குணமும் கொண்டவர் இறைவன். உண்மைதான். நீதியோடு, நடுநிலையோடு செயல்படுபவர் இறைவன். உண்மைதான். இவ்விரு குணநலன்களையும் தனித்தனியே சிந்திக்கும்போது பிரச்சனைகள் இல்லை. ஆனால், இறைவனின் அன்பையும், நீதியையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.

கடவுளின் அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்க முடியாமல் தவிப்பது நாம்தான். கடவுள் இல்லை. கடவுள் தன் நீதியிருக்கை மீது அமர்ந்து தீர்ப்பு சொல்வதற்கு முன், நாம் கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு தீர்ப்புகள் வழங்கிவிடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் வழங்கிய தீர்ப்பைத்தான் கடவுளும் தருவார் என்றும் முடிவு செய்துவிடுகிறோம். அந்த நேரத்தில், கடவுள், தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராள குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது, அதை புரிந்துகொள்ளமுடியாமல், தடுமாறுகிறோம். இறுதியில் வந்தவர்களுக்கு, நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளை இறைவன் செய்யும்போது, நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கோபம் கொள்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?

கடவுளை கடவுளாகவே இருக்க விடுவோம். அப்போது நமக்கும் அந்தத் தெய்வீக இயல்பில் ஒரு சிறு பங்காவது கிடைக்கும்.

Our Lady of Mercy - From the Generalate of the Mercedarian Order

செப்டம்பர் 24 - இரக்கத்தின் கன்னி மரியா

வெயில், மழை, காற்று, தூசி என்று பல்வேறுத் தாக்குதல்களிலிருந்து குழந்தையைக் காக்க, அன்னையர் பயன்படுத்தும் ஓர் அற்புதக் கேடயம், முந்தானை அல்லது, துப்பட்டா.
அன்னையர் உடுத்தும் மேலாடைகள், குழந்தையின் கண்ணீரைத் துடைக்க, அல்லது, அடிபட்டக் குழந்தையின் காயத்தைக் கட்ட... என்று, பல வழிகளில், துயர் துடைக்கும்; பாதுகாப்பு வழங்கும்.
அன்னை மரியா, இதே பண்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஓர் உருவமே, இரக்கத்தின் கன்னி மரியா (The Virgin of Mercy). கன்னி மரியா தன் மேலாடையை, இருகரங்களாலும் விரித்தபடி நிற்க, அந்த மேலாடை தரும் பாதுகாப்பில், வறுமைப்பட்ட தொழிலாளிகள், குழந்தைகள், அருள் சகோதரிகள் என்று பல குழுவினர் அடைக்கலம் புகுந்திருப்பதுபோல், மரியாவின் உருவம் பல தோற்றங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டு முதல், இத்தாலி, இஸ்பெயின், இலத்தீன் அமெரிக்க நாடுகளில், மக்களிடையே பரவியுள்ள பக்தி முயற்சியாக இது இருந்து வருகிறது.
இரக்கத்தின் கன்னி மரியாவின் திருநாள், செப்டம்பர் 24ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.


20 September, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 38


Our Lady of La Salette

பாசமுள்ள பார்வையில் - சலேத்து மாதாவின் கண்ணீர்

18ம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுற்ற பிரெஞ்சு புரட்சி, பிரெஞ்சு சமுதாயத்தை பெருமளவு காயப்படுத்தியிருந்தது. மக்களிடம் இறை நம்பிக்கை தொலைந்து போயிருந்தது. செபித்துவந்த உதடுகள், நாள் முழுவதும், இறைவனையும், அடுத்தவரையும் சபித்தவண்ணம் இருந்தன. ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் கோவிலை மறந்துவிட்டு, தங்கள் பணிகளிலும், கேளிக்கைகளிலும் மூழ்கினர்.
இச்சூழலில், 1846ம் ஆண்டு, செப்டம்பர் 19ம் தேதி, சனிக்கிழமை, மாக்ஸிமின் (Maximin) என்ற சிறுவனும், மெலனி (Melanie) என்ற சிறுமியும், ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில், லா சலேத் ஃபல்லவோ (La Salette Fallavaux) என்ற ஊருக்கருகே ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில், அந்த மலைச் சரிவில், ஒரு பாறையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து, தன் கரங்களில் முகத்தைப் புதைத்தவண்ணம் அழுதுகொண்டிருந்தார். அவரைச் சுற்றி நிலவிய ஒளி, எதோ சூரியனே இறங்கிவந்து அங்கு அமர்ந்திருந்ததைப்போல் இருந்தது.
மக்கள் செல்லும் தவறான பாதைகளால் தானும், தன் மகனும் மிகவும் துயரடைந்திருப்பதாகக் கூறிய அப்பெண், மக்கள் தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ளவில்லையெனில், வறட்சி, வியாதி, பட்டினி என்று பல துயரங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். பின்னர் அங்கிருந்து மறைந்துபோனார்.
மாக்ஸிமின், மெலனி இருவரும் தாங்கள் கண்ட காட்சியைப்பற்றி சொன்னபோது, அவர்களது குடும்பத்தினர் உட்பட, ஒருவரும் நம்பவில்லை. அவ்விருவரையும் சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டியபோதிலும், அவ்விரு சிறாரும் தாங்கள் கண்டது உண்மையான காட்சி என்பதில் உறுதியாக இருந்தனர்.
நாட்கள் செல்ல, செல்ல, அன்னை மரியை அவ்விரு சிறாரும் கண்டனர் என்று மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அன்னை காட்சி கொடுத்த இடத்திற்கு திருப்பயணிகள் சென்றனர். 5 ஆண்டுகளில், அப்பகுதியில் வியக்கத்தக்க மாற்றங்கள் உருவாயின. மக்கள் மீண்டும் கோவிலை நாடிச் சென்றனர். சபிக்கும் பழக்கம் குறைந்தது.
1851ம் ஆண்டு, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், அந்தக் காட்சிகளையும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பக்தி முயற்சிகளையும் உண்மையென ஏற்றுக்கொண்டார். அந்தக் காட்சி நிகழ்ந்த இடத்தில் எழுப்பப்பட்ட கோவிலில் பீடமேற்றப்பட்டிருந்த அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு மகுடம் சூட்டுவதற்கு1879ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் உத்தரவளித்தார்.
லா சலேத் என்ற இடத்தில் அன்னை மரியா தோன்றியதால், அவர் லா சலேத் அன்னை, அல்லது, சலேத்து மாதா என்று வணங்கப்படுகிறார். சலேத்து மாதாவின் திருநாள், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 19ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

World Day of Prayer for the Care of Creation

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 38

ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் முதல் தேதியன்று, படைப்பைப் பேணுவதற்கென செபிக்கும் உலகநாள்  (World Day of Prayer for the Care of Creation) கடைபிடிக்கப்படுகிறது. படைப்பின் மீது அக்கறை கொள்ளவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை முதலாம் திமித்ரியோஸ் (Dimitrios I) அவர்கள், 1989ம் ஆண்டு, படைப்பைப் பேணுவதற்கென செபிக்கும் உலகநாளை உருவாக்கினார். கிறிஸ்தவ ஒன்றிப்பு அர்த்தடாக்ஸ் சபையில், செப்டம்பர் முதல் தேதி, வழிபாட்டு ஆண்டின் முதல் நாளெனச் சிறப்பிக்கப்படுகிறது. நாம் அனைவரும் படைப்பின் பாதுகாவலர்கள் என்பதை வலியுறுத்த, வழிபாட்டு ஆண்டின் முதல் நாளை, படைப்பிற்கென செபிக்கும் நாளாக அவர்கள் சிறப்பித்து வருகின்றனர். 2014ம் ஆண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபை, இந்த நாளை நிறுவிய 25ம் ஆண்டை சிறப்பித்தது. அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது, 2015ம் ஆண்டு, இந்த உன்னத முயற்சியில் கத்தோலிக்கத் திருஅவையும் இணையும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்.
இந்த ஒன்றிப்பு முயற்சி, இவ்வாண்டு மூன்றாம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களும் இணைந்து, செய்தியொன்றை வெளியிட்டனர். "இவ்வுலகை நாம் காணும் கண்ணோட்டமும், அதன் பயனாக, இவ்வுலகுடன் நாம் கொள்ளும் தொடர்பும் மாறவேண்டும்" என்று, இவ்விரு தலைவர்களும் தங்கள் செய்தியில் கூறியுள்ளனர்.
இவ்வுலகும், படைப்பு அனைத்தும், மனிதரின் நலனுக்காக மட்டுமே பயன்படும் பொருள்களாக காணும் சுயநலக் கண்ணோட்டம் கட்டுப்பாடு ஏதுமின்றி வளர்ந்துவிட்டதன் விளைவாக, இவ்வுலகம் பெருமளவு சீரழிந்துள்ளது என்பதை, இரு தலைவர்களும் தங்கள் செய்தியில் கவலையுடன் கூறியுள்ளனர்.

படைப்பு அனைத்தின் சிகரமாக, மையமாக மனிதர்களை இறைவன் படைத்தார் என்ற கருத்து, விவிலியத்தின் தொடக்க நூலில் வெளிப்படுகிறது. கடவுள் அனைத்தையும் படைத்தபின், மனிதர்களைப் படைப்பதற்குமுன், அவர்களுக்கென தான் வகுத்துள்ள திட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவர்களைப் படைத்ததும், ஏனைய படைப்புக்களை ஆளும் அதிகாரத்தை மனிதர்களுக்கு வழங்கினார். இவற்றை தொடக்க நூல் இவ்வாறு கூறியுள்ளது:
தொ.நூல் 1: 26-28
அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.
"ஆளுங்கள்" என்று ஆண்டவர் தந்தக் கட்டளையை, அடக்குதல், கட்டுப்படுத்துதல், அடிமைப்படுத்துதல் என்று மனிதர்கள் புரிந்து கொண்டதால், படைப்பைப் பயன்படுத்தும் வழிகளில் பெரும் தவறுகளை இழைத்துள்ளனர். 'ஆளுங்கள்' என்ற கட்டளைக்கு, அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து, இவ்வுலகை மட்டுமல்ல, வான் வெளியையும் ஆட்சி செய்யவேண்டும் என்ற முயற்சிகளை மனிதர்கள் மேற்கொண்டனர். வெளி உலகத்தை ஆள்வதற்கு விருப்பம் கொண்ட மனிதர்கள், தங்கள் உள் உலகை, அதாவது, மனங்களை ஆள்வதற்கு விருப்பமின்றி, அளவுகடந்த ஆசைகளை வளர்த்துக்கொண்டனர். இவ்வுலகையும், வான்வெளியையும் தங்கள் ஆசைகளுக்கு அவர்கள் பலியாக்கிய வேளையில், அது, இறைவனிடமிருந்து வந்த கட்டளை என்று சமாதானமும் சொல்லிக்கொண்டனர்.
'ஆளுங்கள்' என்று ஆண்டவன் சொன்னதை அடிக்கோடிட்டுக் காட்டி, மனிதர்கள், அதிலும் குறிப்பாக, ஒரு சில மனிதர்கள், இவ்வுலக வளங்கள் அனைத்தையும் தங்களுக்கென மட்டும் அபகரித்துக்கொள்ளும் சுயநல வெறி, மனித இனத்தையும், படைப்பு அனைத்தையும் அழிவின் விளிம்புக்கு இழுத்து வந்துவிட்டது.

இத்தகைய ஒரு பின்னணியில், கடவுள் யோபிடம் எழுப்பிய கேள்விகளை ஆய்வு செய்யும்போது, தன் கேள்விகளில் மனிதர்களைப் பற்றி அவர் ஒன்றும் பேசாமல் இருப்பது, நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது. படைப்பு அனைத்திற்கும் மையமாக தங்களை கற்பனை செய்து வாழ்ந்த மனிதர்களின் எண்ணங்கள் தவறு என்பதை, யோபிடம் இறைவன் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகின்றன. லூத்தரன் இறையியல் பேராசிரியராகப் பணியாற்றும் காத்ரின் ஷிஃபெர்டெக்கர் (Kathryn Schifferdecker) அவர்கள், 2008ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூல், படைப்பின் மையம் மனிதர்கள் அல்ல என்ற சிந்தனையை அழகாக வலியுறுத்துகிறது.
“Out of the Whirlwind: Creation Theology in the Book of Job”, அதாவது, "சூறாவளியிலிருந்து: யோபு நூலில் படைப்பு இறையியல்" என்ற தலைப்பில் காத்ரின் அவர்கள் வெளியிட்ட அந்நூல், மனிதருக்கும், படைப்பிற்கும் இடையே இருக்கவேண்டிய சமநிலையான உறவைப் பற்றியும், அதன் பயனாக, யோபு இறைவனிடமிருந்து கற்றுக்கொள்ளும் முக்கியமான பாடங்களைப் பற்றியும், அழகாக விளக்குகின்றது.

யோபு நூல் என்றதும், பொதுவாக நம்மில் பலர், அந்நூலின் மையப்பொருள் துன்பம், குறிப்பாக, மாசற்றவரின் துன்பம் என்று எண்ணுகிறோம். ஆனால், இந்நூலின் ஆசிரியர் காத்ரின் அவர்கள் கூறுவது மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்நூல், குறிப்பாக, 38ம் பிரிவு முதல், நூலின் இறுதி வரை நாம் காணும் உச்சக்கட்ட நிகழ்வுகள், படைப்பைப்பற்றிய ஒரு தியானத்தை வழங்குகிறது என்று அவர் கூறியுள்ளார். அந்த தியானத்தின் வழியே, படைப்பில், மனித சமுதாயத்திற்கு குறிக்கப்பட்டுள்ள இடம், படைப்பை இறைவன் ஒழுங்குபடுத்தும் அழகு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம் என்று கூறுகிறார், காத்ரின்.
காரணம் ஏதுமின்றி தன்னை வதைக்கும் துன்பங்களுக்கு விளக்கம் கேட்டு, யோபு மீண்டும், மீண்டும் கேள்விகளைத் தொடுத்தும், சூறாவளி வழியே அவரிடம் பேசவந்த இறைவன், யோபின் துன்பத்தைப்பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதற்கு மாறாக, இறைவன், யோபை, இவ்வுலகையும், வான்வெளியையும் சுற்றி, ஒரு பயணமாக அழைத்துச் செல்கிறார்.
மிக அழகிய கவிதை வடிவில் இறைவன் அடுக்கிவைக்கும் கேள்விகள், இந்த பிரம்மாண்டமான படைப்பின் மையம் மனிதர் அல்ல என்பதை மிகத் தெளிவாக இடித்துரைக்கின்றன. படைக்கப்பட்ட மனிதரின் கற்பனைக்கும் எட்டாத அளவு வான்வெளியில் எண்ணிலடங்கா படைப்புக்கள் உள்ளன என்பதை, இறைவனின் கேள்விகள் சுட்டிக்காட்டுகின்றன. அறிவுக்கும், கற்பனைக்கும் எட்டாத வகையில் பரந்துவிரிந்த படைப்பில், தான் மையமல்ல, ஒரு சிறு பகுதிதான் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாததால்தான், யோபு தன் துன்பத்தை பெரிதுபடுத்தி, அங்கேயே சிறையுண்டு தவித்தார் என்று, காத்ரின் அவர்கள் கூறியுள்ளார்.

பரந்துவிரிந்த உலகம், வான்வெளி என்ற இந்த பிரம்மாண்டமான படைப்பில், யோபின் நிலை என்ன என்பதை இறைவன் தெளிவாக்கியபோது, யோபின் பதில் எவ்வாறு அமைந்தது என்பதை, இந்நூலின் 40ம் பிரிவின் துவக்கத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
யோபு 40: 3-5
யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி: இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவேமாட்டேன்.
கையால் வாயைப் பொத்தி நிற்பது, தனக்கு முன் இருப்பவருக்கு மிக உயர்ந்த மதிப்பைக் காட்டும் அடையாளச் செயல். இத்தகைய மதிப்பை ஊரில் தான் பெற்றதாக, யோபு முன்னொரு பகுதியில் கூறியுள்ளார். - யோபு 29: 8-9

தன் முன் பணிந்து நிற்கும் யோபிடம், இறைவன் தொடர்ந்து பேசும் இரண்டாவது உரை, 40, 41 ஆகிய பிரிவுகளில் காணப்படுகின்றன. தன் இரண்டாம் உரையில் இறைவன், பெகிமோத்து, லிவியத்தான் என்ற இரு படைப்புக்களைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.
நிலத்தில் நடமாடும் படைப்பு அனைத்திலும் மிக அதிக சக்திவாய்ந்தது, பெகிமோத்து என்று, விவிலிய விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், நீரில் வாழும் படைப்பு அனைத்திலும், லிவியத்தான் என்ற மிருகம், மிகவும் வலிமை மிக்கது.
மனிதர்களுக்கு எவ்வகையிலும் பயன்தராத மிருகங்கள் இவை இரண்டும். இன்னும் சொல்லப்போனால், இவை, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மிருகங்கள். இந்த மிருகங்களைப் படைத்ததும் தானே என்று இறைவன் யோபிடம் விளக்கிக் கூறுகிறார். மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத படைப்புக்கள் பல உள்ளன என்பதை யோபுக்கும், நமக்கும் உணர்த்த, இறைவன், பெகிமோத்து, லிவியத்தான் என்ற இரு மிருகங்களைப்பற்றி இவ்வளவு விரிவாகப் பேசியுள்ளார்.
புரியாத புதிர்கள் பல நிறைந்த இவ்வுலகில், மனிதர்கள், தாங்களும் ஒரு சிறு பங்குதான் என்பதை உணர்ந்துகொண்டால், நமக்கும், நம்மைச் சூழ்ந்திருக்கும் படைப்பு அனைத்திற்கும் நன்மைகள் உண்டாகும். அத்தகைய மனநிலையை மனிதர்கள் விரைவில் பெறுவதற்கு இறைவனை இறைஞ்சுவோம்.

கடவுள் தந்த இரு நீண்ட உரைகளுக்குப்பின், தன்னிலை உணரந்த யோபு, இறைவனுக்குமுன் சரண் அடைகிறார். இதைத் தொடர்ந்து, இந்நூலின் நிறைவாக அங்கு நிகழ்வனவற்றை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.