27 June, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 26

Mineworkers at work at Harmony Gold Mine - Johannesburg

முழுமையான பரிணாம வளர்ச்சி பெற்ற மனித இனம், இவ்வுலகில், 2,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கவேண்டும் என்பது, மனிதவியல் ஆய்வாளர்களின் கணிப்பு. மனித சமுதாயத்தின் வளர்ச்சியை, அவர்களிடம் நிலவிய கலாச்சாரத்தைக் கொண்டு அளவிடமுடியும். இந்த அளவுகோலின்படி, இந்து சமவெளி, சீனா, எகிப்து, கிரேக்கம், இன்கா, அஸ்டெக், மெசப்பொட்டேமியா, அசீரியா கலாச்சாரங்கள், மிகப் பழமையானவை என்று வரலாறு சொல்கிறது.
கலாச்சார வளர்ச்சியை கணிக்க பயன்படுத்தப்பட்ட அளவுகோல்களில் ஒன்று, அம்மக்கள் பயன்படுத்திய கருவிகள். கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பல கருவிகள், கற்களால் செய்யப்பட்டவை. அதற்கு அடுத்த நிலையில், மனிதர்கள் உலோகங்களைப் பயன்படுத்தினர். பூமியின் மேற்பரப்பில் இருந்த கற்களைப் பயன்படுத்திவந்த மனிதர்கள், பூமிக்கடியில் இருந்த உலோகங்களுக்கு அறிமுகமானதும், மண்ணைத் தோண்ட ஆரம்பித்தனர். உலோகங்களின் மின்னும் பண்பு, மனிதர்களை அதிகம் ஈர்க்கவே, மண்ணைத் தோண்டும் முயற்சிகளும் அதிகரித்தன. சுரங்கத் தொழில் உருவானது.

சுரங்கத் தொழிலைப் பற்றி இன்று நாம் பேசுவதற்குக் காரணம், நாம் தேடலை மேற்கொண்டுள்ள யோபு நூலில் காணப்படும் 28ம் பிரிவு. இப்பிரிவு, மிக தனித்துவம் மிக்கது. யோபுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே நிகழ்ந்த மூன்றாவது சுற்று உரையாடலில், 26 முதல் 31 முடிய உள்ள ஆறு பிரிவுகள், யோபு கூறும் பதிலுரையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு பிரிவுகளில் ஒன்றாக இடம்பெறும் 28வது பிரிவு, யோபின் சொற்கள் அல்ல என்றும், இது ஒரு தனிப்பட்ட கவிதை என்றும் விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். யோபு நூலில் இணைக்கப்பட்டுள்ள இக்கவிதை, 'ஞானத்தின் மேன்மை' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
28 இறைச்சொற்றொடர்களைக் கொண்ட இப்பிரிவின் முதல் 11 இறைச்சொற்றொடர்கள், சுரங்கங்களைப் பற்றிப் பேசுகின்றன; குறிப்பாக, சுரங்கங்களை உருவாக்குவதில் மனிதர்கள் மேற்கொள்ளும் கடினமான முயற்சிகளைச் சித்திரிக்கின்றன. யோபு நூல் எழுதப்பட்ட காலத்தில், மனித இனம், சுரங்கங்கள் வழியே பல்வேறு உலோகங்களைக் கண்டுபிடித்து, பயன்படுத்தினர் என்பதை, இப்பிரிவின் அறிமுக வரிகள் கூறுகின்றன:
யோபு 28: 1-2
வெள்ளிக்கு விளைநிலம் உண்டு; பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு. மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது; கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.

இவ்வறிமுக வரிகளில் வெள்ளி, பொன், இரும்பு, செம்பு என்ற நான்கு உலோகங்களை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் வெள்ளியும், பொன்னும், பெரும்பாலும் அணிகலன்களாகவும், இரும்பும், செம்பும், மனிதரின் தினசரி வாழ்வில் பயன்படும் கருவிகளாகவும் பயன்பட்டிருக்க வேண்டும். மின்னும் பண்பு கொண்ட வெள்ளியும், பொன்னும் மனிதர்களை பெருமளவு ஈர்த்ததால், கடினமான முயற்சிகளைச் செய்யத் தூண்டின என்பதை, பின்வரும் வரிகள் கூறுகின்றன:
யோபு 28: 3-4, 9-10
மனிதர் இருளுக்கு இறுதி கண்டு, எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர். மக்கள் குடியிருப்புக்குத் தொலையில் சுரங்கத்தைத் தோண்டுவர்; வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்; மனிதரிடமிருந்து கீழே இறங்கி ஊசலாடி வேலை செய்வர்... கடினப் பாறையிலும் அவர்கள் கைவைப்பர்; மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டிடுவர். பாறைகள் நடுவே சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்; விலையுயர் பொருளையே அவர்களது கண் தேடும்.

இருட்டிலும், சாவின் இருளிலும் பணியாற்றும் சூழல், பூமியின் மேற்பரப்பில் நடமாடும் மனிதரிடமிருந்து கீழே இறங்கி, ஊசலாடியவண்ணம் வேலை செய்தல், மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டுதல் என்று, இவ்வரிகள் விவரிக்கும் கடின முயற்சிகளைக் கேட்கும்போது, சுரங்கத் தொழிலில் தங்களையே பலியாக்கிய கோடான கோடி மனிதர்களை நம் நினைவு அசைபோடுகின்றது.

2010ம் ஆண்டு, அக்டோபர் 12, நள்ளிரவு. சிலே நாட்டில் மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். நள்ளிரவு தாண்டி பத்து நிமிடங்களில், அந்த நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் வெடித்தது. சிலே நாட்டின் அட்டக்காமா (Atacama) என்ற பகுதியில் பாறையில் செய்யப்பட்ட ஒரு துளை வழியே, குழாய் வடிவக் கருவி ஒன்று வெளியே வந்தது. அந்தக் குழாயிலிருந்து Florencio Avalos என்ற 31 வயது இளைஞர் வெளியேறினார். கண்ணீருடன் ஓடி வந்த அவரது 7 வயது மகனையும், தன் மனைவியையும் கட்டி அணைத்து முத்தமிட்டார். இந்தக் காட்சியைக் கண்ட பலரது கண்களில், ஆனந்த கண்ணீர். நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் அதிர்ந்தது.
2010, ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டில் அட்டக்காமா பகுதியில் 2300 அடி ஆழத்தில், தாமிரம், மற்றும் தங்கம் வெட்டியெடுக்கப்படும் சுரங்கம் ஒன்றில், 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள், சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் அரைமைல் தூரத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பமானது.
அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள் கழித்து, அவர்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையே ஒரு புதுமை என்று பலர் கூறினர். உயிரோடு புதைக்கப்பட்ட 33 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த முயற்சிகளின் பலனாக, 69 நாட்கள் பூமிக்கடியில் புதையுண்டிருந்த 33 தொழிலாளர்களும், அக்டோபர் 14 அதிகாலையில் வெளியேற்றப்பட்டனர்.

ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த இந்த விபத்து உலகின் கவனத்தைப் பல வழிகளில் ஈர்த்தது. அதிலும் முக்கியமாக, 17 நாட்கள் கழித்து 33 தொழிலாளர்களும் உயிரோடு பூமிக்கடியில் புதைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்த பிறகு, உலகமே இந்நிகழ்வை, தொடர்ந்து கவனித்தது. உயிரோடு புதைக்கப்பட்ட இத்தொழிலாளர்களுக்கு உதவிகள் பல வழிகளில் அனுப்பப்பட்டன. உடல் அளவில் அவர்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை விட, அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வழங்கப்பட்ட ஆன்மீக உதவிகள், செப உதவிகள் ஏராளம். அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் கைப்பட ஆசீர்வதித்த செபமாலைகளை இத்தொழிலாளர்களுக்கு அனுப்பி வைத்தார். இத்தொழிலாளர்கள், தாங்கள் அடைபட்டிருந்த இடத்தில், சிறு பீடம் ஒன்றை அமைத்து, செபித்து வந்தனர் என்று செய்திகள் கூறுகின்றன. இதைக் கேள்விப்பட்டபோது, பழங்கால உரோமைய அரசுக்கும், பின்னர் கம்யூனிச அரசுகளுக்கும் தெரியாமல், பூமிக்கடியில், மறைவிடங்களில் கூடி வந்து செபித்த கிறிஸ்தவர்கள், நம் எண்ணங்களில் தோன்றினர். அக்டோபர் 14ம் தேதி, 33 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டதும், அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை: "இன்று, சிலே நாடு, உயிர்ப்பின் மகிமைக்குச் சான்று பகர்ந்துள்ளது."

Chilean miner Esteban Rojas, 44, prays after being brought to surface

சிலே சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட செய்தி உலகின் கவனத்தை ஈர்த்த வேளையில், சுரங்கத் தொழிலால் ஏற்படும் ஆபத்துக்களையும், உயிரிழப்புக்களையும், ஊடங்கங்கள் அசைபோட்டன. உலகின் நிலக்கரி உற்பத்தியில், 40 விழுக்காடு உற்பத்தி செய்வது, சீனா. அதே வேளை, ஒவ்வோர் ஆண்டும் 3000த்திற்கும் அதிகமான தொழிலாளிகள், சீனாவின் சுரங்கங்களில் இறக்கின்றனர்.
பூமியைத் தோண்டி, எவ்வளவுக்கெவ்வளவு கனிமங்களை வெளிக்கொணர்வது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் சுரங்க உரிமையாளர்கள், அங்கு நிலவவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சரிவர பின்பற்றாமல் போவதே, விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றன. சுரங்கத் தொழில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள பயங்கரமான விபத்துக்களில் ஒரு சில இதோ:
1942ம் ஆண்டு, சீனாவின் லியாவோனிங் (Liaoning) எனுமிடத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ, மற்றும் வெடிவிபத்து காரணமாக, 1549 பேர் இறந்தனர். இறந்தோரின் உடல்களை வெளியேற்றுவதற்கு 10 நாட்களுக்கு மேல் ஆனது.
1906ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் கூரியேர்ஸ் (Courrieres) எனுமிடத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து, சுற்றுப்புறத்தையும் பாதித்ததால், பெண்கள், குழந்தைகள், தொழிலாளிகள் என, 1099 பேர் இறந்தனர்.
1975ம் ஆண்டு, அன்றைய பீகார் மாநிலத்தின் தன்பாத் (Dhanbad) நகரின் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால், சுரங்கம் முழுவதும் நீரால் நிரம்பி, 372 தொழிலாளிகள் இறந்தனர்.
இதேபோல், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, தென் ஆப்ரிக்கா, சிம்பாப்வே என, பல நாடுகளில் ஏற்பட்ட சுரங்க விபத்து, நிலச் சரிவு காரணமாக, ஆயிரமாயிரம் உயிர்கள் பலியாகியுள்ளன.

ஆபத்துக்கள் ஆயிரம் சூழந்தாலும், சுரங்கங்களால் பூமிக்கோளத்திற்கு ஈடு செய்யமுடியாத சீரழிவுகள் உருவானாலும், சுரங்கங்கள் தோண்டும் முயற்சிகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் கனிமங்கள், முதலாளிகளின் பேராசைகளை மேலும், மேலும் தூண்டி வருகின்றன.
2008ம் ஆண்டு திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தென் ஆப்ரிக்காவின் தவ் தோனா (Tau Tona) சுரங்கம், உலகிலேயே மிக ஆழமான சுரங்கம் என்று சொல்லப்படுகிறது. 3,900 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இச்சுரங்கத்தில் தங்கம் திரட்டப்படுகிறது. இச்சுரங்கத்தில் அமைந்துள்ள பல்வேறு பாதைகளின் மொத்த நீளம், 800 கிலோ மீட்டர்கள் என்றும், இந்த ஆழத்தில் நிலவும் வெப்பநிலை, 55 முதல் 60 டிகிரி செல்சியஸ் என்றும் கூறப்படுகிறது. 5,600 பேர் பணியாற்றும் இச்சுரங்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது, 5 பேர் இறக்கின்றனர்.
2015ம் ஆண்டு, இச்சுரங்கத்திலிருந்து 58,520 கிலோ கிராம் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு, 18,45,47,000 அமெரிக்க டாலர்கள். இவ்வளவு பணம் திரட்டும் இந்த சுரங்கத்தின் உரிமையாளர்கள் யாரும் சுரங்கத்தில் நுழைந்து, அங்கு நிலவும் கடினச் சூழல்களை அனுபவித்தது கிடையாது. குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு, ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 18 கோடி டாலர்கள் சம்பாதிக்கும் இந்த முதலாளிகள், ஆப்ரிக்கத் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகக் குறைவானதே. ஆப்ரிக்காவில் நிலவும் பஞ்சம், வறுமை, வேலையின்மை ஆகிய அவலங்களை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மிகக் குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்களை பணியமர்த்தி, இந்த முதலாளிகள் அடைந்துவரும் வருமானம், ஏராளம்.

சுரங்கத் தொழிலில் நிலவும் இத்தகைய அநீதிகளையும், இத்தொழிலால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளையும் உணர்வதற்கு நமக்கு ஞானம் தேவை. இதையே, 28ம் பிரிவின் பிற்பகுதியில் ஆசிரியர் அழகாகக் கூறியுள்ளார்.
யோபு 28: 12-13
ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது? மனிதர் அதன் மதிப்பை உணரார்; வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
மனிதரால் எளிதில் உணரமுடியாத 'ஞானத்தின் மேன்மை'யைக் குறித்து, யோபு நூல் ஆசிரியர் கூறும் எண்ணங்களை நம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.


விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 25

Vigil service for the victims of London Bridge attack

2017, மார்ச் மாதத்தின் ஒருநாள், (மார்ச் 7) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், ஓடும் இரயிலில் நிகழ்ந்த ஒரு வெடிகுண்டு தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர், சய்ஃபுல்லா (Saifullah) என்ற இளையவர். அவர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறந்த சய்ஃபுல்லாவின் உடலை அடக்கம் செய்வதற்கு, அவரது தந்தை, சர்தாஜ் (Sartaj) அவர்கள் மறுத்துவிட்டார். "நாங்கள் இந்தியர்கள். நாங்களும், எங்கள் மூதாதையரும் இந்நாட்டில்தான் பிறந்தோம். நாங்கள் பிறந்து, வளர்ந்த தாய்நாட்டைக் காட்டிக்கொடுப்பவர், எங்கள் மகனோ, உறவினரோ கிடையாது" என்று, சர்தாஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இம்மாதத் துவக்கத்தில், (ஜூன் 3, 2017) இலண்டன் மாநகரில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொண்ட மூன்று இளையோரும் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரின் பெயரால் இத்தாக்குதல்கள் நிகழ்ந்தன என்று கருதப்படுகிறது. இந்த மூன்று இளையோருக்கும் இறுதி செபங்களைச் சொல்வதற்கு, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மறுத்துவிட்டனர். பிரித்தானியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் இணைந்து, இந்த மறுப்பை, ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். "இத்தகைய வன்முறைப் பாதையை ஒருவர் பின்பற்றினால், அவர், இஸ்லாமிய நம்பிக்கையிலிருந்து விலகி, இறைவனற்ற இருளுக்குச் செல்கிறார்" என்று மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
புனிதப் போரை மேற்கொள்பவர்களுக்கு, உடனடியாக, நேரடியாக, விண்ணகம் கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளைத் தந்து, இளையோர் உள்ளங்களை மூளைச்சலவை செய்து, வன்முறையின் பக்கம் திருப்பும் தீவிரவாதிகளின் தவறான படிப்பினைகளை முறியடிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஓர் இஸ்லாமிய மதத்தலைவர், "பொதுவாக, எந்த ஒரு சூழலில் ஒருவர் இறந்தாலும், அவருக்கு இறுதிச் செபங்கள் சொல்வதன் வழியே, அவர் மறுவாழ்வில் தங்களுடன் பேரின்பத்தில் இணைவதற்கு வாய்ப்பு தரப்படுகிறது. ஆனால், இந்த மூன்று பேருக்கு அந்த வாய்ப்பைத் தர எங்களுக்கு விருப்பமில்லை" என்று கூறினார்.

மகனுக்கு அடக்கச் சடங்குகள் செய்வதற்கு மறுத்த தந்தை, இறந்த இளையோருக்கு இறுதிச் செபங்கள் சொல்ல மறுத்த மதத்தலைவர்கள் என்ற இவ்விரு செய்திகளையும் கேட்கும்போது, யோபு நூல், 24ம் பிரிவில், தீயோரைப் பற்றி, யோபு கூறிய சொற்கள் நம் நினைவுக்கு வருகின்றன. இதையொட்டி, சென்ற விவிலியத் தேடலின் இறுதியில் நாம் கூறிய வரிகளை, மீண்டும் ஒருமுறை நினைவுக்குக் கொணர்வோம்:
மனித வாழ்வு துவங்குவது, கருவறையில்; முடிவது, கல்லறையில். இவ்விரு இடங்களிலும், மனிதர்கள் ஓரளவு மதிப்பு பெறவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. ஆனால், 'கருப்பையே அவர்களை மறக்கும்' என்றும், கல்லறைப் புழுக்கள் அவர்களைச் சுவைத்துத் தின்னும் என்றும் யோபு சொல்லும்போது, தீயோரை, கருப்பையில் சுமந்த பெற்றோர் அவர்களை மறுதலிப்பர் என்பதும், பிறந்ததும், இறந்ததும் தெரியாமல், தீயோர் அழிந்துபோவர் என்பதும், ஆணித்தரமாகச் சொல்லப்பட்டுள்ளன.

இரயில் தாக்குதலை மேற்கொண்ட சய்ஃபுல்லா தங்கள் மகனே அல்ல என்று அவரது தந்தை சர்தாஜ் அவர்கள் கூறும்போது, 'கருப்பையே அவரை மறக்கும்' என்று யோபு கூறுவதன் பொருள் விளங்குகிறது. அதேபோல், இலண்டன் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கொல்லப்பட்டப் பின்னர், அவர்களுக்கு இறுதி செபங்களைச் சொல்ல, மதத்தலைவர்கள் மறுத்தனர் என்பதைக் கேள்விப்படும்போது, இத்தகைய தீமைகளை உலகில் வளர்ப்பவர்கள், மரணத்திலும் மறக்கப்படுவர் என்பது தெளிவாகிறது. இதைத்தான், 'புழுக்கள் அவர்களைச் சுவைத்துத் தின்னும்' என்று யோபு கூறும் சொற்களின் பொருளாக நாம் புரிந்துகொள்கிறோம்.

மூன்றாவது சுற்று உரையாடலில், நண்பர் எலிப்பாசு கூறியவற்றிற்கு, யோபு நூல், 23, 24 ஆகிய இரு பிரிவுகளில் யோபு அளித்த பதிலைத் தொடர்ந்து, 25ம் பிரிவில், நண்பர் பில்தாது பேசுகிறார். 5 இறைச்சொற்றொடர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள இவரது கூற்று, இறைவன் எவ்வளவு பெரியவர் என்றும், மனிதர்கள் எவ்வளவு சிறியவர் என்றும் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, 26ம் பிரிவு முதல், 31ம் பிரிவு முடிய, 6 பிரிவுகள், யோபின் பதில் மொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு பிரிவுகளைப் பற்றி, விவிலிய விரிவுரையாளர்கள், வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 26, 27 பிரிவுகளில், இன்னும் சொல்லப்போனால், 24 முதல், 27 முடிய உள்ள 4 பிரிவுகளில், பலரது கூற்றுகள் ஒரு குவியலாகத் திரட்டப்பட்டுள்ளன என்று, இயேசு சபை அருள்பணியாளரும், பேராசிரியருமான ஜோசப் கொட்டெர்ஸ்கி (Joseph Koterski) என்பவர் கூறியுள்ளார்.

அவரைப் பொருத்தவரை, 4ம் பிரிவு முதல், 23ம் பிரிவு முடிய, யோபும், அவரது 3 நண்பர்களும் ஒருவர்பின் ஒருவராகப் பேசிவந்தனர். அடுத்தவர் பேசுவதைக் கேட்டு, தங்கள் வாய்ப்பு வரும்வரைக் காத்திருந்து, பேசிவந்த நால்வரும், பொறுமையிழந்து, ஒரே நேரத்தில் பேச ஆரம்பித்துவிட்டதைப்போல் தெரிகிறது என்று, கொட்டெர்ஸ்கி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நால்வரும் ஒரே நேரத்தில் பேசுவதைப் பதிவு செய்த ஆசிரியர், இந்த நான்கு பிரிவுகளில், தொடர்பற்ற வகையில், தான் கேட்டதையெல்லாம் திரட்டித் தந்துள்ளார் என்று, அருள்பணி கொட்டெர்ஸ்கி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

கருத்துக் கோர்வையின்றி, குழப்பமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நான்கு பிரிவுகளிலும், ஆங்காங்கே, அழகான, மிக ஆழமானப் பகுதிகளைக் காணமுடிகிறது என்று, யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய அழகியப் பகுதிகளில் ஒன்று, 27ம் பிரிவின் துவக்கத்தில் உள்ளது. இப்பகுதி, உண்மையில், யோபின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட சொற்களாக ஒலிக்கின்றன:
யோபு 27: 2-6அ
என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை! அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்; எல்லாம் வல்லவர் எனக்கு வாழ்வைக் கசப்பாக்கினார். என் உடலில் உயிர் இருக்கும்வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை, என் உதடுகள் வஞ்சகம் உரையா; என் நாவும் பொய்யைப் புகலாது... சாகும்வரையில் என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன். என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்; விடவே மாட்டேன்; என் வாழ்நாளில் எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.

உண்மை பேசுவோருக்கு அரிச்சந்திரனையும், வாரி வழங்குவோருக்கு பாரியையும் எடுத்துக்காட்டாகக் கூறுவதுபோல், பொறுமையுள்ளோருக்கு, யோபை ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக, இலக்கணமாக நாம் சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால், இதுவரை நாம் சந்தித்த யோபிடம், பொறுமை அதிகம் காணப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, தான் நேரிய உள்ளம் கொண்டவர் என்றும், தன்னை வதைப்பது இறைவனே என்றாலும், அவரிடம் தன் நம்பிக்கை குறையவில்லை என்றும் யோபு கூறுவதை நாம் இந்நூலில் அடிக்கடி கேட்டு வருகிறோம். எனவே, யோபை, பொறுமையுள்ளோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாகச் சிந்திப்பதற்குப் பதில், நேரிய உள்ளம் கொண்டோருக்கு, வாய்மையைக் கைவிடாதோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாக நாம் சிந்திக்கலாம். யார் என்ன சொன்னாலும், தன் நேர்மையின் மீதும், வாய்மையின் மீதும் யோபு கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை, யோபு நூல் முழுவதும், வெவ்வேறு பகுதிகளில் வெளிவருகின்றது. 27ம் பிரிவின் துவக்க வரிகளும் இதே உணர்வைப் பதிவு செய்துள்ளன.

24ம் பிரிவின் பிற்பகுதியில், தீயோருக்கு நேரும் அவலங்கள் கூறப்பட்டுள்ளதுபோல், 27ம் பிரிவின் பிற்பகுதியிலும், 'கொடிய மனிதர் இறைவனிடமிருந்து பெறும் பங்கு' (27:13) எத்தகையதாய் இருக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வரிகளை, யோபு கூறவில்லை என்பது, பல விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.
மூன்றாவது சுற்று உரையாடலில், எலிப்பாசு, பில்தாது இருவரின் கூற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன (யோபு நூல், 22, 25 பிரிவுகள்). ஆனால், மூன்றாவது நண்பர் சோப்பாரின் கூற்று காணப்படவில்லை. 27ம் பிரிவின் பிற்பகுதியில் காணப்படும் 11 இறைச்சொற்றொடர்கள், சோப்பாரின் கூற்றாக இருக்கலாம் என்பது, ஆய்வாளர்களின் கணிப்பு.
இவ்வரிகளை, யோபு கூறியிருந்தாலும் சரி, சோப்பார் கூறியிருந்தாலும் சரி, இவ்வரிகளில் கூறப்பட்டுள்ள எண்ணங்கள், இன்றைய நிலையை சித்திருப்பதாகவும், நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளன:
யோபு 27: 13-16,18-19
இதுவே கொடிய மனிதர் இறைவனிடமிருந்து பெறும் பங்கு; பொல்லாதவர் எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து. அவர்களின் பிள்ளைகள் பெருகினும் வாளால் மடிவர்; அவர்களின் வழிமரபினர் உண்டு நிறைவடையார். அவர்களில் எஞ்சியோர் நோயால் மடிவர்; அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார். மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்; அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்... சிலந்தி கூடு கட்டுவதுபோலும், காவற்காரன் குடில் போடுவதுபோலும் அவர்கள் வீடு கட்டுகின்றனர். படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்; ஆனால் இனி அவ்வாறு இராது; கண் திறந்து பார்க்கின்றனர்; செல்வம் காணாமற் போயிற்று.

சட்டங்களின் கண்களில் மண்ணைத் தூவி, மனசாட்சியின் கண்களைக் கட்டிவிட்டு செல்வம் சேர்ப்பவர் பலரும், ஏதோ ஒருநாள், இத்தகைய நிலையை அடைந்துள்ளனர் என்பதை, வரலாறு அடிக்கடி நமக்கு நினைவுறுத்தி வருகிறது.
தவறான வழிகளில் செல்வம் சேர்ப்போர் அமைதியாக வாழ முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியே! உளவுத் துறை, அல்லது, வருமான வரித்துறையின் படையெடுப்பு எந்நேரமும் நிகழலாம் என்ற அச்சத்துடன் இவர்கள் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்கின்றனர். இந்த அச்சத்தால் தூக்கமின்றி தவிப்போர், தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் ஒவ்வோர் இரவும் நாடவேண்டியிருக்கும். மனசாட்சியைத் தூங்கவைப்பதற்கு அவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும், அது, மீண்டும், மீண்டும் விழித்தெழுந்து, அவர்களை, பல வழிகளில் சித்திரவதை செய்யும் என்பதை, 27ம் பிரிவின் இறுதி வரிகள் இவ்வாறு கூறுகின்றன:
யோபு 27: 20-23
திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்; சுழற்காற்று இரவில் அவர்களைத் தூக்கிச் செல்லும். கீழைக் காற்று அவர்களை அடித்துச் செல்லும்; அவர்களின் இடத்திலிருந்து அவர்களைப் பெயர்த்துச் செல்லும்; ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்; அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர். அவர்களைப் பார்த்து அது கைகொட்டி நகைக்கும்; அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.

விழித்தெழுந்த மனசாட்சி ஒருவரை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கும் என்பதைக் கூறும் இவ்வரிகள், நம் அனைவருக்கும் எச்சரிக்கையாக அமையவேண்டும்! "உன் ஒவ்வொரு குற்றத்திற்கும் அவ்வப்போதே தண்டனை கிடைக்கவில்லை என்றால், நீ அதிபுத்திசாலி என்றோ, இறைவன் இல்லையென்றோ அர்த்தம் இல்லை. உனக்கான தண்டனை கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!" ரௌத்திரன் என்பவர், சமூகவலைத்தளத்தில் பதிவுசெய்துள்ள இந்த வரிகள், யோபு நூல் 27ம் பிரிவின் இறுதி வரிகளில் கூறப்பட்டுள்ள எச்சரிக்கையை உறுதி செய்கின்றன.


17 June, 2017

Christ, sitting on our lap மடியிலேறி அமர்ந்திருக்கும் கிறிஸ்து



Feast of Corpus Christi

The Most Holy Body and Blood of Christ

Most of us would have received our First Holy Communion while in elementary school. At that time, either our Parish Priests or some kind-hearted Nuns would have helped us prepare for this great moment. Part of this preparation takes the form of the catechism class, usually filled with stories. If we have not out-grown these stories, we are blessed indeed! I do remember quite a few of these stories.
I do have very many lovely memories of the way Corpus Christi processions were held in my parish and, later, in other places during my Jesuit life. All these stories and all these memories fill my mind as I reflect on this Feast – the Feast of the Most Holy Body and Blood of Christ.
This Feast is probably THE MOST SIGNIFICANT FEAST to tell us what God’s love is all about. While we are engulfed by love, the best response we can give is to let go… enjoy the experience. If one were to raise questions about love - the how and why of love, then we would almost lose love. Still, human mind is a workshop constantly churning out questions and we cannot avoid this. Let us try and answer some of the questions that creep into our minds about this Love Feast.

Last week when we reflected on the Feast of the Holy Trinity, we said: If at all we wish to understand the great mystery of the Holy Trinity, then we need to raise the proper questions. Not trying to understand the ‘how’ of the mystery, as St Augustine tried, but more in terms of the ‘why’ of the mystery of the Triune God.
Today again, it is much better to raise the ‘why’ question than the ‘how’ question. How is Christ present in the two species – bread and wine? Quite a few treatises have been written on this question. We shall turn our attention to the other question, namely, why is Christ present in bread and wine? Here is my simple answer to this question: First, bread and wine are the simple food of the Israelites, accessible to everyone, including the poor. Jesus wanted to be present in forms that were easily available to all. Second, once food is taken, it gets integrated as our own body and blood. As food is integrated in one’s body, Jesus would like to become integrated with human beings. These answers may not be considered a ‘treatise’; but it makes sense to me.

I guess it is better to leave theoretical explanations on this great Feast and get back to some of the inspiring incidents related to Christ’s Real Presence in the lives of great souls.
Fr Pedro Arrupe S.J., who was the Superior General of the Society of Jesus for fifteen years, narrates how he had personally met Jesus and decided to follow him.
Pedro was a brilliant student of medicine, winning first prizes in his studies at the University of Madrid… In October 1926, nineteen year old Pedro went to Lourdes as a volunteer. One day he accompanied the procession in front of the Grotto, walking beside a mother who was pushing a wheel-chair in which sat her 26 year old son, a polio victim, his body crippled and completely deformed…. Then the Bishop came with the Blessed Sacrament, and made the sign of the Cross with it over the boy. At that instant, the boy leapt from his chair completely cured.
Pedro said: “I returned to Madrid; the books kept falling from my hands. My fellow students asked me: ‘What’s happening to you? You seem dazed!’ Yes, I was dazed by the memory which upset me more each day; only the image of the Sacred Host raised in blessing and the paralyzed boy jumping up from his chair remained fixed in my heart”
Three months later Pedro gave up his medicine studies and entered the Novitiate of the Society of Jesus at Loyola, to a life of ‘distinguished service as a Jesuit’. (Hedwig Lewis S.J., - At Home with God)

The first atom bomb on August 6, 1945, destroyed Hiroshima. The Jesuit novitiate in a suburb of that city was one of the few buildings left standing, though all its doors and windows had been ripped off by the explosion. The novitiate was turned into a makeshift hospital. The chapel, half destroyed, was overflowing with the wounded, who were lying on the floor very near to one another, suffering terribly, twisted with pain.
In the midst of this broken humanity, the novice master, Fr Pedro Arrupe, celebrated Mass the very next day of the disaster. “I can never forget the terrible feelings I experienced when I turned toward them and said, ‘The Lord is with you’. I could not move. I stayed there as if paralyzed, my arms outstretched, contemplating this human tragedy… They were looking at me, eyes full of agony and despair as if they were waiting for some consolation to come from the altar. What a terrible scene!” (Hedwig Lewis S.J., - At Home with God)

St. Isaac Jogues, S.J. was a Jesuit priest, missionary and martyr, who travelled and worked among the Iroquois, Huron, and other Native populations in North America. During his missionary work in North America, he had a chance to escape from the cruel clutches of the native people and return to France. While there, he wanted to celebrate Mass. Under Church law of the time, the Blessed Sacrament could not be touched with any other finger except the thumb and the forefinger. Jogues was unable to follow this law after the loss of both these fingers due to the tortures he endured in Iroquois captivity. In order to celebrate Mass, he required a special dispensation from the Pope. He was granted a dispensation to say Mass by Pope Urban VIII. Pope Urban's judgement that "it would be shameful for a martyr of Christ not to drink the blood of Christ" renewed the zeal of Isaac to work among the Indians.

St Isaac Jogues, Fr Pedro Arrupe have been drawn to the Eucharistic Lord, not via lengthy theses, but via simple faith in the Real Presence of Christ. To achieve this level of holiness, one needs to become a child. Last week we saw how a child taught St Augustine how to approach the Triune God. This week, again, we learn from a child how the Eucharistic Lord is ever present with us. This child is four year old, chosen by Professor Leo Buscaglia (Love Doctor), for the best act of love.
Professor Buscaglia was asked to judge which child had shown the greatest love. The episodes of different children were presented to him. Leo chose a child of four years. Let us call him Prince.  What did Prince do?
A senior citizen (Let’s call him Robert) lived next to the house in which Prince lived. Robert, aged 85, had lost his wife the previous week. They had spent well over 50 years together. Robert sat in his easy chair one evening. Tears were rolling down his cheeks. Prince, who saw this from his house, walked up to Robert. Without saying a word, Prince climbed on to Robert’s lap and sat down. After 15 or 20 minutes, Prince came back home. His mother who was watching all this, asked Prince, “What did you tell grandpa when you were sitting on his lap?” Prince replied: “I said nothing. I just sat there to help him weep more.”
Professor Buscaglia decided that Prince had shown the greatest love.

Love, as we know, can be expressed in myriad ways… through words, deeds, gifts… The best way to show love is to be ‘present’ with someone. Prince did exactly that. Christ has done the same in choosing to be present in bread and wine. Let us set aside questions and theories about the Blessed Sacrament and try to experience the great love of Christ through this Sacrament. Let us celebrate the Loving, Abiding Presence of Christ in our lives!

Before we close, let us turn our attention to June 18, this Sunday, and June 20, coming Tuesday. Every year on June 20 we observe (I dare not say… ‘We celebrate’ since there is nothing to celebrate here!) World Refugee Day. This Sunday, which happens to be the third Sunday of June, we celebrate Father’s Day. The second Sunday of May and the third Sunday of June are celebrated as Mother’s Day and Father’s Day.
World Refugee Day, Mother’s Day and Father’s Day seem to have something in common, in as much as elderly Mothers and Fathers are made to live like refugees, cut off from their roots – either within the four walls of their own houses or in the home for the aged!
Isn’t a tragedy that Mothers and Fathers are assigned just two days in a year when they should be celebrated all through the year? Similarly, when millions of our brothers and sisters are tossed about in the stormy sea of violence as refugees day after day, what is the purpose of remembering them on just one day? Questions that pierce our hearts!     

May we celebrate the loving presence of the Eucharistic Lord, by making our presence and the presence of our near and dear ones, especially our aged parents, more meaningful in our families.   


  கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா

இயேசு சபையின் முன்னாள் தலைவர் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், முதல் உலகப்போர் நிகழ்ந்த காலத்தில், ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், இளம் துறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு, ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை இளம் துறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த இல்லம் முழுவதும் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அந்தக் கோவிலில், அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்வாறு எழுதியுள்ளார்:
"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்தப் பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் திருவிழா.

நம்மில் பலர், சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம். அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குதந்தையர் அல்லது அருள்சகோதரிகள் நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப் பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். இந்தக் கதைகள், இன்னும் நம் நினைவுகளில் தங்கியிருந்தால், அவை, இன்னும் நம் வாழ்வில், தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறு பெற்றவர்கள்.

குழந்தைகளாய் நாம் இருந்தபோது கற்றுக்கொண்ட பல பாடங்கள், இன்னும் நம் வாழ்வில், பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றன. வயதில் நாம் வளர்ந்த பின், சிந்திப்பதிலும் பல மாற்றங்களை உணர்ந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள், நமது குழந்தைப் பருவச் சிந்தனைகளைவிட சிறந்தவை என்று எப்போதும் சொல்லிவிட முடியாது. பல வேளைகளில், நாம் குழம்பிப்போயிருக்கும்போது, குழந்தைகளைப் போல் எளிதான முறையில் சிந்திக்க முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறோம். பல நேரங்களில் வயதில் வளர்ந்தவர்களுக்கு, குழந்தைகள் பாடங்கள் சொல்லித் தருகின்றனர். சென்ற வாரம் மூவொரு இறைவனைப் பற்றி புனித அகஸ்டினுக்கு கடற்கரையில் ஒரு சிறுவன் சொல்லித்தந்த பாடத்தைப்பற்றி சிந்தித்தோம். இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திரு உடல், திரு இரத்தம் திருவிழாவுக்குத் தேவையான பாடத்தை, மற்றொரு குழந்தையின் வழியே பயில முயல்வோம். நாம் சந்திக்கப் போகும் குழந்தை, அன்பு மருத்துவர் (Doctor Love) என்று புகழ்பெற்ற பேராசிரியர் லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்ற ஒரு குழந்தை.
அதிக அன்பு காட்டிய குழந்தை யார் என்று தீர்மானிக்க, ஒருமுறை பேராசிரியர் லியோ அவர்களை நடுவராக நியமித்தனர். பல குழந்தைகள் இந்தப் போட்டிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் செய்த மிக அன்பு நிறைந்த செயல்கள் பேராசிரியர் லியோ அவர்களிடம் விவரிக்கப்பட்டன. அக்குழந்தைகளில், ஒரு 4 வயது சிறுவன், மிக அன்பு காட்டிய சிறுவன் என்று, பேராசிரியர் லியோ அவர்கள் தேர்ந்தெடுத்தார். அந்தச் சிறுவன் என்ன செய்தான்?

அச்சிறுவனின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர். ஒரு நாள் மாலை அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்த அச்சிறுவன், அந்த முதியவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்டநேரம் சென்று, சிறுவன் மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா, அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டார். சிறுவன் அம்மாவிடம், "ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில உக்கார்ந்திருந்தேன்" என்று சொன்னான்.
அச்சிறுவனின் செயலைப் பாராட்டிய பேராசிரியர் லியோ அவர்கள், அதிக அன்பு காட்டிய குழந்தை என்ற பரிசை அச்சிறுவனுக்கு வழங்கினார். எவ்விதத் தயக்கமும் இல்லாமல், அந்த முதியவரின் மடியில் உரிமையோடு ஏறி அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன், இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் திருவிழாவின் உட்பொருளை நமக்கு சொல்லித் தருகிறான்.
அன்பை, ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்பு கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம், வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

எப்படி நம் இறைவன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்வியை விட, அவர் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று, சென்ற வாரம் சிந்தித்தோம். அதேபோல், எப்படி, அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி இருக்கிறார் என்ற கேள்விக்கு இறையியல் விளக்கங்கள் தேடுவதற்குப் பதில், இயேசு, ஏன் அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கவிழைந்தார் என்பதை உணர்ந்துகொள்வது நமக்குப் பயனளிக்கும்.
ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும், இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட, எளிய உணவுப் பொருட்கள். எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது, நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று புரிந்துகொள்கிறோம். எளிய வடிவங்கள், அவருக்குப் பிடித்த வடிவங்கள். எளிய உணவில், நாம் தினமும் உண்ணும் உணவில், நம் உடலாகவே மாறி, நம்மை வாழவைக்கும் உணவில், இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது, நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இணைபிரியாமல், எப்போதும் மனித குலத்துடன் தங்கியிருப்பதற்கு இயேசு இந்த வழியைத் தெரிவு செய்தார்.

தங்களுடன், தங்களுக்குள், இறைமகன் இயேசு தங்கியிருக்கிறார் என்ற அந்த உணர்வால், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை அவருக்காக அர்ப்பணித்தனர். அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வு இதோ:
17ம் நூற்றாண்டில், கானடாவில், பழங்குடியினரிடையே பணிபுரிந்து, அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் (Isaac Jogues) அவர்களும் ஒருவர். அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டு, அவர் தன் இரு கரங்களிலும், கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். அக்காலத்திய மரபின்படி, இயேசுவின் திரு உடலை, கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் மட்டுமே தொடமுடியும் என்று, திருஅவையின் திருவழிபாட்டு சட்டங்கள் இருந்ததால், அவ்விரல்களை இழந்திருந்த அருள்பணி ஐசக் அவர்கள், திருப்பலி நிறைவேற்ற, திருத்தந்தையிடமிருந்து சிறப்பு உத்தரவு பெறவேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் Urban அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர், திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும், கிண்ணத்தையும், விரல்கள் குறைந்த தன் கரங்களில் அருள்பணி ஐசக் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.
தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தம் திருநாளன்று, நாமும், மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளை, இறைமகன் நமக்குச் சொல்லித்தர வேண்டுமென்று மன்றாடுவோம்.

இறுதியாக, இரு எண்ணங்கள், வேண்டுதல்கள்... ஜூன் 18, இஞ்ஞாயிறன்று, தந்தை தினத்தைக் கொண்டாடுகிறோம். மே மாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினமாகவும், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினமாகவும் நாம் கொண்டாடுகிறோம். மேலும், ஜூன் 20, இச்செவ்வாயன்று, புலம்பெயர்ந்தோர் உலக நாளைக் கடைபிடிக்கிறோம். இந்த உலகநாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பம் இதோ...
"புலம்பெயர்ந்தோர் பலரை நான் சந்தித்துள்ளேன். வாழ்வில் பெரும்பாலானவற்றை இழந்திருந்தாலும், தங்கள் குழந்தைகளுக்காக வளர்த்துக்கொண்ட கனவுகளையோ, நல்லதொரு உலகை உருவாக்க முடியும் என்ற ஆவலையோ அவர்கள் இழக்கவில்லை. அவர்கள் நம்மிடம் கேட்பது, மிகச் சிறியதே – அவர்கள் அனுபவிக்கும் மிகக் கடினமானத் துன்ப நேரங்களில், நமது ஆதரவை மட்டுமே அவர்கள் கேட்கின்றனர்."
"I’ve met so many who have lost so much. But they never lose their dreams for their children or their desire to better our world. They ask for little in return – only our support in their time of greatest need" — UN Secretary-General, António Guterres  

World Refugee Day

புலம் பெயர்ந்தோர் நாளையும், அன்னைதினம், அல்லது, தந்தை தினம் இவற்றையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நமது அன்னையரும் தந்தையரும் நம் குடும்பங்களிலேயே புலம்பெயர்ந்தோராய் மாறிவரும் துயரத்தையும் சிந்திக்கவேண்டும். புலம்பெயர்ந்தோர் தங்கள் நாட்டைவிட்டு, அல்லது, உள்நாட்டுக்குள்ளேயே ஆதரவு ஏதுமின்றி அலைகழிக்கப்படுகின்றனர். அன்னையரும், தந்தையரும் வீட்டுக்குள்ளேயே உறவுகள் அறுக்கப்பட்டு, அல்லது, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு, புலம்பெயர்ந்தோராய் வாழ்கின்றனர்.

1907ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் Monongah என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 தொழிலாளிகள் இறந்தனர். இதனால், பல நூறு குடும்பங்கள் தந்தையை இழந்து தவித்தன. இந்த நாளை நினைவுகூரும் விதமாக, 1908ம் ஆண்டு முதல் தந்தை தினம் அறிவிக்கப்பட்டது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம், தந்தைக்கு ஒரு தினம் என்று நாம் கொண்டாடி வருகிறோம். இந்தக் கொண்டாட்டங்கள் வருடத்தின் இரு நாள்களோடு முடிந்துவிடுவது நியாயமா? அன்னை தினம், தந்தை தினம் இரண்டும், மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன வியாபாரத் திருநாள்களாக மாறிவிட்டன. வயது முதிர்ந்த காலத்தில், தாயையும், தந்தையையும் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்த நாளில் மட்டும் அவர்களைச் சென்று பார்த்து மலர்களையும், மற்ற பரிசுகளையும் தருவதால் நமது கடமைகள் முடிந்துவிடுகின்றனவா?

ஆண்டின் இரு நாள்களில் மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வுலகில் வாழும் எஞ்சிய நாட்கள் அனைத்தும், அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
உலகில் வீசும் வன்முறைப் புயல்களால் புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்காக, அதிலும் குறிப்பாக, தாய், தந்தை என்ற ஆணிவேர்கள் அகற்றப்பட்டு, காய்ந்த சருகுகள் போல புயலில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரம் குழந்தைகளுக்காக இன்று இறைவனிடம் உருக்கமான வேண்டுதல்களை எழுப்புவோம்.