28 August, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 8


Rachel Mwanza in the film Rebelle

இமயமாகும் இளமை – மன்னிப்பின் 'புரட்சியாளர்'

2012ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் Rebelle அதாவது, 'புரட்சியாளர்' என்ற பிரெஞ்ச் மொழித் திரைப்படம் விருது பெற்றது. குழந்தைப் பருவத்திலேயே இராணுவ வீரர்களாக மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப்படும் சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் நடித்த 17 வயது இளம்பெண், Rachel Mwanza அவர்கள், சிறந்த நடிகர் என்ற விருது பெற்றார்.

ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில் ஓர் எளியக் குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர் இரேச்சல். அவருக்கு 8 வயதானபோது, வாழ்க்கை முற்றிலும் மாறியது. இரேச்சலின் தந்தை, தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து, கின்ஷாசா நகருக்கு அனுப்பிவைத்தார். விரைவில் அவர்களுடன் தானும் சேரப்போவதாகக் கூறியத் தந்தை, அத்துடன் அவர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் மறைந்தார். கின்ஷாசாவில் அத்தாயும், குழந்தைகளும், வயதான பாட்டியோடு வாழ்ந்தபோது, அடுக்கடுக்காய் துன்பங்களைச் சந்தித்தனர்.
அக்குடும்பத்தின் துன்பங்களுக்கு, கடைசியாகப் பிறந்த இரேச்சல்தான் காரணம் என்றும், அவரைப் பிடித்துள்ள பேயை ஓட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் ஒரு போலிச்சாமியார் கூறினார். பாட்டி, இரேச்சலை, அவர் பிறந்ததுமுதல் வெறுத்தவர். எனவே, போலிச்சாமியார் இவ்விதம் சொன்னதும், பேய்பிடித்த அக்குழந்தையைத் தண்டிக்க, பாட்டி, சிறுமியின் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டுத் தேய்த்தார். அப்போது இரேச்சலுக்கு வயது பத்து. இதையடுத்து, இரேச்சல் தன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.
அடுத்த 7 ஆண்டுகள், இரேச்சல், வெளி உலகில் பல கொடிய துன்பங்களை சந்தித்த வேளையில்,. Rebelle திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து, இரேச்சல் அவர்கள், பன்னாட்டு கருத்தரங்குகளில் உரையாற்றினார். தன் துன்பங்களைக் கேட்டு மக்கள் கண்ணீர் விடவேண்டும் என்பது தன் நோக்கமல்ல, மாறாக, இத்தகையத் துன்பங்களைச் சந்திக்கும் ஏனைய ஆப்ரிக்கக் குழந்தைகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்வதற்காகவே தன் வாழ்வின் துயரங்களை, உலக அரங்குகளில் பேசிவருவதாக இரேச்சல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

La Croix என்ற பிரெஞ்ச் இதழில், இளம்பெண் இரேச்சலைக் குறித்து வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் இறுதியில், கூறப்பட்டுள்ள அற்புத வரிகள் இதோ: "இரேச்சலின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த பாட்டியின்மீது அவர் கோபமாய் இருக்கிறாரா என்று கேட்டபோது, அவர், ‘நான் ஏன் கோபப்படவேண்டும்? அதனால் என்ன பயன்?’ என்று பதில் சொன்னார். இத்தகைய உன்னதமான சிந்தனைக்கு முன் நாம் மிகச் சிறியவர்களாகிறோம்" என்ற வார்த்தைகளுடன் இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

பாட்டி அவர் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த அந்தக் கொடூரத்தால் இரேச்சல் தன் கண் பார்வையையே இழந்திருக்க வாய்ப்புக்கள் இருந்தன. அதைவிட மேலாக, அந்நிகழ்வோ, அதைத் தொடர்ந்த துன்பங்களோ, இளம்பெண் இரேச்சலின் மனக் கண்களைக் குருடாக்கி, அவரை வெறுப்பில் ஆழ்த்தும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. அவ்விதம் நிகழாமல் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம், இரேச்சல் வளர்த்துக்கொண்ட மன்னிப்பு மனப்பான்மை. மன்னிப்பு இருந்தால், மனக்கண்கள் ஒளிபெறும் என்பதை, இரேச்சலின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.

Saul (Paul) meets Jesus on road to Damascus

புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் பகுதி 8

புகழ்பெற்ற துப்பறியும் அறிஞர், ஷெர்லாக் ஹோம்ஸ் (Sherlock Holmes) அவர்கள், தன் நண்பர் வாட்சன் என்பவருடன் சுற்றுலா சென்றார். அன்றிரவு, திறந்த வெளியில் கூடாரம் அமைத்து, அவர்கள் இருவரும் உள்ளே உறங்கச் சென்றனர். நள்ளிரவில் ஏதோ ஓர் உணர்வால் உந்தப்பட்டு, கண்விழித்த ஷெர்லாக், அருகில் தூங்கிக்கொண்டிருந்த வாட்சனை எழுப்பி, அவரிடம், "வாட்சன், மேலே பார். என்ன தெரிகிறது?" என்று கேட்டார். "பல நூறு விண்மீன்கள் தெரிகின்றன" என்று வாட்சன் சொல்லவே, ஷெர்லாக் அவரிடம், "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று அழுத்திக் கேட்டார்.
உடனே, வாட்சன், "கண்ணுக்குத் தெரியும் இந்த விண்மீன்களைத் தாண்டி, இன்னும் பலகோடி விண்மீன்கள் உள்ளன என்று வானியல் சொல்கிறது. பளிச்சென மின்னும் விண்மீன்கள், நாளை, நமக்குத் தெளிவான வானிலை இருக்கும் என்று சொல்கின்றன. இவை அனைத்தையும் படைத்த இறைவன் எவ்வளவு வல்லவர் என்று இறையியல் சொல்கிறது" என்று மூச்சுவிடாமல் பேசிய வாட்சன், ஷெர்லாக் பக்கம் திரும்பி, "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று கேட்டார். ஷெர்லாக், தலையில் அடித்துக்கொண்டு, "என் முட்டாள் நண்பரே, நாம் போட்டிருந்த கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள்" என்று கத்தினார்.

இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு. பல நேரங்களில், நகைச்சுவைத் துணுக்குகள், வெறும் சிரிப்பை மட்டுமல்ல. சிந்தனையையும் தூண்டும் என்பது நமக்குத் தெரியும். இந்த நகைச்சுவைத் துணுக்கில், எது மிகவும் தெளிவாக, எளிதாகத் தெரியவேண்டுமோ, அதைத்தவிர ஏனையவற்றை வாட்சன் கண்டார் என்பதை எண்ணி, சிரிக்கிறோம், பரிதாபப்படுகிறோம். பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்த விண்மீன்களைப் பார்க்கத் தெரிந்த வாட்சனுக்கு, தலைக்கு மேல் போடப்பட்டிருந்த கூடாரம் காணாமற்போன உண்மையைப் பார்க்கமுடியாமல் போனது.

பிறவியிலேயே பார்வைத்திறனற்ற ஒருவருக்கு இயேசு பார்வைத்திறன் வழங்கியப் புதுமையில், கடந்த ஏழு வாரங்களாக தேடல் பயணத்தை மேற்கொண்டோம். இந்நிகழ்வை ஒரு புதுமை என்று மட்டும் கருதாமல், இந்நிகழ்வின் வழியே நற்செய்தியாளர் யோவான் நமக்குச் சொல்லித்தரும் இறையியல் பாடத்தையும் கற்றுக்கொள்ள முயன்றோம். பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் என்ற இரு கண்ணோட்டங்களுடன் நிகழ்ந்த நம் தேடல் பயணத்தின் இறுதியில், நாம் பெற்றுள்ள, பெறக்கூடிய, அல்லது, பெறவேண்டிய பார்வைத்திறன்களைக் குறித்து இன்றையத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.

பார்வைத்திறன் இருந்தும், பார்க்க முடியாமல், அல்லது, பார்க்க மறுத்து வாழ்வதைப் பற்றி, இறைவாக்கினர்கள் விடுக்கும் எச்சரிக்கைகள் இவ்வாறு ஒலிக்கின்றன:
எசாயா 42:20
பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை; உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.
எரேமியா 5:21
கண்ணிருந்தும் காணாத, காதிருந்தும் கேளாத மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்.
எசேக்கியேல் 12:2
காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை.

கண்கள் அகலத் திறந்திருந்தாலும், பார்க்க இயலாமல் போகும் நிலை, திருத்தூதர் பவுலின் வாழ்வில் நிகழ்வதைக் காண்கிறோம். கிறிஸ்தவர்களை வேரோடு அழிக்கும் வெறி தன் கண்களை மறைக்க, தமஸ்கு நகர் நோக்கி புறப்பட்ட சவுலை, ஒளிவடிவில் இயேசு சந்தித்தபோது, சவுல் தரையில் வீழ்ந்தார். தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, திருத்தூதர் பணிகள் நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:
திருத்தூதர் பணிகள் 9:8
சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

கண்கள் திறந்திருந்தும், பார்க்க இயலாமல்போன சவுல், வழியில் சந்தித்து, அடையாளம் காண இயலாமல் போன இயேசுவை, அடுத்த மூன்று நாள்கள், தன் அகக்கண்களால் கண்டார். அவர், இயேசுவை, அகக்கண்களால் காண முடிந்ததும், அவரது புறக்கண்களைத் திறக்க, அனனியா வந்து சேர்ந்தார்.
திருத்தூதர் பணிகள் 9: 17-18
அனனியா அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, "சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு, நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்" என்றார். உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.

இறையியல் பேராசிரியரும், எழுத்தாளருமான அருள்பணி ரோன் ரோல்ஹைசர் (Ron Rolheiser) அவர்கள், "இன்னும் ஆழமான முறையில் காணுதல்" (Seeing in a Deeper Way) என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், திருத்தூதர் பவுல் பார்வை பெறும் நிகழ்வைச் சுட்டிக்காட்டி, தன் சிந்தனைகளை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
"உண்மையான காணுதல் என்பது, உடலளவில், நலம் மிக்க கண்களைக் கொண்டு காண்பதையும் தாண்டி, பல ஆழமான உண்மைகளை உணர்த்துகிறது" என்று கூறும் அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள், நாம் உண்மையான காணும் திறமை பெறக்கூடிய சில வழிகளையும் குறிப்பிட்டுள்ளார்.
"நமக்கு மிகவும் பழக்கமானவற்றை, வழக்கமான வழிகளில் காண்பதை விடுத்து, உள்ளார்ந்த வியப்புடன் காணுதல்" என்பது, அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள், குறிப்பிடும் முதல் வழி. வாழ்வில் நாம் ஒவ்வொருநாளும் கண்டு பழகிப்போனவற்றை, புதிய வழிகளில் காண முயற்சி செய்தால், நம் வாழ்வில் வியப்பும், அழகும் கூடும் என்று, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜி.கே.செஸ்டர்ட்டன் (G.K.Chesterton) அவர்கள் கூறியுள்ளதை, அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள், சுட்டிக்காட்டியுள்ளார்.
'பொறாமை' என்ற கண்ணோட்டத்திலிருந்து விலகி, 'பாராட்டு' என்ற கண்ணோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று கூறும் அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள், 'பாராட்டு' என்ற கண்ணோட்டம், நம் உள்ளத்தை, பரந்து விரிந்ததாக மாற்றி, வாழ்வில் புத்துணர்வைக் கொணர்கிறது என்று கூறியுள்ளார்.
கோபத்தாலும், வெறுப்பாலும் குறுகிப்போகும் கண்ணோட்டத்திலிருந்து விலகி, 'மன்னிப்பு' என்ற கண்ணோட்டம் கொண்டிருப்பதை அடுத்த வழியாகக் கூறுகிறார், அருள்பணி ரோல்ஹைசர். கோபம் என்ற கண்புரை நம் பார்வையை வெகுவாக மறைத்துவிடும் நோய். அந்த நோயிலிருந்து விடுபட உதவும் சிறந்த மருந்து, மன்னிப்பு.
'ஏக்கம் நிறைந்த' கண்ணோட்டத்திலிருந்து விலகி, 'நன்றி நிறைந்த' கண்ணோட்டத்துடன் வாழ்வது, அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள் கூறும் அடுத்த வழி. ஏக்கம் நம் பார்வைத்திறனை, கிட்டப் பார்வையாக மாற்றும்; நன்றியோ, நம் பார்வைத்திறனை தூரமும், அகலமும் நிறைந்ததாக மாற்றும். இதனால், உலகம் அனைத்தையும், நம்மால் நன்றியோடு கண்டு மகிழமுடியும்.
"அன்பே நம் கண்கள்" என்று பல்வேறு மதங்களின் ஞானிகள் கூறியுள்ளனர். "கடவுளே அன்பு" (1 யோவான் 4:8) என்று விவிலியத்தில் வாசிக்கிறோம். அன்பே உருவான கடவுள் நமக்கு சரியான பார்வைத்திறனை வழங்குவதோடு, நமது கண்களாகவே கடவுள் விளங்கவேண்டுமென மன்றாடுவோம்.


26 August, 2018

God-and-people-centred decisions! கடவுள்-மக்கள்-மையப்படுத்திய முடிவுகள்!


To Whom Shall We Go?

21st Sunday in Ordinary Time

For the past four consecutive Sundays we have been reflecting on passages taken from the 6th chapter of John’s Gospel, popularly known as the ‘Eucharistic Discourse’. This chapter begins with the grand miracle of sharing initiated by a boy, bringing 5 loaves and 2 fish to Jesus. Following this loving gesture, Jesus hosts a grand, miraculous dinner satisfying the hunger of 5000 plus people. Having witnessed the facility with which Jesus could satisfy their hunger, people came looking for him for easy solutions to their problems.
Jesus did not make it easy for them. He made it clear to them that the physical hunger could easily be satisfied; but, to satisfy other hungers that arise only in human beings, more sacrifices were required. Jesus did not mince words when he told them that he was willing to give his ‘flesh and blood’ to satisfy the hunger of the people.

As the discourse progressed, it became more and more challenging. The simple ‘bread’ became ‘flesh’. At one point Jesus told them very clearly: “I am the living bread which came down from heaven;… and the bread which I shall give for the life of the world is my flesh.” (John 6:51). This was the turning point in the discourse and, hence, we heard this sentence repeated on the previous two Sundays in our Liturgy. Jesus went one step further to tell them, that eating his flesh and drinking his blood, were the only way to life. “Truly, truly, I say to you, unless you eat the flesh of the Son of man and drink his blood, you have no life in you.” (John 6:54)
The disciples who heard this statement were shocked and even repulsed. Eating the flesh and drinking the blood of their master were too much for them. They knew that it was time to decide. We hear in today’s Gospel that ‘many of his disciples, when they heard it, said, “This is a hard saying; who can listen to it?”… After this many of his disciples drew back and no longer went about with him. (John 6:60,66)

The final part of chapter 6 of John which we read as today’s Gospel, talks of the moment of truth, the moment of decision making. This gives us an opportunity to think of one of the most potent capacity only we – the human beings – are endowed with, namely the capacity to DECIDE! While all the other creatures, in any given situation, act on their instinct, human beings can take stock of the situation, control their instinct and act on their ‘informed’ will power. Decisions are an integral part of human life… decisions, big and small.

Today’s readings talk about Joshua and Simon Peter making decisions under difficult circumstances. “As for me and my house, we will serve the LORD” (Joshua 24: 15) was the decision of Joshua. When he speaks of his house, it can be taken as not only as his close family but also his kith and kin… and even his domestic employees! In today’s Gospel, Simon Peter makes a similar decision on behalf of the twelve disciples. When Jesus asks the poignant question: “Do you also wish to go away?” Simon Peter answered him in one of the oft-quoted Bible verses: “Lord, to whom shall we go? You have the words of eternal life; and we have believed, and have come to know, that you are the Holy One of God.” (John 6: 68-69)

Two aspects of these decisions strike us. The first aspect is the ‘plurality’ of the decision. Both Joshua and Peter make use of the ‘we’ word! The word ‘we’ seems to be receding from our vocabulary in subtle ways and the dangerous ‘I’ word seems to be making subtle inroads into our lives. Hope we become aware of this trend and take necessary precautions. When crucial decisions have to be made in families, collective responsibility seems to take the backseat.
When an individual speaks for the group, we can assume that that person has a good knowledge of the group and has gained the confidence of the group as well. Such healthy knowledge and trust will be a great help in families, especially when they are going through tough times.

As we are reflecting on collective decision making process in families, we are aware that the World Meeting of Families 2018 – WMOF 2018 is in progress in Dublin, Ireland. This world meeting began on August 21 and will come to an end on Sunday, August 26 with the Holy Mass celebrated by Pope Francis. The overarching theme for WMOF2018 is “The Gospel of the Family: Joy for the World”. This theme was chosen by Pope Francis from the opening words of The Joy of Love (Amoris Laetitia) - the post-synodal apostolic exhortation written by him addressing the pastoral care of families.

Coming back to decision making and families, we are sadly aware that ‘collective decision-making process is almost nil in our families. There is more and more ‘touch-me-not’ or ‘leave-me-alone’ attitude prevalent in families. This leads to individuals making wrong decisions. We can learn from Joshua and Peter how to take responsible decisions on behalf of our near and dear ones.

The second aspect of the decisions made by Joshua and Peter, is the tough situation in which they were made. When life moves smoothly, there is hardly any need for decisions. Even if there are a few tiny decisions to be made, they can be made easily. It is during times of crisis that we need to take major decisions – as in the case of Joshua, Peter.

Let me close these reflections with an email that has been going around in the internet. It contained photographs with the title: Pictures to Help You Restore Your Faith In Humanity.
All the photographs were packed with positive energy. These pictures depicted small or big acts of kindness done by individuals for those in need. There was the picture of a person who removes his sandals and gives it to a poor girl who is bare-footed, and this takes place on the pavement on a hot, sunny day (presumably).
Another picture showed a young girl holding an umbrella over an older man unable to walk and crawling on a wooden board to cross the road in drenching rain. There were quite a few people on the road witnessing this, which meant that only the young girl took the decision to help the older person.

Two pictures in this collection touched me deeply. They depicted how decision and dedication go hand in hand. The first picture showed a 97 years old lady, who is bent almost double by hunchback, feeding a man lying on a cot. When I read the caption for this picture, I choked! A mother (97 years old) in China, feeding and taking care of her paralysed son (60 years old) everyday for more than 19 years. A reminder of the amazing spirit of human compassion and, more importantly, motherly love. The mother could have decided to send her son to the care centre, especially when she herself requires assistance. But, she had taken a decision and followed it with dedication for more than 19 years!

Another picture in this collection that tugged at my heart was taken in a hospital. It showed a young father and a mother kissing goodbye to their dying child, while the hospital staff stand around the bed and pay their respects. The caption written under the picture, once again, moistened my eyes…
A father and mother kissing their dying little girl goodbye. If you are wondering why all the medic people are bowing: in less than an hour, two small children in the next room are (will be) able to live thanks to the little girl's kidney and liver.

The devastating floods in Kerala have shattered the life of thousands of people. It has also brought out very noble, humane decisions taken by thousands. We salute the decisive action taken by the army, police and fire fighters. We are deeply touched by the noble deeds of fishermen. We are more deeply touched when we learnt that the fishermen refused the offer of money from the Chief Minister of Kerala.

Khais Mohmmed from Fort Kochi said in a video post that he and his colleagues were happy to hear the words of praise from the chief minister for the role they played in going to the remotest areas amid pouring rain and dangerous waters to rescue the marooned. "We are really happy that I and my friends rescued several people. What made us happier was when you said that we (fishermen) are your army. But after that we heard that for our services we will be paid Rs. 3,000. Sir, that made us really sad as we do not want money for saving the lives of fellow humans," Mr Mohmmed said.
The decision made by one of those fishermen – Jaisal K.P. – to become a ‘stepping stone’ for women to get into rescue boats speaks volumes of the love and concern of the fishermen, expecting nothing in return. Jaisal KP, a 32-year-old Tanur resident, hunched on a flooded road to help elderly women step into an NDRF inflatable boat, winning applauds across the country. He stepped in to help the National Disaster Response Force (NDRF) team and rescued three stranded women – one with an infant – in Vengara's Muthalamad area.

All of us keep taking decisions in life – big, small, crucial, casual, tough, easy… At this moment, we pray especially for those who are at crossroads in their lives – in terms of making proper decisions on Job, Life-partner, Way of life etc. Let the 97 years old Mom, the young parents of the dying child, Jaisal, the fisherman, as well as Joshua and Simon Peter help us make the right decisions! God-and-people-centred decisions!

Jaisal KP making himself as a stepping stone

To Help Restore Your Faith in Humanity

பொதுக்காலம் 21ம் ஞாயிறு

கடந்த நான்கு வாரங்களாக ஞாயிறு வழிபாடுகளில் யோவான் நற்செய்தி 6ம் பிரிவிலிருந்து நற்செய்திப் பகுதிகளைக் கேட்டு வந்துள்ளோம். இன்று ஐந்தாவது வாரமாக, இப்பிரிவின் இறுதிப் பகுதி நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.
6ம் பிரிவு, அற்புதமான ஒரு விருந்துடன் துவங்கி, இறுதியில், இயேசுவைப் பின்தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கவேண்டிய ஓர் இக்கட்டானச் சூழலுடன் முடிகிறது. 6ம் பிரிவின் துவக்கத்தில், சிறுவன் ஒருவன் வழங்கிய ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும், 5000த்திற்கும் அதிகமான மக்களை, ஒரு பகிர்வுப் புதுமைக்கு அழைத்துச் சென்றது.
அப்புதுமையால் நிறைவுபெற்ற மக்கள், அத்தகைய உணவும், பகிர்வும் மீண்டும், மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இயேசுவைத் தேடிச் சென்றபோது, அவர், கொஞ்சம், கொஞ்சமாக அவர்களது எண்ணங்களை வேறு திசைகளில் திருப்பினார். பெரியதொரு சவாலை அம்மக்கள்முன் வைத்தார்.
ஏனைய உயிரினங்களைப் போலவே, மனிதருக்கும் உருவாகும் வயிற்றுப்பசியை உணவைக்கொண்டு போக்கிவிடலாம்; ஆனால், மனிதர்களுக்கு மட்டுமே உருவாகும் வேறு பல பசிகளைப் போக்க, ஒருவர் தன்னையே முழுமையாக வழங்கவேண்டும் என்பதே, இயேசு அவர்கள் முன் வைத்த சவால்.

உலகினரின் பசியைப் போக்க, "எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோவான் 6:51) என்று இயேசு கூறியதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சியுற்றனர். இயேசு இன்னும் ஒருபடி மேலே சென்று, 'என் சதையை உண்டு, இரத்தத்தைக் குடிப்பவரே நிலைவாழ்வு பெறமுடியும்' (யோவான் 6:54) என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார். சவால்கள் நிறைந்த இச்சொற்கள், சூழ இருந்தோரை, அதிர்ச்சியில், இன்னும் சொல்லப்போனால், அருவறுப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். எனவே, அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக் கொண்டனர். (யோவான் 6:60)
அற்புத விருந்துடன் ஆரம்பமான ஒரு நிகழ்வு, அதிர்ச்சி தரும் சவாலாக தங்களை அடைந்தபோது, மக்களும், சீடர்களும் முடிவெடுக்க இயலாமல் தடுமாறினர். இயேசுவைப் பின்தொடர்ந்தால், எளிதாக உணவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்கள், இயேசு விடுத்த சவால்களைச் சமாளிப்பது கடினம் என்று உணர்ந்து, அவரை விட்டு விலகினர்.
இதையொத்த ஒரு சூழலை, இன்றைய முதல் வாசகத்திலும் காண்கிறோம். யோசுவா, தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்து, மக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, அவர்கள் முன் ஒரு சவாலை வைக்கிறார். ஆண்டவரைப் பின்தொடர்வதா, வேற்று தெய்வங்களைப் பின்தொடர்வதா என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்து, "இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்." (யோசுவா 24:15) என்று தன் முடிவைப் பறைசாற்றுகிறார்.

மனித வாழ்வில் நாம் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம் முடிவெடுப்பது. இந்த அடிப்படை அனுபவத்தை ஆழமாகச் சிந்திக்க இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.
"நானும் என்  வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்"  (யோசுவா 24: 15) என்று யோசுவா சொல்வதை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம். "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைச் சொல்லும் சீமோன் பேதுருவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.

யோசுவாவும், சீமான் பேதுருவும் கூறிய சொற்களில் உள்ள ஒரு பொதுவான அம்சம் நம் கவனத்தை ஈர்க்கிறது. இருவருமே தங்கள் முடிவை ஒருமையில் எடுப்பதாகக் கூறவில்லை. தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் சேர்த்தே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். "நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்வேன்" என்று யோசுவா சொல்லவில்லை. மாறாக, “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் (யோசுவா 24: 15) என்று உறுதியுடன் கூறுகிறார். "வீட்டார்" என்று யோசுவா கூறியுள்ளதை அவரது குடும்பத்தினர் என்று மட்டும் பொருள்கொள்ளத் தேவையில்லை. தன் உற்றார், உறவினர், பணியாட்கள் என்று அனைவரையும் இந்த வார்த்தையில் யோசுவா உள்ளடக்குகிறார். இதே உறுதி சீமோன் பேதுருவின் வார்த்தைகளிலும் ஒலிக்கிறது. "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், பேதுரு, "ஆண்டவரே, இவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் யாரிடம் செல்வேன்?" என்று தன்னைப் பிரித்துப்பேசாமல், பன்னிரு சீடர்களுக்கும் சேர்த்து அவர் பதிலிறுக்கிறார்.
தங்கள் குடும்பத்தை, குலத்தை, நண்பர்கள் குழுவை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே, இவர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களே, மற்றவர்கள் சார்பில் பேசமுடியும், முடிவுகள் எடுக்கமுடியும். இத்தகைய ஆழமான புரிதலும், நம்பிக்கை உணர்வுகளும் நம் குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பார்க்கலாம்.

'தாமரை இலை மேல் நீர்' போல, 'பட்டும் படாமலும்' உள்ள உறவுகள், மேற்கத்திய நாடுகளில், குடும்பங்களில் வளர்ந்துள்ளதைத் தெளிவாகப் பார்க்கலாம். அத்தகைய ஒரு போக்கு, தற்போது, ஆசிய நாடுகளிலும் பரவிவருவதை நாம் காணலாம். குடும்பத்தில் ஒருவர் முடிவெடுக்கும்போது, அதை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ விரும்பாமல் ஒதுங்கிவிடுவது, குடும்பங்களில் நிலவும் ஆபத்தான போக்கு. இந்தப் போக்கு, தவறான முடிவுகள் எடுக்க வழிவகுக்கிறது.
ஆகஸ்ட் 21, கடந்த செவ்வாய் முதல், 26 இஞ்ஞாயிறு முடிய அயர்லாந்தின் டப்ளின் மாநகரில், குடும்பங்களின் உலக மாநாடு நடைபெறுகிறது. இச்சனிக்கிழமை, மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இவ்வேளையில், குடும்ப உறவுகள் வலுப்பெற்று, அனைவருக்கும் நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்கும் சூழல் நம்மிடையே வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

முடிவுகள் எடுக்கப்படும் சூழலைச் சிந்திக்கவும் இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. எல்லாமே நலமாக, மகிழ்வாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் முடிவுகள் எடுக்கும் தேவையே எழுவதில்லை. சிறு, சிறு முடிவுகள் அந்நேரங்களில் தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள் நம்மை நெருக்கும்போது முடிவுகள் எடுப்பது கடினமாக இருக்கும். எதை நம்பி முடிவெடுப்பது? யாரை நம்பி முடிவெடுப்பது?

கேரள மாநிலத்தைப் புரட்டிப்போட்ட பயங்கர வெள்ளமும், அவ்வெள்ளத்தின் நடுவில் ஊற்றெடுத்த தியாகச் செயல்களும் நம் சிந்தனைகளில் இன்னும் பதிந்துள்ளன. பொதுவாக, வெள்ளம், தன் பாதையில் உள்ள அனைத்தையும் அடித்துச் செல்லும்; அதே வேளையில், வேறு பலவற்றைக் கொண்டுவந்து சேர்க்கும். கேரளாவின் வெள்ளம், ஏறத்தாழ 400 உயிர்களைக் கொண்டு சென்றது. அதே வேளையில், இவ்வெள்ளம் மக்களை ஒன்றாகக் கொண்டுவந்து சேர்த்தது.
இவ்வெள்ளத்தில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து உதவிய இராணுவ வீரர்களையும், உதவிக்கரம் நீட்டிய ஆயிரமாயிரம் மக்களையும் இறைவனின் சன்னதியில் எண்ணிப்பார்த்து, வணங்குகிறோம், அவர்களுக்காக நன்றி கூறுகிறோம். குறிப்பாக, இவ்வெள்ளத்தில் உதவிய மீனவர்களை சிறப்பாக எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. அவர்கள் ஆற்றிய ஒப்பற்ற பணிகளுக்காக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்போவதாக மாநில முதல்வர் அறிவித்தபோது, அதை மறுத்துவிட்ட மீனவர்கள், மனிதாபிமானத்தோடு தாங்கள் மேற்கொண்ட பணிகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று முதலிவரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
எதையும் எதிர்பார்க்காமல், மனித நேயத்தை உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் செயலாற்றிய உன்னத மீனவர்கள், நம் அனைவருக்கும் பாடங்கள் புகட்டுகின்றனர். அந்த மீனவர்களில், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சல் (Jaisal K.P.) என்ற மீனவரின் செயல் நம் நினைவுகளில் ஆழப்பதிந்துள்ளது. உயிர் காக்கும் படகு அருகிலிருந்தாலும், அதில் ஏறுவதற்கு பெண்களால் இயலவில்லை என்பதை உணர்ந்த ஜெய்சல் அவர்கள் ஒரு முடிவெடுத்தார். உயிர்காக்கும் படகுக்கு அருகே, தன் முகம் வெள்ளநீரில் பதியும் வண்ணம் குனிந்து நிற்க, அவரது முதுகை ஒரு படிக்கட்டுபோல பயன்படுத்தி, பல பெண்கள் அந்த படகுக்குள் ஏறிச் சென்ற காட்சி, மீனவர்களின் அன்பு, தியாகம், வீரம் ஆகியவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. மக்களை பாதுக்காக்க, தன்னையே ஒரு படிக்கட்டாக மாற்ற முடிவெடுத்த ஜெய்சல் அவர்கள், இவ்வுலகில் மனிதாபிமானம் இன்னும் உயிரோடு உள்ளது என்பதைப் பறைசாற்றும் தூதர்.

இக்காட்சியைக் கண்டபோது, சில ஆண்டுகளுக்குமுன் மின்னஞ்சலில் வந்து சேர்ந்த சில புகைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. "நன்மை இவ்வுலகில் இன்னும் நடமாடுகிறது" என்ற கருத்துடன் தொகுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் அந்த மின்னஞ்சலில் வந்திருந்தன. தகிக்கும் கடற்மணலில் செருப்பில்லாத ஓர் ஏழைப் பெண்ணுக்குத் தான் அணிந்திருக்கும் காலணிகளைக் கழற்றித் தரும் ஒரு மனிதர்.... கால்களை இழந்து, பலகையில் அமர்ந்தபடியே நகர்ந்து செல்லும் வயதான ஓருவர், கொட்டும் மழையில் சாலையைக் கடப்பதற்காக தன் குடையை விரித்து அவரை அழைத்துச்செல்லும் இளம்பெண்... இப்படி பல படங்கள்...
இத்தொகுப்பில் இருந்த அனைத்துப் படங்களில் இரண்டு என் கவனத்தை அதிகம் ஈர்த்தன. முதுகுத் தண்டுவடம் வளைந்து, கூனல் விழுந்திருக்கும் 97 வயதான ஒரு பெண்மணி, உடல் முழுவதும் செயல் இழந்து படுத்திருக்கும் தன் 60 வயது மகனுக்கு உணவு ஊட்டுகிறார். இவர் இதை கடந்த 19 ஆண்டுகளாகச் செய்கிறார் என்ற குறிப்பும் உள்ளது.
அடுத்த படம் ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருந்தது... மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒரு பச்சிளம் குழந்தைக்குக் கண்ணீருடன் முத்தமிட்டு விடை பகரும் ஓர் இளம் தாய்... அக்குழந்தையின் படுக்கையைச் சுற்றி மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த மரியாதையுடன் வணக்கம் செலுத்தியபடி நிற்கிறார்கள். அக்குழந்தைக்கு ஏன் இவ்வளவு மரியாதை என்ற கேள்வியும் விளக்கமும் படத்திற்குக்கீழ் கொடுக்கப்பட்டிருந்தன. அக்குழந்தையின் சிறுநீரகங்கள், ஈரல் இவற்றால் வாழப்போகும் வேறு இரு குழந்தைகள் அடுத்த அறையில் இருக்கிறார்கள்... என்பதே அவ்விளக்கம்.

கேரள வெள்ளத்திலும், இன்னும் இங்கு கூறப்பட்ட மனதைத் தொடும் நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படையாக ஓர் அம்சம் உள்ளது... இத்தருணங்கள் அனைத்திலும் சிறிதான அல்லது பெரிதான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. மழைக்குக் குடைபிடிப்பதும், காலணிகளைத் தருவதும் சிறிய செயல்களாக இருக்கலாம்... இறந்துகொண்டிருக்கும் தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்ய முன்வருவது பெரும் செயலாக இருக்கலாம்...

முக்கியமான முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பியே இந்த முடிவுகளை எடுக்கமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வையே பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.
யோவான் நற்செய்தி 6: 68-69
ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்
"வேறு யாரிடம் செல்வோம்?" என்று பேதுரு கூறுவதை "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் காணமுடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும் அவரது நண்பர்களும் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். இயேசுவின் வார்த்தைகள் கடினமானவை என்று முடிவெடுத்து, மற்ற சீடர்கள் அவரைவிட்டு விலகியபோது, பன்னிரு சீடர்களும் நினைத்திருந்தால், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து முடிவெடுத்து, தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால், கடலையும், படகையும், வலைகளையும் நம்பி அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. அந்தப் புதுவாழ்வு... உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும் உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில் அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

97 வயதான போதிலும் தன் மகனைத் தொடர்ந்து காப்பாற்றும் அந்த முதுமைத் தாய், இறக்கும் நிலையில் இருந்த தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்த இளம் பெற்றோர், வெள்ள நீரில் தன்னையே ஒரு படிக்கட்டாக அமைத்து, மக்களைக் காத்த மீனவர் ஜெய்சல் போன்ற உன்னத உள்ளங்களின் வாழ்வால் நாமும் தூண்டப்பட வேண்டுமென இறைவனை இறைஞ்சுவோம்.

வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்பு உள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக் கொணர்வோம். முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டியச் சூழலில், குடும்பத்தினர் இணைந்து வந்து முடிவுகள் எடுக்கவேண்டும் என்று மன்றாடுவோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல, இன்னும் பல்லாயிரம் உன்னத உள்ளங்களைப் போல, இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து, மக்கள் சார்பாக நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.

21 August, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 7

God’s Coffee: Remembering What Matters In Life

இமயமாகும் இளமை - கடவுள் வழங்கும் 'காபி'

ஒரு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சிலர், தங்கள் பேராசிரியரைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவ்விளையோர், தாங்கள் வாழ்வில் அடைந்துவரும் மன அழுத்தங்களைப்பற்றி புலம்ப ஆரம்பித்தனர்.
பேராசிரியர் வீட்டுக்குள் சென்று, அவர்களுக்கு 'காபி' தயாரித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துவந்தார். கூடவே, ஒரு தட்டில் சில கோப்பைகளையும் கொணர்ந்தார். அவர் கொண்டுவந்த கோப்பைகளில், ஒரு சில, பார்ப்பதற்கு அழகாக, விலையுயர்ந்ததாகத் தெரிந்தன. வேறு சில கோப்பைகள், மிக எளிமையானதாக இருந்தன. இளையோர், ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டதும், பேராசிரியர், கோப்பைகளில் 'காபி'யை ஊற்றியவண்ணம் பேச ஆரம்பித்தார்:
"உங்கள் கரங்களில் இருக்கும் கோப்பைகளைப் பாருங்கள். அழகாக, விலையுயர்ந்ததாகத் தெரிந்த கோப்பைகளை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். சாதாரண கோப்பைகளை யாரும் தொடவில்லை. மிகவும் நல்லவற்றையே பெறவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறீர்கள். இதில் தவறு ஏதுமில்லை. ஆனால், அங்குதான் உங்கள் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன என்பதை நீங்கள் உணரவேண்டும்.
நீங்கள் வைத்திருக்கும் கோப்பை, அதில் ஊற்றப்படும் 'காபி'யின் சுவையை எவ்விதத்திலும் மாற்றப்போவதில்லை. சில வேளைகளில், விலையுயர்ந்த கோப்பைகள், உள்ளே இருப்பனவற்றை மறைக்கவும் செய்கின்றன.
நீங்கள் அனைவரும் பருக விரும்பியது, 'காபி'யை, கோப்பையை அல்ல. இருப்பினும், உங்களை அறியாமல், உங்கள் கவனம் கோப்பையின் மீது திரும்பியது. விலையுயர்ந்த கோப்பைகளைத் தேடிச் சென்றீர்கள். உங்கள் நண்பர்கள் எடுத்த கோப்பையையும் ஓரக்கண்களால் பார்த்தீர்கள்.
இங்கு நடந்ததை, வாழ்வுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வாழ்வு என்பது 'காபி'. உங்கள் வேலை, நீங்கள் வாங்கும் சம்பளம், சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து, ஆகியவை, கோப்பைகள். வாழ்வு என்ற 'காபி'யைத் தாங்கி நிற்கும் கோப்பைகள். கோப்பைகளில் அதிக கவனம் செலுத்தி, 'காபி'யைச் சுவைக்கத் தவறுகிறோம். கடவுள் தருவது 'காபி'; கோப்பை அல்ல" என்று பேராசியர் கூறி முடித்தபோது, இளையோர் ஆழ்ந்த அமைதியில் மூழ்கினர்.
வாழ்வில் மிகச் சிறந்தவற்றைப் பெறுவதால், ஒருவர் மகிழ்ச்சி அடைவதில்லை. பெற்றதை, மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவோரே, மகிழ்வுடன் வாழ்கின்றனர்.

I was Blind, Now I See

புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் பகுதி 7

சிலோவாம், அதாவது, அனுப்பப்பட்டவர் என்ற பொருள்படும் குளத்தில் கண்களைக் கழுவி, பார்வை பெற்ற மனிதர், இறைவனின் கருணையை எடுத்துரைக்க அனுப்பப்பட்டவராக மாறினார். அனுப்பப்பட்டவரின் சாட்சிய வாழ்வு, பிரச்சனையோடு ஆரம்பித்தது என்று, சென்ற வாரத் தேடலை நிறைவு செய்தோம்.
பிரச்சனை என்ன? பிரச்சனை என்ன? என்ற கேள்வியைவிட, பிரச்சனை யார்? என்ற கேள்வியே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் பிரச்சனை, பரிசேயர்கள்தான். காரணம் ஏதுமில்லாத நேரங்களிலேயே, பிரச்சனையை உண்டாக்கும் திறமை படைத்தவர்கள், பரிசேயர்கள். இந்தப் புதுமை, ஒய்வு நாளில் நடந்துவிட்டது. சும்மா இருப்பார்களா?

பார்வை பெற்றவர், பரிசேயர் முன்பு கூட்டிச் செல்லப்பட்டார். வழக்கு ஆரம்பமானது. அவர்கள் கேள்வி கேட்டனர். அவர் பதில் சொன்னார். அவரது பதில்களால் திருப்தியடையாத பரிசேயர்கள், அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்களோ பயத்தில், அந்தப் பிரச்சனையிலிருந்து நழுவப் பார்த்தனர். பார்வையற்ற மகனுக்கு, இத்தனை ஆண்டுகள் பக்கபலமாக இருந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக மாறிய மகனுக்கு ஆதரவளிக்கத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள், அவ்வளவு தூரம், அவர்களைப் பயமுறுத்தி, பார்வை இழக்கச் செய்திருந்தது.
பார்வை பெற்றவர், பிறந்ததுமுதல் தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்ததில்லை. இன்றுதான், முதல் முறையாக, தன் பெற்றோரையும், பரிசேயரையும், அவர் பார்க்கிறார். தங்கள் மகன் பார்வையற்றவராகப் பிறந்தபோது, அதை, இறைவன் தந்த சாபம் என்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சொன்ன வேளையில், தங்கள் மகனை புறக்கணிக்காமல் ஏற்றுக்கொண்ட தன் பெற்றோரை எண்ணி, அவர் பெருமை கொண்டிருந்தார். ஆனால், இன்று, பரிசேயர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து நின்ற தன் பெற்றோர்களைக் கண்டு, அவர் பரிதாபப்பட்டிருக்கவேண்டும். அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள், பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் இவ்வளவு நெருங்கி வாழ்ந்த பரிசேயர்கள், இப்படி, கடவுளை அறியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று, அவர் வேதனைபட்டிருப்பார்.

தன் ஊனக் கண்களால் இன்னும் பார்க்காத இயேசுவை, அவர், அகக் கண்களால் பார்த்துவிட்டதால், பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை.  மாறாக, அவரது சாட்சியம் படிப்படியாக தீவிரமானது. அதைக் கண்டு, அவரை, கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கியிருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் ஆழமும், முழுமையும் அடைந்தது.

பரிசேயருடன் நிகழ்ந்த வாதத்தில், பார்வை பெற்றவர், இயேசுவைப்பற்றி சொன்ன கூற்றுகளையெல்லாம் தொகுத்து பார்த்தால், அவரது அகக்கண்கள் படிப்படியாய் இயேசுவைக் கண்டுகொண்ட புதுமையை நாம் புரிந்துகொள்ளலாம்.

9/11 - இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி ஏன் கண்களில் பூசினார்.
என்பது, பார்வைபெற்றவர் கூறும் முதல் கூற்று. அவரது சாட்சியத்தின் ஆரம்பத்தில், இயேசு எனப்படும் மனிதர் என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்.
அடுத்தது, 9/15 - இயேசு என் கண்களில் சேறு பூசினார். என்று பரிசேயர்கள் முன் கூறுகிறார். மூன்றாம் மனிதராக, தூரமாய் இருந்த இயேசு நெருங்கி வந்ததைப் போல் அவர் உணர்ந்ததால், இயேசு என்று மட்டும் கூறுகிறார். இன்னும் சற்று நேரம் சென்று, 9/17 - அவர் ஓர் இறைவாக்கினர் என்று கூறுகிறார்.

இயேசுவை ஒரு பாவி என்று தாங்கள் கூறியது போதாதென்று, பார்வை பெற்ற அவரும் இயேசுவை பாவி என்று கண்டனம் செய்ய வேண்டுமென்று, பரிசேயர்கள் வற்புறுத்துகின்றனர். பார்வை பெற்றவர், அவர்களிடம் இறுதியாகக் கூறும் சொற்கள் வலிமைமிக்க சாட்சியச் சொற்கள்:
யோவான் 9:31-33
"பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.  பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே!  இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது" என்றார்.

இவ்வாறு படிப்படியாக அக ஒளி பெற்ற அவர், இறுதியில் இயேசுவைச் சந்தித்தபோது, அவரது அகம் முழுவதும் இயேசுவின் ஒளியால் நிறைந்தது. அப்பகுதியைக் கூறும் நற்செய்தி இதோ:
யோவான் 9:35-38
யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன் என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர் என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன் என்று கூறி அவரை வணங்கினார்.

பார்வை பெற்றவரிடம் இயேசு பேசும்போது, "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்" என்று கூறும் சொற்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. இயேசுவுக்கும், அவரால் பார்வை பெற்றவருக்கும் இடையே நிகழும் முதல் சந்திப்பு இது. அப்படியிருக்க, "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்" என்று இயேசு குறிப்பிடுவது, புதிராக உள்ளது. ஆனால், சிறிது ஆழமாகச் சிந்தித்தால், பார்வையற்றவர், இயேசுவை, ஏற்கனவே, தன் உள்ளத்தால் பார்த்துவிட்டார் என்பதை, இயேசு அவருக்கு உணர்த்துவதுபோல் இச்சொற்கள் அமைந்துள்ளன. இயேசு என்ற மனிதர், என்று ஆரம்பித்த இம்மனிதரின் சாட்சியம், கடவுளிடமிருந்து வந்தவர் என்ற அளவு தெளிவு பெற்று, இறுதியில் இயேசுவின் முன் "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" என்று முழுமை அடைந்தது.

அகமும், புறமும் பார்வைபெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை, ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. 9/16  "ஒய்வு நாள் சட்டத்தை கடைபிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது" என்று ஆரம்பிக்கும் அவர்களது எண்ண ஓட்டத்தை நற்செய்தியாளர் யோவான், கொஞ்சம், கொஞ்சமாய் வெளிக் கொணர்கிறார்.
ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயப்பட ஆரம்பித்தனர். இருளுக்கு பழகிப்போன அவர்கள் கண்களுக்கு, பார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி, எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல், கோபமாக மாறி, அவர்கள், இயேசுவின் சாட்சியை வெளியே தள்ளினர்.

யோவான் 9ம் பிரிவின் இறுதியில் பரிசேயர்களுக்கும், இயேசுவுக்கும் நடந்த உரையாடலை இவ்வாறு கூறுகிறார்.
நற்செய்தி யோவான் 9/ 39-41
அப்போது இயேசு, “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன் என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் எங்களுக்குக் கண் தெரிகிறது என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள் என்றார்.
பார்வையற்றவாய், பிறரது பரிதாபத்தையும், தர்மத்தையும் நம்பி இருந்தவர், உடலளவில் முதலில் பார்வை பெற்றார். பின்னர் உள்ளத்தில் ஆழமான தெளிவு பெற்றார். இதற்கு நேர் மாறாக, உடலளவில் பார்வைத்திறன் பெற்ற பரிசேயர்களோ, உள்ளத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை இழந்தனர்.

உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதை பலவாறாக நாம் கூறுகிறோம். பொதுவாக, எந்த ஓர் உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி, நம்மைக் குருடாக்கிவிடுவதாக அடிக்கடி கூறுகிறோம். "தலை கால் தெரியாமல்" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுவோரை, "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம். ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி எத்தனை விதமான கூற்றுகள், நம் பேச்சு வழக்கில் உள்ளன.
உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு என்பதால்தான், ‘ஆன்மாவின் சன்னல்கள் நம் கண்கள் என்று சொல்வார்கள். இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார்.
கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். (மத்தேயு 6 : 22)

உடலளவில் பார்வை பெற்றால் போதாது, அகத்திலும் பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை இறைவன் நம் அனைவருக்கும் சொல்லித்தருகிறார். அக ஒளி பெறுவோம். அகிலத்திற்கு ஒளியாவோம். உடலளவில் பார்வைத்திறன் குறைந்தோரின் வாழ்வில் இறைவன் உள்ளொளி பெருக்கவேண்டுமென செபிப்போம்.