31 July, 2019

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 7


Dr Abdul Kalam with his friend ‘Arjuna’

பூமியில் புதுமை – அப்துல் கலாமும், அர்ஜூனாவும்

ஏவுகணை மனிதர், அணுசக்தி அறிஞர், இராக்கெட் மேதை, இளையோரின் கலங்கரை விளக்கம், மக்களின் அரசுத்தலைவர் என்ற பல அடைமொழிகளுக்கு உரியவர், மறைந்த மாபெரும் மனிதர், அப்துல் கலாம் அவர்கள். அவரது மறைவின் 4ம் ஆண்டு நினைவு, ஜூலை 27, கடந்த சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டபோது, அவரைப்பற்றிய பல கட்டுரைகளும், செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. அவற்றில் ஒன்று, "முனைவர் கலாமும், அவரது பழைய நண்பர் அர்ஜுனாவும்" என்ற தலைப்புடன், 'இந்தியா டுடே' என்ற இதழில் வெளியான ஒரு கட்டுரை. அப்துல் கலாம் அவர்கள், இயற்கை மீது காட்டிய அக்கறை, இக்கட்டுரையில் பதிவாகியிருந்தது.
அப்துல் கலாம் அவர்கள், அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகியபின், புது டில்லியில், 10, இராஜாஜி மார்க் என்ற முகவரியில் அமைந்திருந்த இல்லத்தில், தன் இறுதி ஆண்டுகளைச் செலவழித்தார். அந்த இல்லத்திற்கு வருபவர்களையெல்லாம், தன் நண்பர் அர்ஜுனாவுக்கு, அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த இல்லத்தின் தோட்டத்தில், பல ஆண்டுகளாக, உயர்ந்து நிற்கும் ஒரு மரத்தின் பெயர்தான், 'அர்ஜுனா'. "என் நண்பர் அர்ஜுனா, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறார். அவர், காந்தி, நேரு போன்ற பெரும் தலைவர்களைப் பார்த்தவர். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, அர்ஜுனா ஓர் இளையவராக இங்கு நின்றுகொண்டிருந்தார்" என்று, கலாம் அவர்கள், தன் நண்பரை அறிமுகம் செய்துவைப்பாராம்.
ஒருமுறை, 'அர்ஜுனா'வைப்பற்றிப் பேசியபோது, "பிறருக்கு வழங்குவதே, அர்ஜுனாவின் வாழ்வாக மாறிவிட்டது. மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே வாழ்பவர்கள், வணக்கத்துக்குரியவர்கள்" என்று, அப்துல் கலாம் அவர்கள், உணர்வுபொங்க பேசினார் என்று கூறப்படுகிறது. அவர் தங்கியிருந்த வீட்டில், பறவைகளுக்கு உணவு கொடுத்தபின்னரே, அவர் உண்டார் என்பதை அறியும்போது, கலாம் அவர்கள், இயற்கையோடு கொண்டிருந்த ஈடுபாட்டைப் புரிந்துகொள்ளலாம்.
மாமேதை அப்துல் கலாம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளன்று, சென்னைக்கருகே இளையோரால், 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தென்னிந்திய நடிகர் ஒருவர், இவ்வாறு பேசினார்: ''இந்தியாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் அப்துல் கலாம் ஐயா அவருடைய நினைவு நாளில், பறவைகளுக்காக 1,000 மரக்கன்றுகள் நடுவது மகிழ்ச்சியாக உள்ளது. அரிவாளும், பட்டாக்கத்தியும் எடுத்து திரிபவர்கள் எல்லாம் மாணவர்கள் கிடையாது. கடும் வெயிலிலும், சுற்றுச்சூழலைக் காப்பதற்காக, மரக்கன்றுகளை நடுவதற்கு, கடப்பாரை பிடிக்கும் நீங்கள் தான், உண்மையான மாணவர்கள். நீங்கள் தான், நாட்டின் எதிர்காலம்.'' - ஆதாரம்: இந்தியா டுடே, இந்து தமிழ் திசை

The healed demoniac pleading to go with Jesus

ஒத்தமை நற்செய்தி கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 7

கெரசேனர் பகுதியில், தீய ஆவிகளால் வதைக்கப்பட்ட ஒருவரை, இயேசு குணமாக்கும் புதுமையில், கடந்த ஆறு வாரங்களாகப் பயணித்து வருகிறோம். இத்தேடல்களில், நாம் சிந்தித்தவை, பெரும்பாலும் மனதைப் பாரமாக்கிய எதிர்மறை எண்ணங்களாகவே இருந்துள்ளன. இத்தகைய எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளியேறி, இப்புதுமையின் இறுதிப்பகுதியில் கூறப்பட்டுள்ள நம்பிக்கை தரும் சொற்களை இந்த வாரம் சிந்திப்போம் என்று, சென்ற தேடலை நிறைவு செய்தோம். ஆனால், சென்ற வாரம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா நாட்டு அரசுத்தலைவருக்கு அனுப்பிய ஒரு மடல், நம்மை, மீண்டும், இந்தப் புதுமையையும், சிரியா போன்று பல நாடுகளில், நிலவும் போர்ச் சூழலையும் ஒப்பிட்டுச் சிந்திக்க நம்மை அழைக்கிறது.

ஜூலை 22, கடந்த வாரம் திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா நாட்டின் அரசுத்தலைவர், பஷார் அல்-அசாத் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பியிருந்தார். சிரியாவில் போரிடும் இரு தரப்பினருக்கிடையே, இத்லிப் (Idlib) என்ற பகுதியில் சிக்கித் தவிக்கும் 30 இலட்சம் மக்களை மனதில் கொண்டு, திருத்தந்தை, தன் விண்ணப்பத்தை விடுத்திருந்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன், 2011ம் ஆண்டு, சிரியாவின் உள்நாட்டுப் போர் துவங்கியது. அப்போர் ஆரம்பித்த ஒரு சில நாட்களில், (மார்ச் 29, 2011) National Catholic Reporter என்ற இணையத்தள செய்தித்தாளில், "Expelling the demons of war" அதாவது, "போரின் பேய்களை விரட்டுதல்" என்ற தலைப்பில், எழுத்தாளரும், அருள் பணியாளருமான John Dear என்பவர் பகிர்ந்த கருத்துக்கள், நம்மைச் சிந்திக்க அழைக்கின்றன. பாலஸ்தீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், Ched Myers என்ற விவிலிய அறிஞர் வழங்கிய ஓர் உரையிலிருந்து, அருள்பணி ஜான் டியர் அவர்கள், பல கருத்துக்களை, தன் கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார்.
தீய ஆவிகளால் வதைக்கப்பட்ட மனிதரை இயேசு குணமாக்கிய புதுமையையும், போரில் ஈடுபடும் பல வல்லரசு நாடுகளையும் இணைத்து, Myers அவர்கள் எழுதியுள்ள ஒரு நூலின் தலைப்பு: “Binding the Strong Man: A Political Reading of Mark’s Story of Jesus” "சக்திவாய்ந்த மனிதரைக் கட்டிப்போடுதல்: மாற்கு கூறும் இயேசுவின் கதையை அரசியல் கண்ணோட்டத்துடன் வாசித்தல்".

போர் ஒருபோதும் தீர்வு ஆகாது என்று தன் கட்டுரையைத் துவக்கும் அருள்பணி ஜான் டியர் அவர்கள், தொடர்ந்து, அரசுகள், குறிப்பாக, வல்லரசுகள் கொண்டுள்ள போர் வெறியைக் குறித்துப் பேசுவது, நமக்கு வேதனையைத் தருகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, நலவாழ்வு, வீடற்றோருக்கு குடியிருப்பு, அனைவருக்கும், நீரும், உணவும் கிடைக்கும் வழிகள் ஆகிய திட்டங்கள் குறித்து, உலகின் ஒவ்வொரு நாட்டிலும் விவாதங்கள் எழும்போது, இத்திட்டங்களுக்குத் தேவையான அளவு நிதி இல்லை என்று தட்டிக்கழிக்கும் அரசுகள், போருக்கு மட்டும் கோடி, கோடியாய் பணத்தைக் கொட்டிக் குவிக்கின்றன என்ற கூற்றுடன் தன் கட்டுரையை ஆரம்பிக்கும் அருள்பணி ஜான் டியர் அவர்கள், Ched Myers அவர்களின் நூலிலிருந்து ஒரு சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:
தீய ஆவி அல்லது, ஆவிகள் பிடித்த ஒரு மனிதரை இயேசு குணமாக்கினார் என்று கருத்து மட்டுமே இப்புதுமையில் பொதுவாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தீய ஆவிகளை இயேசு விரட்டியபோது, உரோமைய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் செயல்பட்டார் என்ற கண்ணோட்டத்திலும், பேய் விரட்டும் புதுமைகளை நாம் பொருள்கொள்ள முடியும் என்று Myers அவர்கள் கூறியுள்ளார்.
தனி மனிதரின் ஒப்புதல் இன்றி, அவரை ஆக்கிரமிக்கும் தீய ஆவியை, அல்லது, ஆவிகளை, இயேசு விரட்டும்போதெல்லாம், ஒரு சமுதாயத்தின் சம்மதம் இன்றி, அவர்கள் வாழும் பகுதியை, அன்னிய நாட்டின் இராணுவம் ஆக்கிரமித்துள்ள அநீதியையும் இயேசு விரட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இப்புதுமையில், அம்மனிதரிடமிருந்து வெளியேறிய தீய ஆவிகள், பன்றிகளில் புகுந்ததால், அவை கடலில் மூழ்கிய நிகழ்வு, இஸ்ரயேல் மக்களைத் துரத்தியவண்ணம் செங்கடலுக்குள் நுழைந்த எகிப்தியப் படைவீரர்கள், செங்கடலில் மூழ்கி இறந்ததையும் நினைவுறுத்துகிறது என்று, Myers அவர்கள் கூறியுள்ளார்.

இப்புதுமையின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள நம்பிக்கை வரிகளில் நம் தேடலைத் துவக்குவோம்:
மாற்கு 5:18-20
இயேசு படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

பொதுவாக, இயேசுவால் குணம்பெற்றவர்கள், தங்கள் வழக்கமான வாழ்வைத் தொடர்ந்தனரே தவிர, இயேசுவைப் பின்தொடரவில்லை என்பதை, நற்செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தப் புதுமையில் மட்டுமே, குணம்பெற்றவர், இயேசுவுடன் வாழ விழைவதாகக் கூறுகிறார். அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளாத இயேசு, அதற்கு மாறாக, குணமடைந்தவரை, தனக்கு ஏற்பட்ட நன்மைகளைப் பறைசாற்றும் பணியாளராக மாற பணிக்கிறார்.
மதுப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம் ஆகிய தீமைகளிலிருந்து விடுதலை பெற்ற ஒருசிலர், அதேப் பழக்கங்களில் சிக்கிய மற்றவர்களுக்கு தங்கள் விடுதலையைப்பற்றி எடுத்துச்சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்துவதை, தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும், கெரசேனர் கல்லறை மனிதர், ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

விடுதலை பெற்ற மனிதர், இயேசுவோடு இருக்கவிழைவதையும், அந்த விண்ணப்பத்தை இயேசு மறுப்பதையும் காணும்போது, உள்ளத்தில் நெருடல் ஏற்படுகின்றது. இந்த நெருடலைப் போக்க, இப்புதுமையில் இடம்பெறும் மூன்று விண்ணப்பங்களை புரிந்துகொள்ள முயல்வோம்.
அம்மனிதரில் குடிகொண்டிருந்த தீய ஆவிகளை, இயேசு விரட்டியபோது, அவை, "நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்" என்று... இயேசுவை வேண்டின (மாற்கு 5:12). இது முதல் விண்ணப்பம். இந்த விண்ணப்பத்தை இயேசு நிறைவேற்றினார்.
இயேசுவைச் சந்திக்க வந்த ஊர்மக்கள், பேய்பிடித்தவர் நலமடைந்து, ஆடையணிந்து, இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றனர். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியைவிட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். (மாற்கு 5:17) இது இரண்டாவது விண்ணப்பம். மக்கள் விடுத்த இந்த விண்ணப்பத்திற்கிணங்கி, இயேசு படகில் ஏறியதும், மூன்றாவது விண்ணப்பம் இடம் பெறுகிறது. அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார் (மாற்கு 5:18).

இந்த மூன்று விண்ணப்பங்களில், மூன்றாவது விண்ணப்பம், இயேசுவின் உள்ளத்தைத் தொட்டிருக்கவேண்டும்; அந்த விண்ணப்பத்தை அவர் நிறைவேற்றியிருக்கவேண்டும் என்று நமக்கு எண்ணத்தோன்றுகிறது. இயேசுவோ, கடினமான முதல் இரு விண்ணப்பங்களை நிறைவேற்றினார்; ஆனால், எளிதான, மனதுக்கு இதமான, மூன்றாவது விண்ணப்பத்தை மறுத்தார்.

விவிலிய விரிவுரையாளர்களில் ஒருவரான Alexander Maclaren அவர்கள், A Refused Bequest, அதாவது, 'மறுக்கப்பட்ட விண்ணப்பம்' என்ற தலைப்பில், இந்நிகழ்வைக் குறித்து வழங்கும் எண்ணங்கள், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன:
பேய்களிலிருந்து விடுதலை பெற்றவர், தன்னைக் குணப்படுத்திய இயேசுவோடு இருக்கவேண்டும் என்று விரும்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர், புறவினத்தார் வாழ்ந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அதுவரை அவர் அறிந்திராத இயேசுவை அறிந்துகொண்டபின், அந்த அற்புத வாய்ப்பை, இழக்க விரும்பவில்லை. தன்னை குணமாக்கியவர் அகன்றுபோனால், தன்னிடமிருந்து வெளியேறிய தீயஆவிகள் மீண்டும் வந்துவிடும் என்று அவர் அஞ்சினார்.
இவ்வாறு, அம்மனிதர் எழுப்பிய மூன்றாவது விண்ணப்பத்திற்குக் காரணம் கூறும் Maclaren அவர்கள், அம்மனிதருக்கு எழுந்த அச்சத்தை, மனிதவாழ்வில் பொதுவாக நிகழும் சில அனுபவங்களுடன் பொருத்திப் பேசுகிறார்:
வழி தெரியாமல் தவிக்கும் ஒருவர், தன்னை அழைத்துச்செல்லும் வழிகாட்டியின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்வதைப்போல்... ஆபத்துக்கள் சூழும் நேரத்தில், தன் பெற்றோரை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொள்ளும் குழந்தையைப்போல்... ஓர் அறுவைச் சிகிச்சை வழியே, அல்லது, குறிப்பிட்ட மருந்துகள் வழியே தனக்கு நலம் வழங்கிய மருத்துவர், தன்னுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்பும் நோயாளியைப்போல்... தீய ஆவிகளிடமிருந்து விடுதலை பெற்றவர், இயேசுவோடு இருக்கவேண்டும் என்று விரும்பினார் என்று Maclaren அவர்கள் கூறியுள்ளார்.
தன்னை நலமடையச் செய்த இயேசுவுடன் வாழ விரும்பிய மனிதரின் விண்ணப்பத்தை இயேசு ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், அதற்குப் பதிலாக அவருக்கு இயேசு வழங்கிய ஒரு பணியையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

27 July, 2019

Lessons from the midnight friend நள்ளிரவு நண்பர் சொல்லித்தருபவை


William Holman Hunt - The Importunate Neighbour (1895)

17th Sunday in Ordinary Time

Here is the gist of a story (parable) attributed to Fr Brian Cavanaugh. These are not the original words of Fr Cavanaugh, but the idea:
One day, the disciple approached the guru and asked him, “What must I do to reach God?” The guru shot back with another question: “What must you do to make the sun rise?” Irritated by this response from the guru, the disciple went on: “They why do you teach us so many ways to pray?” The guru replied with great calmness, “So that you can be awake, when the sun rises.”

We are aware that prayer does not become a part and parcel of our lives that easily. More often we grapple with many questions about prayer… Why to pray at all? Why pray when nothing seems to happen? What to pray for? How to pray? Questions, and more questions…
The disciples of Jesus too had their questions about prayer. They were waiting for an opportune moment to clarify them with the Master. Such a moment was not hard to find, since Jesus was often engaged in prayer… any time of the day or night, any place. Today’s Gospel (Luke 11: 1-13) talks about one such moment. One day Jesus was praying in a certain place. When he finished, one of his disciples said to him, "Lord, teach us to pray, just as John taught his disciples." (Luke 11: 1)
It looked as if Jesus was just waiting for a request like this. He began straightaway. He did not give them a long theoretical discourse on prayer. He gave them - a lovely prayer, a story and a gentle encouragement and warning.

“When you pray, say: 'Father, hallowed be thy name’…”. (Lk. 11:2) These were the opening lines of Jesus’ lesson on prayer. He went on to give them one of the most popular prayers known universally. If the present population of the world is around 7 billion, one can easily guess that at least 3 billion would be able to recite this prayer by heart. I am not only thinking of Christians, but also others who have had the ‘Christian’ influence, say, for instance, those non Christian children who have been educated in Christian schools... Such is the popularity of this prayer.

After teaching them this universal prayer, Jesus tells them a parable to illustrate that there is no when-and-where for prayer. Even midnights and closed doors need not deter us from praying… That was the nucleus of the lovely parable of the ‘midnight friend’!

Most of the parables of Jesus begin in the third person – e.g. “There was a man who had two sons” (Lk. 15:11); “There was a rich man, who was clothed in purple” (Lk. 16:19). Very few parables begin with a direct address to the audience. One such is the parable of the ‘midnight friend’, where Jesus begins by saying, “Which of you who has a friend will go to him at midnight…” (Lk. 11:5). This is an indirect invitation from Jesus that the audience identify themselves with the midnight friend. Thus, it is an invitation to us as well today.

Although this parable was meant to teach how to persevere in prayer, the picture that Jesus paints in the parable serves as a challenge to us living in the 21st century. The picture presented by Jesus can be described like this: In a remote part of Judea, a man arrived at a village around midnight. He wanted to break the journey in that town. He went to his friend’s house around midnight, seeking accommodation and food. He was confident that he could walk into the house of his friend any time of the day or night. The friend welcomed him. Since there was no food in his house, he went to his neighbour at midnight and requested him for food. He did not hesitate for a moment to disturb his neighbor at midnight.
This scenario is unimaginable in our present day, we may say. But, such instances do take place in our days, perhaps not among the well to do, where prior information is a must, but among the poor. Last week, we spoke about the hospitality of the poor. This parable talks of love, friendship and trust that are evident among the simple folks.

Let us turn our attention to the protagonist of this parable. William Holman Hunt was an English painter. His paintings were notable for their great attention to detail, vivid color, and elaborate symbolism. In 1895, he painted the scene of this parable with the title: “The Importunate Neighbour”. In the painting he had depicted our protagonist, not just knocking on the door of his neighbour, but literally banging his head on the door. This posture of the man, captures beautifully what Jesus intended to teach – namely, keep on knocking, even banging your head on the door!
We may also interpret this posture as the man knocking on the door and ‘listening carefully’ to what his neighbour told him. Once again, ‘listening intently’ is one of the main characteristics of prayer!

There are many characteristics of prayer and hence it is a life-long learning experience. We can surely learn three characteristics of prayer from our ‘midnight friend’:
1. Our friend went to his neighbour not to satisfy his own hunger, but that of his friend.
2. He laid bare before his friend his present position ‘Friend, lend me three loaves; for a friend of mine has arrived on a journey, and I have nothing to set before him’ (Lk. 11:5-6)
3. He persisted with his request inspite of the closed door.

First characteristic – praying for the needs of others. This is called intercessory prayer. Instead of turning prayer into a recitation of the litany of our personal needs, it is better to carry the needs of others to the Lord.  This is a direct challenge to the ‘narcissistic’ tendencies of our present day. 

On May 20, 2013, the TIME magazine published the cover page of a young lady, lying on the ground taking a ‘selfie’. The title given on the cover page ran like this: “THE ME ME ME GENERATION – Millennials are lazy, entitled narcissits who still live with their parents”

Here are a few excerpts from the lead article – ‘Millennials: The Me Me Me Generation’ by Joel Stein:
Millennials consist, depending on whom you ask, of people born from 1980 to 2000… The group is made up mostly of teens and 20-somethings… Each country's millennials are different, but because of globalization, social media, the exporting of Western culture and the speed of change, millennials worldwide are more similar to one another than to older generations within their nations…
In the U.S., millennials are the children of baby boomers, who are also known as the Me Generation, who then produced the Me Me Me Generation, whose selfishness technology has only exacerbated. Whereas in the 1950s families displayed a wedding photo, a school photo and maybe a military photo in their homes, the average middle-class American family today walks amid 85 pictures of themselves and their pets.

Against this backdrop of a generation wrapped in ‘selfie’, we see the ‘midnight friend’ as a spokesperson for ‘the other’.

Second characteristic – laying bare oneself before the Lord. It takes a lot of courage as well as humility for a friend to tell another friend about his/her actual state. More often we tend to hide our deficiencies and put on a mask. This leads to other complications within oneself and in the friends circle. Prayer is more effective when we present ourselves just as we are with our limitations.

Third characteristic – persevering in prayer. This is the focus of the parable. Although the houseowner, behind closed doors, heaps up excuses: ‘Do not bother me; the door is now shut, and my children are with me in bed; I cannot get up and give you anything’ (Lk. 11:7), our hero still persists.

Another type of persistence is seen in the duel between Abraham and God. The First Reading from Genesis (18: 20-32) deals with how to struggle in prayer. Abraham holds a tête-à-tête with God. It sounds more like a bargain in a market place… 50, 45, 40… down to 10. Since Abraham was sincere and serious in saving people, God was willing to go the distance with him. I look at this whole episode as one prolonged prayer. It looks as if God was also struggling with Abraham in this ‘prayer’.
Any struggle to establish goodness in the human family, whether it takes the obvious form of prayer or not, can be considered a prayer since cries of anguish and sincere desires that rise from the soul are heard by God.

Let us close our reflection with the gentle encouragement and warning given by Jesus in today’s Gospel: 
"So I say to you: Ask and it will be given to you; seek and you will find; knock and the door will be opened to you. For everyone who asks receives; he who seeks finds; and to him who knocks, the door will be opened. Which of you fathers, if your son asks for a fish, will give him a snake instead? Or if he asks for an egg, will give him a scorpion? If you then, though you are evil, know how to give good gifts to your children, how much more will your Father in heaven give the Holy Spirit to those who ask him!" (Luke 11: 9-13)

Time Cover – May 2013

பொதுக்காலம் - 17ம் ஞாயிறு

"இறைவனை அடைவதற்கு நான் என்ன முயற்சிகள் செய்யவேண்டும்?" என்று, சீடர், குருவிடம் கேட்டார். "சூரியன் உதிப்பதற்கு நீ என்ன முயற்சிகள் செய்யவேண்டும்?" என்று, குரு, மறு கேள்வி கேட்டார்.
எரிச்சலடைந்த சீடர், "பின் எதற்கு இத்தனை செபப் பயிற்சிகளைக் கற்றுத்தருகிறீர்கள்?" என்று சூடாகக் கேட்டார். "சூரிய உதயத்தின்போது, நீ விழித்திருக்கவே, இந்த பயிற்சிகள் எல்லாம்" என்று அமைதியாய்ப் பதில் சொன்னார் குரு.
(Fr.Brian Cavanaugh எழுதிய “The Sower's Seeds” என்ற நூலில் காணப்படும் கதை)

ஏன் செபிப்பது? எப்படி செபிப்பது? எப்போது செபிப்பது? எங்கே, எதற்காக செபிப்பது?... என்ற கேள்விகள் நம்மில் அடிக்கடி எழுகின்றன. இயேசுவின் சீடர்களுக்கும் இக்கேள்விகள் எழுந்தன. அவற்றை இயேசுவிடம் கேட்க, அவர்கள், நல்லதொரு தருணத்திற்காகக் காத்திருந்தனர். அன்று, இயேசு, ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும், அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும் என்றார். (லூக்கா நற்செய்தி 11: 1) இன்றைய நற்செய்தி இவ்வாறு ஆரம்பமாகிறது.

இப்படிப்பட்ட ஒரு விண்ணப்பத்திற்குக் காத்துக்கொண்டிருந்தவரைப் போல் இயேசு, செபிப்பது பற்றிய அழகான பாடத்தைச் சொல்லித் தந்தார். அவர் சொல்லித்தந்த பாடம், செபத்தைப் பற்றிய நீண்ட, அறிவுப்பூர்வமான விளக்கமாக அமையவில்லை. மாறாக, அவர் சொல்லித் தந்ததெல்லாம்... ஒரு செபம், ஒரு கதை, ஒரு நம்பிக்கைக் கூற்று.
இறைவனிடம் வேண்ட கற்றுக்கொடும் என்று சீடர் எழுப்பிய விண்ணப்பத்திற்கு விடையாக, "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: ..." (லூக்கா 11: 2) என்று கூறிய இயேசு, தொடர்ந்து வெளியிட்ட சொற்கள், காலத்தால் அழியாத ஒரு செபமாக அமைந்துள்ளது. இயேசு சொல்லித்தந்த விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே என்ற இச்செபத்தை, Universal Prayer அதாவது, உலகக் குடும்பத்தின் வேண்டுதல் என்று, தயக்கமின்றி கூறலாம்.

அழகிய இச்செபத்தைச் சொல்லித்தந்த இயேசு, அதைத் தொடர்ந்து, அழகியதோர் உவமையைச் சொன்னார். பொதுவாக, இயேசு, தன் உவமைகளை, "ஒரு ஊரில் ஒரு இராஜா இருந்தார்" என்ற பாணியில் துவக்குவார். ஒரு சில உவமைகளை மட்டுமே, "உங்களில் ஒருவர்..." என்ற பாணியில் துவக்கியுள்ளார். (காண்க. லூக்கா 11:5; 15:4) இந்த உவமையை, "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று" என்று இயேசு துவக்கியதன் வழியே, தன்னைச் சுற்றிநின்ற பலரும், இக்கதையில் கூறப்பட்ட பாத்திரங்களாக, குறிப்பாக உதவிகேட்டுச் சென்ற மனிதராக மாறும்படி, இயேசு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை, இயேசு, இன்று நமக்கும் விடுத்துள்ளார்.
இறைவனிடம் எவ்விதம் வேண்டுவது என்பதைத் தெளிவுபடுத்த, இயேசு இந்த உவமையைக் கூறியிருந்தாலும், இக்கதையில், இயேசு சித்திரிக்கும் எளிய வாழ்வு, வேறுசில பாடங்களையும் சொல்லித் தருகின்றது. இயேசு கூறும் காட்சி, மனதில் இதமான எண்ணங்களையும், உணர்வுகளையும் உருவாக்குகின்றது. அதே நேரம், நாம் வாழும் இன்றைய சமுதாயத்திற்குச் சவால்களையும் முன்வைக்கிறது.

இஸ்ரயேல் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் பயணம் செய்யும் ஒருவர், ஓர் ஊரை அடைகிறார். இருள் பரவ ஆரம்பித்ததால், அவர் அந்த ஊரிலேயே தங்க முடிவு செய்கிறார். அதுவும், அவ்வூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், இரவு சென்று சேர்கிறார். எந்நேரம் ஆனாலும் சரி, தன் நண்பர் வீட்டில் தனக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதில் அத்தனை நம்பிக்கை அவருக்கு. பயணக் களைப்புடன், பசியுடன், வீடுதேடி வந்த நண்பருக்கு கொடுக்க உணவு எதுவும் இல்லை. எனவே, அவர் தன் அடுத்தவீட்டு நண்பரிடம் உணவு கேட்டுச் செல்கிறார், நடு இரவில். அடுத்தவீட்டு நண்பரை, அந்த நடு இரவில் எழுப்பலாமா, வேண்டாமா என்ற தயக்கம் ஏதுமில்லாமல், அவர் வீட்டுக் கதவைத் தட்டுகிறார், நம் உவமையின் நாயகன்!
அறிவிப்பு ஏதுமின்றி வரும் விருந்தினர், அவருக்கு உணவு பரிமாற, அடுத்த வீட்டினரை இரவில் எழுப்பும் நண்பர் என்று, இக்கதையில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள்... இப்படியும் நடக்கமுடியுமா என்ற வியப்பை நம்முள் உருவாக்குகின்றன.

நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும், இதையொத்த நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவை, வசதிகள் நிறைந்த மாளிகைகளில் நடப்பது அரிது. எளிய, குடிசைகளில் இன்றும் நடக்கத்தான் செய்கின்றன. எளியோர் நடுவே நிலவும் விருந்தோம்பல் குறித்து, சென்ற வாரம் சிந்தித்தோம்; இன்று, மீண்டும் ஒருமுறை, எளியோரின், பாசம், பகிர்வு, ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கை ஆகிய அற்புதப் பண்புகளை உணர்ந்து பார்க்க, இவ்வுவமை, நம்மை அழைக்கிறது.

நள்ளிரவில் தன் நண்பனிடம் உதவி கேட்டுச் சென்ற நம் நாயகனைப் புரிந்துகொள்ள முயல்வோம். William Holman Hunt என்ற ஆங்கிலேய ஓவியர், 1895ம் ஆண்டு தீட்டிய ஓர் அற்புதமான ஓவியத்தின் பெயர் - The Importunate Neighbour - ஆதாவது, ‘நேரம் காலம் தெரியாமல் வந்து தொல்லை கொடுக்கும் அடுத்தவீட்டுக்காரர். நாம் இன்று சிந்திக்கும் உவமையின் நாயகனுக்கு ஓவியர் William Hunt அவர்கள் வழங்கியுள்ள பட்டம் அது.
நிலவொளி வீசும் ஒரு குறுகியத் தெருவில், மூடப்பட்ட ஒரு கதவின் மீது சாய்ந்தபடி, அதைத் தட்டிக்கொண்டு நிற்கிறார், நமது உவமையின் நாயகன். அவர் அக்கதவை தட்டிக்கொண்டிருக்கிறார் என்பதற்குப் பதில், முட்டிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லும் வகையில், ஓவியர், நமது நாயகனைத் தீட்டியுள்ளார்.
இன்றைய நற்செய்தியில், "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற புகழ்பெற்ற சொற்களை இயேசு கூறியுள்ளதைக் காண்கிறோம். 'தட்டுங்கள்' என்ற சொல்லுக்குப்பதில், 'முட்டுங்கள்', அதாவது, 'விண்ணகக் கதவை முட்டுங்கள், அது முழுமையாகத் திறக்கும்' என்று இயேசு கூறியிருந்தாலும் வியப்பில்லை. நேரம், காலம் கருதாமல், மனம் தளராமல், உங்கள் முழு வலிமையோடு இடைவிடாமல் செபியுங்கள் என்பதே, இயேசு இந்த உவமை வழியே சொல்லவந்த கருத்து.

செபிப்பதற்குத் தேவையான பல அம்சங்களில், மூன்று அம்சங்களை, நமது நாயகன் சொல்லித்தருகிறார். 1- நமது கதை நாயகன், தன் பசியைத் தீர்த்துக்கொள்வதற்கு அல்ல, தன் நண்பரின் பசியைத் தீர்க்க, அடுத்தவரை நாடிச் செல்கிறார். 2- அடுத்தவரிடம், தன் உண்மை நிலையை, ஒளிவு மறைவின்றி எடுத்துச் சொல்கிறார். 3- நண்பர், கதவைத் திறக்காதபோதும், நம்பிக்கையுடன், தன் விண்ணப்பத்தைத் தொடர்கிறார். இம்மூன்று அம்சங்களையும், சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.

முதல் அம்சம்... தன் பசிக்காக அல்ல, தன் நண்பரின் பசியைப் போக்க, அடுத்தவர் உதவியைத் தேடிச்சென்ற நமது நாயகனைப் போல, நமது செபங்களில், அடுத்தவர் தேவைகளை ஏந்திச்செல்வது அழகு. சுயநலத்தில் சுகம்காண்பதற்கும், நம் சுயநலத்தேவைகளை, ஆசைகளை கூட்டிக்கொண்டே செல்வதற்கும் சொல்லித்தரும் இன்றைய உலகப்போக்கிற்கு ஒரு மாற்று அடையாளமாக, நமது உவமையின் நாயகனை நாம் எண்ணிப்பார்க்கலாம்

21ம் நூற்றாண்டு, "நான், என்னுடையது, எனக்கு" என்பதை, தேவைக்கதிகமாக வலியுறுத்தும் நூற்றாண்டாக மாறிவருகிறதோ என்ற கவலை உலகில் பரவியுள்ளதைப் பார்க்கிறோம். இந்தக் கவலையை மையப்படுத்தி, TIME வார இதழ், 'The ME ME ME Generation' - அதாவது, 'எனக்கு, எனக்கு, எனக்கு தலைமுறை' என்ற முதல்பக்கக் கட்டுரை ஒன்றை 2013ம் ஆண்டு மே மாதம் (May 20, 2013) வெளியிட்டது. 1980ம் ஆண்டுக்கும், 2000மாம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் பிறந்து, தற்போது 13 முதல், 33 வயதுக்கு உட்பட்ட இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தங்களைச் சுற்றியே உலகம் இயங்குகிறது என்ற எண்ணத்தில் அதிகம் வளர்ந்துள்ளனர் என்று, கட்டுரை ஆசிரியர் Joel Stein அவர்கள் கூறுகிறார். தண்ணீரில் தோன்றிய தன் பிம்பத்தின் அழகை இரசிப்பதில், தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட, 'Narcissus' என்ற கிரேக்கப் புராண நாயகனுடன், இத்தலைமுறையினரை ஒப்பிட்டுள்ளார் ஆசிரியர். தற்போதைய தொடர்பு சாதன நுட்பங்களை இத்தலைமுறையினர் பயன்படுத்தும் வழிகள், ஓர் எடுத்துக்காட்டு.

30 வயதுக்குட்பட்ட பல இளையோர், தங்களை, தங்கள் வாகனங்களை, தங்கள் செல்ல மிருகங்களை புகைப்படம் எடுத்து, அவற்றை Facebook, Twitter, Instagram வழியே வெளியிடுகின்றனர். அந்தச் சுயவிளம்பரத்தை, எத்தனை பேர் விரும்பினர், விரும்பவில்லை என்பதை அறிய, அப்பக்கங்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பார்க்கின்றனர் என்று Joel Stein அவர்கள் கூறியுள்ளார். தன்னைச் சுற்றியே இவ்வுலகம் இயங்குகிறது என்ற ஒரு மயக்கத்தில் வாழும் தலைமுறை இது என்பதை, அவர் பல புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளார்.
'Narcissus' என்ற அந்த புராண நாயகனின் பெயர், 'narke' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்த ஒரு பெயர். 'narke'ன் பொருள்... 'உறக்கம், மயக்கம், அல்லது, மரத்துப்போன ஒரு நிலை.' நான், எனது, எனக்கு என்ற மயக்க நிலையில், மரத்துப்போன மனசாட்சியுடன் வாழும் நமக்கு, இன்றைய உவமையின் நாயகன் சொல்லித்தரும் ஓர் உன்னத பாடம், நமது செபங்களில், நம் தேவைகளைவிட, அடுத்தவர் தேவைகளை ஏந்திச் செல்வது அழகு, என்ற பாடம்.
"எனக்கு இதைத் தாரும், அதைத் தாரும்" என்று தன்னைச் சுற்றியே செபங்களை எழுப்புவதற்குப் பதில், அடுத்தவரது தேவைகளை நம் செபங்களில் சுமந்துசெல்வது இன்னும் அழகானது. அடுத்தவரது தேவைகள், நம் எண்ணங்களையும், மனதையும் நிறைக்கும்போது, நமது தேவைகள், குறையவும், மறையவும் வாய்ப்புண்டு.

நம் உவமையின் நாயகன், அடுத்தவீட்டு நண்பரிடம் கூறிய சொற்கள், உண்மையான செபத்தின் இரண்டாவது அம்சத்தை வெளிப்படுத்துகின்றன. அதுதான், தனது உண்மை நிலையை உள்ளவாறு எடுத்துரைத்தல். "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" (லூக்கா நற்செய்தி 11: 5-6) என்பதே, நமது கதை நாயகன் எழுப்பும் வேண்டுதல். நெருங்கிய நண்பருக்கு முன், தன் குறையை எடுத்துரைக்க, மிகுந்த பணிவும், துணிவும் தேவை.
நம்மில் பலர், நமது உண்மை நிலையை, குறிப்பாக, நமது குறைகளை மறைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். நமது உண்மை நிலையை மறைத்து வாழ்வதற்கு, நாம் முகமூடிகள் அணிய வேண்டிவரும். இல்லாததை, இருப்பதுபோலவும், இருப்பதை, இல்லாததுபோலவும், மற்றவர்களிடம் காட்ட, நாம், பல வேடங்கள் புனைந்து நடிக்க வேண்டிவரும். உண்மையான நண்பர்கள் மத்தியில், இத்தகைய ஒளிவு மறைவுகள் வளரும்போது, நட்பிலும் விரிசல்கள் விழும்.
'நண்பருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்ற வேண்டுதலை எழுப்பும் நம் உவமையின் நாயகன், நம்மிடம் உள்ள நிறை, குறைகளை ஏற்றுக்கொள்ளும் பணிவான, துணிவான மனநிலையைக் கற்றுத்தருகிறார்.

மூடிய கதவு, உதவி செய்ய மறுப்பு என்ற பல தடைகளையும் எதிர்கொண்டு, தன் முயற்சியைத் தொடர்ந்த நம் கதையின் நாயகன், மனம் தளராமல் செபிக்கவேண்டும் என்ற மூன்றாவது அம்சத்தைச் சொல்லித்தருகிறார். ஒரு சில வேளைகளில், நமது செபத்தில் இறைவனுடன் போராடுவதுபோலத் தோன்றினாலும், மனம் தளராமல் செபிக்க வேண்டியிருக்கும். இதற்கு, இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்க நூல் 18: 20-32) நாம் சந்திக்கும் ஆபிரகாம் ஒரு கூடுதல் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

செபம் என்பது, கடவுளுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல். சில வேளைகளில், இந்த உரையாடல், உரசலாகி, உஷ்ணமாகி, கடவுளுடன் எழும் வாக்குவாதமாகவும் மாறும். ஒரு நகரத்தைக் காப்பாற்ற, ஆபிரகாம், இறைவனுடன் பேரம் பேசும் இந்த முயற்சி, ஒரு செபம். கடவுள் மட்டில், ஆபிரகாமுக்கு, பாசமும் உண்டு, பயமும் உண்டு. எனவே, 50 பேர் இருந்தால் சோதோம் நகரைக் காப்பாற்றுவீர்களா? என்று ஆரம்பித்து, 45 40 பேர் என்று படிப்படியாகக் குறைத்து, இறுதியில் 10 பேர் என்ற அளவுக்குக் கடவுளை இழுத்துவருகிறார் ஆபிரகாம். சந்தையில் நடக்கும் பேரம் போல இது தெரிந்தாலும், ஒரு நகரைக் காப்பாற்றவேண்டும் என்று ஆபிரகாம் கொண்டிருந்த ஆதங்கம் இதை ஒரு செபமாக மாற்றுகிறது. கடவுளுக்கும், ஆபிரகாமுக்கும் இடையே நிகழும் இந்தப் போட்டி, தனக்கு வேண்டியதைப் பெற அடம்பிடிக்கும் ஒரு குழந்தையை நினைவுக்குக் கொணர்கிறது.

பொதுவாகவே, குழந்தை மனதை வளர்த்துக் கொண்டால், செபம் எளிதாகும். குழந்தைகளைப் போல் நாம் மாறவேண்டும் என்று இயேசு சொன்னதற்கு, இதுவும் ஒரு காரணம். இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில், குழந்தை-தந்தை உறவைப் பற்றியும், விண்ணகத் தந்தையைப் பற்றியும், ஒரு தெளிவை எடுத்துச்சொல்லி, இறைத்தந்தையிடம் வேண்டுவது எப்படி என்ற தன் பாடங்களை நிறைவு செய்கிறார். நாமும் இந்தப் பாடங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
லூக்கா 11: 9-13
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!


23 July, 2019

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 6


Garbage left by devotees in a shrine in the Philippines

பூமியில் புதுமை – கழிவும், குப்பையும் அற்ற வழிபாட்டுத் தலங்கள்

ஞெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துதல், கவனமின்றி, அவற்றைத் தூக்கியெறிதல் ஆகியவற்றால் உருவாகும் ஆபத்துக்களை நினைவுறுத்தும்வண்ணம், 'இந்து தமிழ் திசை' இணைய இதழில், துணிப்பை பிரசாரகர் என்ற புனைப்பெயருடன், தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வரும், கிருஷ்ணன் அவர்கள், அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையில், பல்வேறு மத வழிபாட்டுத்தலங்கள், சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டான தலங்களாக விளங்கவேண்டும் என்ற பரிந்துரையை வலியுறுத்தியுள்ளார். திருவாளர் கிருஷ்ணன் அவர்கள் வழங்கியுள்ள கருத்துக்களைத் தழுவி எழுந்த எண்ணங்கள் இதோ:
வானில் பறக்கும் பறவை முதல், கடலில் வாழும் ஆமைவரை, அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கக்கூடிய, ஆற்றலும், கடமையும் படைத்தவர்கள், மனிதர்கள் என்பதை, நம் மத நூல்கள் சொல்கின்றன. அனைத்து மதங்களும், உயிர்களிடத்து அன்பைச் செலுத்த சொல்கின்றன. இந்தப் புவியை மனிதகுலத்திடம் கடவுள் ஒப்படைத்தார் என்கின்றன. ஆனால், நாமோ, புவியைக் காக்கத் தவறியதோடு, ஒரு இலட்சம் உயிரின வகைகளை, அணு அணுவாகக் கொன்றுவருகிறோம்; பூமியின் இயற்கைச் சமநிலையை நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறோம். பாலுக்காக மாட்டை நம்பியிருக்கும் நாம், தெருவில் தூக்கியெறியும் ஞெகிழிக் குப்பை அதன் வயிற்றுக்குள் செல்வதைப்பற்றி இன்னமும்கூடக் கவலைப்படாமல்தான் இருக்கிறோம்.
மனிதர்கள், சுற்றுச்சூழல் மீது, கட்டவிழ்த்துவிட்டுள்ள அழிவு வெறியை, எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது? பூமியின் வளங்களைச் சுரண்டுதல், காடுகளை அழித்தல், பூர்வகுடிகளை வேரறுத்தல், சுற்றுச்சூழலை சிதைத்தல் என்ற கொடுமைகளை, எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது?
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அத்தியாவசியம் குறித்து, மதத்தலைவர்கள், மக்களிடையே வலியுறுத்தவேண்டிய நெருக்கடியானச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வழிபாட்டுத் தலங்கள் உயிரினங்களைப் போற்றும் பல்லுயிர் மையங்களாக உருமாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும், எந்தக் கழிவையும், குப்பையையும் உருவாக்காத (Zero Waste) தலமாக மாறவேண்டிய நாட்களைக் கடந்துகொண்டிருக்கிறோம்.
மதத்தலைவர்கள் மட்டும் அல்ல, வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பவர்கள் முதல், வழிபடச் செல்லும் பக்தர்கள்வரை, அனைவரும், இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும், சுற்றுச்சூழல் நலனைப் பேணுவதில், ‘மற்றத் தலங்களைவிட எங்கள் தலமே சிறந்தது என்ற பெருமையை எட்ட முயலவேண்டும். (இந்து தமிழ் திசை)

The drowning of the Gerasenes pigs

ஒத்தமை நற்செய்தி கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 6

கெரசேனர் பகுதியில், தீய ஆவி பிடித்த ஒரு மனிதரிடமிருந்து இயேசு, ஆயிரக்கணக்கான தீய ஆவிகளை விரட்டியப் புதுமையின் இறுதி வரிகளில், நம் தேடல் பயணம், இன்று தொடர்கிறது. இப்புதுமை நிகழ்ந்த வேளையில், அங்கு, இயேசுவின் சீடர்களும், பன்றிகளை மேய்த்த பணியாளர்களும் மட்டுமே இருந்திருப்பர் என்பதை, சென்றத் தேடலில் நாம் சிந்தித்தோம். அம்மனிதரிடமிருந்து வெளியேறிய தீய ஆவிகள் புகுந்ததால், 2000த்திற்கும் அதிகமான பன்றிகள், கடலில் மூழ்கியதைக்கண்ட பணியாளர்கள், ஊருக்குள் சென்று நடந்ததைக் கூறினர். அவர்கள் தந்த செய்தியைக் கேட்டதும், ஊர் மக்கள் திரண்டு வந்தனர். இக்காட்சியை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு விவரிக்கிறார்:
மாற்கு 5:14ஆ-15
நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து, அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள்.

நற்செய்தியாளர் மாற்கு கூறும் இவ்விவரங்களுடன், நற்செய்தியாளர் லூக்கா, அம்மனிதர், 'இயேசுவின் காலடியில்' அமர்ந்திருந்தார் என்ற கூடுதல் விவரத்தை வழங்கியுள்ளார். "பேய்கள் நீங்கப்பெற்றவர், ஆடை அணிந்து, அறிவுத்தெளிவுடன், இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு (மக்கள்) அஞ்சினர்" (லூக்கா 8:35) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லூக்கா வழங்கும் இந்தக் கூடுதல் விவரம், மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளின் இல்லத்தில் நிகழ்ந்ததை நம் நினைவுக்குக் கொணர்கிறது. ஜூலை 21, கடந்த ஞாயிறன்று, லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் வாசித்தப் பகுதியில், "அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்" (லூக்கா 10:38-39) என்று கூறப்பட்டுள்ளது. இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பது, அவரிடம், ஒருவர் கொண்டிருக்கும் முழுமையான ஈடுபாட்டைக் குறிக்கிறது.

ஆடை அணிந்து, அறிவுத்தெளிவுடன், ஆண்டவரின் காலடியில் அமர்ந்திருந்த அம்மனிதரைக் கண்டு, ஊர் மக்கள் மிகழ்ந்திருக்கவேண்டும். ஒருவேளை, ஊர் மக்களோடு சேர்ந்து வந்திருந்த அம்மனிதரின் குடும்பத்தினர் இதைக்கண்டு மகிழ்ந்திருப்பர். ஊர் மக்களோ, "அச்சமுற்றனர்" என்று, மாற்கும், லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர். ஊர் மக்கள் ஏன் அச்சமுற்றனர் என்பதை ஆய்வு செய்யும்போது, நாம் வாழும் இன்றைய சமுதாயத்தின் ஒரு சில வேதனையான உண்மைகள், வெளிச்சத்திற்கு வருகின்றன.

இப்புதுமையின் துவக்கத்தில், தீய ஆவி பிடித்தவரை அறிமுகப்படுத்திய வரிகளில், அவர், சங்கிலிகளை உடைத்து, கல்லறைகளில் கூச்சலிட்டு, கற்களால் தன்னையே காயப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார் என்ற விவரங்கள் (காண்க. மாற்கு 5: 3-5) கூறப்பட்டுள்ளன. நற்செய்தியாளர் மத்தேயு, தீய ஆவி பிடித்த இருவரை அறிமுகம் செய்யும்போது, "அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்" (மத். 8:28) என்று குறிப்பிட்டுள்ளார். இயேசுவைச் சந்திப்பதற்குமுன், தீய ஆவி பிடித்த மனிதர் (அல்லது, இரு மனிதர்கள்) வாழ்ந்த விதம் கண்டு ஊர் மக்கள் கட்டாயம் அச்சமுற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் நலமடைந்து, அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டபின்னரும், அவர்கள் 'அச்சமுற்றார்கள்' என்று கூறியிருப்பது, ஆச்சரியம் தருகிறது.

அவர்கள் ஏன் 'அச்சமுற்றார்கள்' என்பதைப் புரிந்துகொள்ள, மாற்கு நற்செய்தியில் நாம் காணும் அடுத்த இறைவாக்கியம் உதவியாக உள்ளது. "நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்." (மாற்கு 5:16) என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.
ஊர் மக்கள் இப்புதுமையை நேரில் காணாததால், 'நடந்ததைப் பார்த்தவர்கள்', அதாவது, 'பன்றிகளை மேய்த்தவர்கள்' விவரங்களை வழங்கினார்கள். அவர்கள் வழங்கிய விவரங்கள் எத்தகையவை? "பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்". பேய் பிடித்தவருக்கு நேரிட்டதை மட்டும் அவர்கள் பேசியிருந்தால், அது, ஒரு விதமாக ஒலித்திருக்கும். ஆனால், "பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை" அவர்கள் இணைத்து பேசியபோது, அது, வேறு விதமாக ஒலித்திருக்கும். ஒரு மனிதர் குணமாவதற்கு, 2000த்திற்கும் அதிகமான பன்றிகள் அழிவதா என்ற விவாதம் எழுந்திருக்கும்.
மனிதரா, பணமா என்ற விவாதம், பெரும்பாலான நேரங்களில் பணத்தின் பக்கம் சாய்ந்துவிடுவதை நாம் அறிவோம். இதன் விளைவாக, கெரசேனர் ஊர் மக்கள், "தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்" (மாற்கு 5:17) என்று மாற்கு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதர் நலமடைவதற்கு விலையாக, ஊர் மக்களின் பொதுச்சொத்தாகிய 2000த்திற்கும் அதிகமான விலங்குகள் அழிந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

மனித உயிருக்கு விலை நிர்ணயிப்பது, மனிதர்களைவிட பணத்திற்கு, அதிக முக்கியத்துவம் தருவது, நமது சமுதாயத்தை மீண்டும் கல்லறைகளுக்குள் புதைத்துவிடும் என்பதற்கு, 2009ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொடூரம், எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மெக்ஸிகோ நகருக்கருகே நடந்த இந்நிகழ்வு, நம்மை நிலைகுலையச் செய்கிறது. நம் விசுவாசத்திற்கு மீண்டும் ஒரு சவாலைத் தருகிறது.

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலை பெற விழைவோருக்கு மறுவாழ்வு தரும் ஒரு மையம், மெக்சிகோ நகருக்கருகே அமைந்துள்ளது. 2009ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒரு நாள், பட்டப்பகலில், துப்பாக்கி ஏந்திய இரண்டு அல்லது மூன்று பேர், அந்த மறுவாழ்வு மையத்தில் நுழைந்தனர். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலை பெற முயற்சிகளை மேற்கொண்டிருந்த 17 இளைஞர்களை அந்த மையத்தின் வாசலுக்கு கொண்டு வந்தனர். வரிசையாக அவர்களை நிறுத்தி, ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக்கொன்றனர். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலைபெற விழைந்தவர்களுக்கு, நிரந்தர விடுதலை தந்துவிட்ட வெற்றிக் களிப்புடன் அவர்கள் மறைந்தனர். காவல் துறையினர் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று அவ்வேளையில் வெளியான செய்திகள் கூறின. அவர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஆயுத வர்த்தகம் என்ற தீய ஆவியால் இவ்வுலகம் எவ்வளவு தூரம் கட்டுண்டிருக்கிறது என்பதை சென்ற வாரத் தேடலில் சிந்தித்தோம். ஆயுத வர்த்தகம் போலவே, போதைப்பொருள் வர்த்தகமும், பல்லாயிரம் கோடி டாலர்கள் மூலதனத்துடன் நடத்தப்பட்டு வருகிறது என்பது, அனைவரும் அறிந்த உண்மை. அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் நடைபெறும் இத்தொழிலால் அழியும் ஆயிரமாயிரம் மனிதர்களின் ஒரு பிரதிநிதியாக, கெரசேனர் கல்லறைகளிலிருந்து வெளியேறியவரை நாம் எண்ணிப்பார்க்கலாம். கல்லறையிலிருந்து வெளியேறியவரை மீண்டும் மனிதராக மாற்றினார் இயேசு. அவர் மனிதராக மாறியதால், 2000 பன்றிகளை இழந்தோம் என்ற வருத்தம், ஊர் மக்களுக்கு. எனவே, இதுபோன்ற நன்மைகள் தொடராமல் இருப்பதற்காக, "அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்" (மாற்கு 5:17)

கெரசேனரில் நடந்தது, இன்றும் தொடர்கிறது. போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீயபழக்கங்களிருந்து இளையோர் விடுதலை அடைவது, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு வருத்தமாக இருக்கும். இளையோர் அந்த விடுதலையைப் பெறுவதற்கு உதவும் பலரை, போதைப்பொருள் வர்த்தகர்கள், தங்கள் ஊரைவிட்டு போகச் சொல்வார்கள், அப்படிப் போகாமல், அந்த நல்ல உள்ளங்கள், தங்கள் சேவைகளைத் தொடர்ந்தால், அவர்களைக் கொல்லவும் தயங்கமாட்டார்கள், இந்த மரண வியாபாரிகள்.

புனித அன்னை தெரேசா அவர்கள் உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையைச் சேர்ந்த நான்கு அருள் சகோதரிகள், 2016ம் ஆண்டு, மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டில், கொலையுண்ட நிகழ்வை நினைவில் கொணர்கிறோம்.
மனிதர்களாக வாழத் தகுதியற்றவர்கள் என்று சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, ஏறத்தாழ கல்லறைகளில் வாழ்வதுபோல், சேரிகளிலும், சாக்கடைகளிலும் புதைக்கப்பட்டிருந்த மனிதர்களைத் தேடிச்சென்று பணியாற்றி வந்தவர், அன்னை தெரேசா. அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி பணியாற்றும் அருள் சகோதரிகளின் சேவையை விரும்பாத அடிப்படைவாதிகள், ஏமன் நாட்டில் நான்கு அருள் சகோதரிகளையும், அவர்களுடன் உழைத்த 12 பணியாளர்களையும் கொன்றனர். அவர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரே காரணம், அவர்கள் இறைவனின் கருணைக்குச் சாட்சிகளாக வாழ்ந்தனர் என்பது ஒன்றே.

கல்லறைகளில் வாழ்ந்த ஒருவரை, இயேசு மீண்டும் மனிதராக மாற்றிய புதுமையைச் சிந்திக்கும்போது, இத்தகையக் கல்லறை வாழ்வு வாழும் மனிதர்களுக்குப் பணியாற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்வோம். மனிதகுலத்தில் பகைமை, வெறுப்பு, பழிக்குப் பழி இவற்றை வளர்த்து, உலகம் முழுவதையும் கல்லறையாக்கி, அக்கல்லறைகளில், இரவும், பகலும், ஓலமிட்டு வாழும் மனிதர்களை மூலதனமாக வைத்து, இலாபம் சம்பாதிக்கும் மரண வியாபாரிகளை ஆட்டிப்படைக்கும் தீயசக்திகளை இயேசு விரட்டியடிக்க வேண்டுமென மன்றாடுவோம்.

இப்புதுமையின் இறுதி நிகழ்வு நம்பிக்கை தருகிறது. அதாவது, அதுவரை, கல்லறையில் வாழ்ந்துவந்த ஒரு மனிதர், இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியாளராக மாறினார். அந்த இறுதி நிகழ்வை, நாம் அடுத்தவாரத் தேடலில் சிந்திப்போம்.