31 August, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 3

Tears are prayers too

பரந்து விரிந்த கடல்பரப்பில் மிதந்துசெல்லும் ஒரு கப்பலை கற்பனையில் காணமுயல்வோம். அக்கப்பலில் பயணிக்கும் பலருக்கு இதமான உணர்வுகள் நிறைந்திருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, நீலக்கடல், மேலே, ஆங்காங்கே வெண்மேகங்கள் மிதக்கும் நீலவானம், காதால் கேட்பதெல்லாம், கடல்நீரின் ஓசை. இத்தகைய ஒரு சூழல், இதமான உணர்வுகளைத் தருவதில் வியப்பேதும் இல்லை.
அப்போது, எதிர்பாராதவண்ணம், திடீரென, கருமேகங்கள் சூழ்ந்து, புயல் உருவானால், பயணிகளின் மனநிலை முற்றிலும் மாறும். அவ்வேளையில், பயணிகளின் மனங்களில் 'எப்போது கரைசேருவோம்' என்ற கேள்வியே மேலோங்கி இருக்கும். புயலும், அலைகளும் சூழ்ந்த கப்பலை ஓட்டிச்செல்லும் மாலுமி, பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தால், எத்தனை கடினமான ஆபத்திலும், கரையில் இருப்போருடன், தொடர்புகளை ஏற்படுத்தி, கப்பலை, பத்திரமாகக் கரைசேர்ப்பார். 

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சார்ல்ஸ் ஸ்பர்ஜன் (Charles Spurgeon) என்ற புகழ்பெற்ற ஆங்கிலேய மறையுரையாளர், புயல்சூழ்ந்த கப்பலை வழிநடத்தும் இந்த மாலுமியின் உருவகத்தைப் பயன்படுத்தி, 17ம் திருப்பாடலின் விளக்கவுரையைத் துவக்கியுள்ளார். மன்னர் தாவீது, ஆண்டவருடன் தொடர்புகொள்வதில் அதிக அனுபவம் பெற்றவர் என்பதால், பிரச்சனைகள் என்ற புயல் சூழ்ந்ததும், அவரால், ஆண்டவரை, விரைவில், தொடர்புகொள்ள முடிந்தது, உதவிகளைப் பெறமுடிந்தது என்று, ஸ்பர்ஜன் அவர்கள், கூறியுள்ளார்.

17ம் திருப்பாடலின் துவக்கத்தில், ஆண்டவரிடம், தாவீது எழுப்பும் மன்றாட்டு, இவ்வாறு பதிவாகியுள்ளது: ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும். (திருப்பாடல் 17:1) இந்த ஆரம்ப வரியில், 'என் வேண்டுதலை உற்றுக்கேளும்' (திருப்பாடல் 17:1) என்ற சொற்கள், ஆங்கிலத்தில், "Attend to my cry", அதாவது, "என் அழுகையைக் கவனித்தருளும்" என்று, பதிவாகியுள்ளன. அழுகைஎன்ற சொல்லை மையப்படுத்தி, மறையுரையாளரான ஸ்பர்ஜன் அவர்கள் வழங்கியுள்ள விளக்கம், அழகானது. "உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், கற்றுக்கொள்ளும் முதல் மொழி, அழுகை. மனித ஒலிகளிலேயே மிக இயல்பாக வெளிப்படுவது, அழுகுரல். நமது செபம், அறிவிலிருந்த உருவான சொற்களாய் இருப்பதைக்காட்டிலும், குழந்தையின் அழுகையைப்போல் இயல்பாக இருந்தால், அது இறைவனுக்கு முன் உண்மையாக ஒலிக்கும். பெற்றோரின் உள்ளத்தை வெல்வதற்கு, குழந்தையின் அழுகுரலைக்காட்டிலும் சக்திவாய்ந்தது வேறெதுவும் இல்லை" என்று, ஸ்பர்ஜன் அவர்கள், 17ம் திருப்பாடலின் முதல் வரிக்கு விளக்கமளித்துள்ளார்.

அழுகையையும், இறைவேண்டலையும் இணைத்து, ஸ்பர்ஜன் அவர்கள் வழங்கியிருக்கும் இவ்விளக்கம், கண்ணீருடன் தன் மகனுக்காக 17 ஆண்டுகள் இறைவேண்டல் செய்த ஓர் அன்னையை நம் நினைவுக்குக் கொணர்கிறது. ஆகஸ்ட் 28, கடந்த சனிக்கிழமை, நாம் நினைவுகூர்ந்த மாபெரும் புனிதரான அகுஸ்தீன் அவர்களின் அன்னை, புனித மோனிக்கா அவர்கள், கண்ணீருடன் எழுப்பப்படும் இறைவேண்டலின் சக்தியை இவ்வுலகிற்கு உணர்த்தியவர்.

தன் மனமாற்றத்திற்காக, தன் அன்னை வடித்த கண்ணீரையும், எழுப்பிய செபங்களையும் குறித்து, புனித அகுஸ்தீன் அவர்கள், தான் எழுதிய 'Confessions' என்ற நூலில் தன் எண்ணங்களை பதிவுசெய்துள்ளார்.
அற்புத அறிவுத்திறன் கொண்ட இளைஞர் அகுஸ்தீன், Manichean என்றழைக்கப்பட்ட தவறான கொள்கையை நம்பி, வேறு பல தவறான வழிகளில் செல்வதைக் கண்ட அவரது அன்னை மோனிக்கா அவர்கள், ஒரு கத்தோலிக்க ஆயரின் துணையை நாடினார். இந்த ஆயர், மிலான் நகரின் புனித அம்புரோஸ் என்று வரலாற்று குறிப்புகள் கூறினாலும், அவரது பெயரைக் குறிப்பிடாமல், புனித அகுஸ்தீன், 'ஒரு கத்தோலிக்க ஆயர்' என்று மட்டும் தன் நூலில் பதிவு செய்துள்ளார்.
அந்த கத்தோலிக்க ஆயரிடம் சென்ற அன்னை மோனிக்கா அவர்கள், தன் மகனுக்கு ஆயர் அவர்கள் அறிவுரை வழங்குமாறு அவரை வேண்டினார். தன் உதவியை நாடிவந்த அன்னை மோனிக்காவிடம், ஆயர் அவர்கள், அறிவுரைகளுக்கு செவிமடுக்கும் பக்குவம் இளைஞர் அகுஸ்தீனிடம் இல்லை என்று கூறி, அவருக்கு உதவிசெய்ய மறுத்துவிட்டார். இருப்பினும், அந்த அன்னை, தொடர்ந்து, ஆயரைச் சந்தித்து, கண்ணீருடன் தன் விண்ணப்பத்தை, மீண்டும், மீண்டும் சமர்ப்பித்தார். இறுதியில், அந்த ஆயர், பொறுமை இழந்து, புனித மோனிக்காவிடம் கூறியதை, அகுஸ்தீன், தன் நூலில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "நீ அமைதியாகப் போ. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். இவ்வளவு கண்ணீருக்குச் சொந்தமான உன் மகன் அழிவதற்கு அவர் விடமாட்டார்" என்று, ஆயர், தன் அன்னையிடம் கூறியதாக, புனித அகுஸ்தீன் கூறியுள்ளார்.

St Monica and St Augustine

இதே நூலில், மற்றுமொரு இடத்தில், புனித அகுஸ்தீன், நயீன் நகரக் கைம்பெண்ணைப் பற்றி தன் சிந்தனைகளை எழுதியபோது, இறந்த மகனின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் நடந்து சென்ற அந்த கைம்பெண்ணின் கண்ணீரை இயேசு துடைத்தார். அதுபோலவே, ஆன்மீக அளவில் இறந்துபோன தான் மீண்டும் உயிர் பெறவேண்டும் என்று தன் அன்னை, கண்ணீருடன் எழுப்பிய வேண்டுதல், ஆண்டவரால் கேட்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

தன் அன்னையின் கண்ணீர் நிறைந்த இறைவேண்டுதல்களால் மனம் மாறிய புனித அகுஸ்தீன், தன் மனமாற்றத்திற்குப்பின், தன் பாவங்களைக் கழுவ சிந்திய கண்ணீரைப்பற்றியும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார். இவரைப்போலவே, மன்னர் தாவீதும், தன் பாவங்களுக்காக கண்ணீருடன் இறைவேண்டல் செய்திருப்பார் என்பது உறுதி. 17ம் திருப்பாடலின் முதல் வரிகளில், 'என் வேண்டுதலை உற்றுக்கேளும்' அல்லது, "என் அழுகையைக் கவனித்தருளும்" என்று கூறப்பட்டுள்ள சொற்கள், கண்ணீருடன் எழுப்பப்படும் இறைவேண்டலின் சக்தியை நமக்கு உணர்த்துகின்றன.

அழுகையின், கண்ணீரின் சக்தியை மன்னர் தாவீது நன்கு அறிந்திருந்தார். எனவே, திருப்பாடல்கள் நூலில், மூன்றில் இரண்டு பகுதி, கண்ணீரில் நனைந்த பாடல்களாக அமைந்துள்ளன என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். நாம் சிந்தும் கண்ணீரை இறைவன் நன்கு அறிவார் என்பதை, தாவீது, 56ம் திருப்பாடலில் அழகாகப் பதிவுசெய்துள்ளார்: என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா? (திருப்பாடல் 56:8)

இறைவாக்கினர்களும், கண்ணீருடன் செபிப்பதை, மேன்மையான ஆன்மீக சக்தியாகக் கருதினர். 'புலம்பும் இறைவாக்கினர்' என்று பெயர் பெற்ற எரேமியா உருவாக்கிய ஒரு நூல், 'புலம்பல் நூல்' அல்லது, 'புலம்பல் ஆகமம்' என்று அழைக்கப்படுகிறது. எருசலேமுக்கு நேரிட்ட பேரழிவையும், அதன் விளைவாக, இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் மையப்படுத்தி, 'புலம்பல் நூல்' உருவானது. எரேமியாவைப்போலவே, இறைவாக்கினர்கள் எசாயா, மற்றும், தானியேல் ஆகியோரும், வழிதவறி சென்ற இஸ்ரயேல் மக்களுக்காக, கண்ணீர் சிந்தி, இறைவனிடம் பரிந்துபேசினர் என்பதை, விவிலியத்தில் காண்கிறோம்.

மக்களின் பாவங்கள் பெருகியதைக் கண்டு, இறைவன் மனம் வருந்தினார் என்பதை தொடக்க நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்: மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. (தொடக்க நூல் 6:5-6)
பழைய ஏற்பாட்டில், தோரா (Torah) என்றழைக்கப்படும் முதல் ஐந்து நூல்களுக்கு, யூத மத ரபிகள் வழங்கிய விளக்கங்கள் அடங்கிய 'மித்ராஷ்' (Midrash) என்ற நூலில், இறைவனின் உள்ளம் துயரமடைந்தது என்ற கூற்றுக்கு, 'இறைவன் கண்ணீர் சிந்தினார்' என்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில், இயேசு, தன் நண்பர் இலாசரின் கல்லறை அருகில் கண்ணீர் வடித்ததையும், எருசலேம் நகருக்காகப் புலம்பியதையும் அறிவோம் (காண்க. யோவான் 11:35; லூக்கா 13:34)

இவ்வாறு, கண்ணீருடன் எழுப்பப்படும் இறைவேண்டல், விவிலியத்தில், தனியிடம் பெற்றுள்ளது. நாம் சிந்தும் கண்ணீர், வெறும் துன்பத்தின் வெளிப்பாடாக, நம்பிக்கையற்ற நிலையின் வெளிப்பாடாக இல்லாமல், இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் வெளிப்படும் கண்ணீராக அமையவேண்டும். இந்த எண்ணத்தை, புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய 2ம் திருமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: கடவுளுக்கு ஏற்புடைய முறையில் தாங்கிக் கொள்ளப்படும் மனவருத்தம், மீட்புதரும் மனமாற்றத்தை விளைவிக்கிறது. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உலகப் போக்கிலான மனவருத்தம், சாவை விளைவிக்கும். (2 கொரிந்தியர் 7:10) இத்தகைய நம்பிக்கை நிறைந்த கண்ணீர், தாவீதிடமிருந்து எழுந்தது. புனித மோனிக்காவிடமிருந்து எழுந்தது.

'என் வேண்டுதலை உற்றுக்கேளும்' அல்லது, "என் அழுகையைக் கவனித்தருளும்" என்று ஆரம்பமாகும் 17ம் திருப்பாடலில் நாம் தேடலை மேற்கொண்டுள்ள இவ்வேளையில், கண்ணீரோடு இறைவேண்டல் மேற்கொண்ட அன்னை, புனித மோனிக்காவைப் போல, தற்போது, ஆப்கானிஸ்தானில் ஆயிரமாயிரம் அன்னையர், கண்ணீரோடு இறைவேண்டலை எழுப்பிவருவதை நாம் அறிவோம். கண்ணீரோடு, அவர்கள் எழுப்பிவரும் இறைவேண்டலுக்கு ஆண்டவர் செவிமடுத்து, அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், நல்வாழ்வை வழங்கவேண்டும் என்ற உருக்கமான வேண்டுதலுடன், நம் தேடலை இன்று நிறைவுசெய்வோம்.

27 August, 2021

The danger of Rituals becoming Shackles சடங்குகள், சங்கிலிகளாகும் ஆபத்து

 
Jesus looks at the heart

22nd Sunday in Ordinary Time

Many of you have heard of the Jesuit priest Anthony de Mello, who blazed a unique trail for himself in the world of spirituality. Of course, he had also been the centre of quite a few controversies… He had published quite a few books with lots of stories. Most of his stories were taken from various other sources. But he used to add his own touch in terms of some punch lines added to the stories. One of his stories is the starting point of our Sunday reflection today… The Guru’s Cat, published in his book ‘The Song of the Bird’.
Here is the original version as given by Fr de Mello:
Each time the guru sat for worship with his students, the ashram cat would come in to distract them, so he ordered them to tie it when the ashram was at prayer.
After the guru died, the cat continued to be tied at worship time. And when the cat expired, another cat was brought into the ashram to make sure that the guru’s orders were faithfully observed at worship time.
Centuries passed and learned treatises were written by the guru’s scholarly disciples on the liturgical significance of tying up a cat while worship is performed. 

When I read the Gospel passage for this Sunday, this story spontaneously presented itself to me. Kindly allow me to embellish this story a bit… to drive home a point – the point about rituals!
When the guru died, the cat, which was attached to the guru, did not bother to go to the prayer hall. But the ashram members thought that it was odd to begin their worship without the cat. So, they searched the ashram, found the cat, brought it to the prayer hall, tied it to the particular pillar and then sat down for prayer.
When the cat died, the members of the ashram went all over the town to look for a cat that was the exact replica of the one that died. They made sure that the new cat was tied to the same pillar and then sat down for their prayer.
Centuries passed; many things had changed in the ashram. But the one thing that had not changed was the ‘cat-rite’ that had to be done at the time of prayer… Pardon me if my embellishment looks a bit laboured!

The cat which was considered a distraction during the worship, over time, became essential for the worship. At the beginning, prayer was considered more precious than the cat and hence, it was tied up. But, over the years, the cat became more precious than prayer and, therefore, their worship was tied to a cat-rite. This is the power of rituals!

Our day-to-day life is filled with lots of rituals, starting from the way we freshen up in the morning. These rituals are a help to us, as long as they remain… helps. The moment they assume more importance, they can become hell, instead of help. This is not a simple play on words. We are painfully aware of the amount of violence unleashed when some rituals are tampered with, especially in the sphere of religion.

Today’s Gospel passage (Mark 7:1-8, 14-15, 21-23) is about ‘the ritual washing’ practised by the Israelites. ‘The Pharisees with some scribes who had come from Jerusalem’ were shocked to see the disciples of Jesus eating their meals ‘with unclean, that is, unwashed, hands’. Mark then goes on to explain the ritual washing meticulously followed by the Jews: “For the Pharisees and, in fact, all Jews, do not eat without carefully washing their hands, keeping the tradition of the elders. And on coming from the marketplace, they do not eat without purifying themselves. And there are many other things that they have traditionally observed, the purification of cups and jugs and kettles and beds.” (Mark 7: 3-4)

The ‘ritual of washing’ followed by the Jews, brings to mind a Gospel incident as well as an event from English literature. All of us know how Pilate ‘washed his hands’ off the responsibility of saving Jesus: When Pilate saw that he was getting nowhere, but that instead an uproar was starting, he took water and washed his hands in front of the crowd. “I am innocent of this man’s blood,” he said. “It is your responsibility!” (Matthew 27:24)
Wriggling out of responsibility is associated with gestures of washing. In some cultures, it is just the washing of the hands, whereas in other cultures, (India, for instance) one pours water over one’s head, or, dips oneself fully in a pond or a river to ‘wash away’ one’s responsibility or crime. The underlying belief is that water washes away crimes, sins and responsibilities.

On the contrary, we also have the famous scene from the Shakespearean play ‘Macbeth’, where water does not seem to help. Lady Macbeth, pushes Macbeth to wash away his guilt feelings of killing the king, by washing his hands with a little water. Later on, she is haunted by guilt feelings, sleepwalks in her chamber, ‘rubs her hands’ for ‘a quarter of an hour’, lamenting ‘what, will these hands ne’er be clean’. She can still smell blood: ‘All the perfumes of Arabia will not sweeten this little hand’. Quite strangely, WHO (The World Health Organisation) made use of the dialogues of Lady Macbeth while insisting on how to wash our hands during the pandemic!

What Mark has described in today’s Gospel has been driven into our minds in the past 18 months – washing of hands, washing of things brought from the market etc. – due to the mortal fear created by an unseen and unknown virus. What Mark speaks of here seems to suggest that the Jews followed very high standards of hygiene!
If the rules of washing, keeping a distance and wearing a mask etc. stipulated by the government, remain at the level of hygiene and self-protection, they are fine. But, if they encourage us to develop a paranoia of seeing other human beings as ‘virus-carriers’, then notions of ‘clean people’ and ‘unclean people’ can get embedded in our minds strongly. This was the attitude exhibited by the Jews in their ceremonial washing.

For a Jew, especially for the religious leaders, the rituals of washing were not a matter of hygiene, but a matter of establishing one’s superiority. For them, market place is a polluted place, not because of germs, but, mainly because of the presence of the Samaritans and pagans. Hence, to reinforce their sense of superiority, when they came home, they followed an elaborate ritual of washing. Some of these rituals are present in the orthodox Brahmin families even today.

This ritual was only a tiny part of the life of Israelites filled with hundreds of other rituals. These rituals were defined and redefined by the religious leaders… Year after year, these rituals and their prescriptions seemed to expand… against the warning given to them by Moses, not to do so. We read this warning of Moses in the first reading today:
Deuteronomy 4 : 1-2
"And now, O Israel, give heed to the statutes and the ordinances which I teach you, and do them; that you may live, and go in and take possession of the land which the LORD, the God of your fathers, gives you. You shall not add to the word which I command you, nor take from it; that you may keep the commandments of the LORD your God which I command you.

Moses gave them a simple instruction… don’t add or delete anything, just follow them in life. Jesus was aware that this warning of Moses was not heeded. The religious leaders seemed to derive special pleasure in imposing rules and more rules on the innocent people. It is said, that out of the 10 commandments given by God to Moses, the Scribes and the Pharisees created 613 ‘commandments’ (mitzvot). Among these 613 ‘commandments’, the negative ‘commandments’ are more (365) than the positive ‘commandments’ (248). (Source – Wikipedia). This is yet again one more trait of tradition, which prescribes more ‘Don’t’s than ‘Do’s!

A society which carries a heavy load of tradition, cult, ritual etc., tends to ‘deify’ these rituals. Such a situation alienates them from God and ties them to the rituals. A warning to this effect was given by Prophet Isaiah to which Jesus makes an allusion in today’s Gospel (Mark 7:6-7). Here is the original warning, as given by Isaiah: And the Lord said: "Because this people draw near with their mouth and honor me with their lips, while their hearts are far from me, and their fear of me is a commandment of men learned by rote.” (Isaiah 29:13)

It is so easy to memorise prayers, mumble them as part of one’s ritual, while our hearts remain far away from God. Here is a tiny story written by William Barclay to illustrate this:
A man steeped in religious rituals was pursuing an enemy to kill him. In the midst of the pursuit the public call to prayer sounded. Instantly, the ‘religious’ man got off his horse, knelt down and prayed the required prayers as fast as he could. Then he leaped back on his horse to pursue his enemy in order to kill him.

True religion liberates us from doing ‘lip-service’ to God, and loving God and our neighbour wholeheartedly. In the second reading today, Apostle James defines true religion in the following words: Religion that God our Father accepts as pure and faultless is this: to look after orphans and widows in their distress and to keep oneself from being polluted by the world. (James 1:27)

As we reflect on the danger of empty rituals, we pray that our life is filled with more substantial values than shallow, empty rituals. May our values be revealed in concrete actions of loving God and our neighbour, especially those who are affected the most by the COVID virus, as well as, other social, political, and ‘religious’ viruses!

It is what comes out… that defiles them – Mark 7,20

பொதுக்காலம் 22ம் ஞாயிறு

முனிவர்கள் வாழ்ந்துவந்த ஓர் ஆசிரமத்தில், நாள் தவறாமல் பூஜைகள் நிகழ்ந்தன. அந்த ஆசிரமத்தின் தலைவர், ஒரு பூனையை வளர்த்துவந்தார். வெள்ளை நிறம் கொண்ட அந்தப் பூனை, பூஜை நேரங்களில், குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது. எனவே, ஆசிரமத் தலைவர், அப்பூனையை, பூஜை மண்டபத்தின் ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார். ஒவ்வொரு நாளும், பூஜை ஆரம்பித்ததும், பூனையும் அங்கு வந்ததால், அதை, தூணில் கட்டிவைத்துவிட்டு, பூஜை துவங்கியது.
சில மாதங்கள் சென்று, அந்த ஆசிரமத் தலைவர் திடீரென காலமானார். மற்றொருவர் அப்பொறுப்பை ஏற்றார். தலைவர் இறந்தபிறகு, அவரால் வளர்க்கப்பட்டப் பூனை, பூஜை மண்டபத்திற்குச் செல்வதை நிறுத்தியது. ஆனால், ஆசிரமத்தில் இருந்தவர்களோ, ஒவ்வொரு நாளும், பூனையைத் தேடிக் கண்டுபிடித்து, அதை, குறிப்பிட்ட ஒரு தூணில் கட்டியபிறகே, தங்கள் பூஜையைத் துவக்கினர்.
இன்னும் ஓராண்டு கழித்து, அந்தப் பூனையும் இறந்தது. ஆசிரமத்தில் இருந்தவர்கள், அடுத்த நாள், பூஜையைத் துவக்குவதற்குமுன், மற்றொரு பூனையைத் தேடி, ஊருக்குள் சென்றனர். அதுவும், இறந்துபோன பூனையைப் போலவே, வெள்ளை நிறத்தில் உள்ள பூனையைத் தேடி, அலைந்து கண்டுபிடித்தனர். புதியப் பூனையை, ஆசிரமத்திற்குக் கொண்டுவந்து, முந்தின பூனை கட்டப்பட்டிருந்த அதேத் தூணில், அதைக் கட்டியபிறகே, தங்கள் பூஜையை ஆரம்பித்தனர்.
பல ஆண்டுகள் சென்றபின், அந்த ஆசிரமத்தில், பூனையின்றி பூஜை நடத்தக்கூடாது என்ற சட்டம் வகுக்கப்பட்டது. அச்சட்டமும், மிக நுணுக்கமாக வகுக்கப்பட்டது. எவ்வகைப் பூனையை வாங்கவேண்டும், அந்தப் பூனையை, பூஜை மண்டபத்தில், எந்தத் தூணில் கட்டவேண்டும், என்று, அச்சட்டத்தில், பல நுணுக்கங்கள் இணைக்கப்பட்டன. பூஜைக்கும், பூனைக்கும் உள்ள பிரிக்கமுடியாதத் தொடர்பைக் குறித்து, பக்கம், பக்கமாகப் பல விளக்கங்கள் எழுதப்பட்டன.

புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவரான இயேசுசபை அருள்பணியாளர், அந்தனி டி மெல்லோ அவர்கள் எழுதிய, 'The Song of the Bird' என்ற நூலில் காணப்படும் ஒரு கதை இது.

பூஜைக்கு இடையூறாக இருந்ததால் தூணில் கட்டப்பட்டது, பூனை. ஆனால், நாளடைவில், பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற நிலைக்கு அந்த ஆசிரமத்தினர் தள்ளப்பட்டனர். பூனை, பூஜைக்கு இடையூறாக இருந்தது என்ற அடிப்படை காரணம் மறக்கப்பட்டது. அதற்கு முற்றிலும் மாறாக, பூஜை செய்வதற்கு, பூனை தேவைப்பட்டது. பூனையைவிட பூஜை முக்கியம் என்ற உண்மை மறக்கப்பட்டு, பூஜையைவிட பூனை முக்கியம் என்ற நிலை உருவானது. சடங்குகளுக்கு உள்ள சக்தி இது.

நமது ஒவ்வொருநாள் வாழ்வும் சடங்குகளால் நிறைந்துள்ளது. காலையில் எழுந்ததும், பல் துலக்குவதில் துவங்கி, நாம் கடைபிடிக்கும் சடங்குகள் பல உள்ளன. இவை அனைத்தும், நமக்கு உதவி செய்வதற்காக, நாம் உருவாக்கிக்கொண்ட சடங்குகள். உதவி செய்வது என்ற அளவில் இவை பயன்படுத்தப்பட்டால், நல்லதுதான். ஆனால், நம் சமுதாய வாழ்வில், இன்னும் குறிப்பாக, சமய வாழ்வில் உருவாக்கப்பட்டுள்ள சடங்குகள், நமக்கு உதவி செய்வதற்குப்பதில், நம்மை, சங்கிலிகளாக பிணைக்கின்றன, அதனால், பிரச்சனைகள் எழுகின்றன.

மனிதருக்குத் தேவை என்ற எண்ணத்துடன், துவக்கப்படும் பழக்க வழக்கங்கள், நாளடைவில், மரபாக, மந்திரச்சடங்காக மாறும்போது, அந்த சடங்கைப் பாதுகாக்க மனிதர்கள் தேவை என்ற நிலையை உருவாக்கிவிடுகிறோம். “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை” (மாற்கு 2:27) என்று இயேசு கடிந்துகொண்டது, நமக்கு நினைவிருக்கலாம்.

இன்றைய நற்செய்தியில் சடங்கு பற்றிய விவாதம் எழுகிறது. கழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது, பெரும் பிரச்சனையை உருவாக்குகிறது. முறைப்படி கழுவுதல் (Ritual Washing) என்பது, யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில், இச்சடங்கின் நுணுக்கங்கள் கூறப்பட்டுள்ளன:
மாற்கு நற்செய்தி 7: 3-4
பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

கைகளைக் கழுவுதல் என்ற இச்சடங்கு, இயேசுவின் பாடுகளின்போது நிகழ்ந்த ஒரு சடங்கை நினைவுக்குக் கொணர்கிறது. பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். (மத்தேயு 27:24) என்று மத்தேயு நற்செய்தியில் வாசிக்கிறோம்.
தன்னுடைய பொறுப்பிலிருந்தும், அத்துடன் வரக்கூடிய பழிகளிலிருந்தும் விலகிக்கொள்வதைக் காட்ட, பிலாத்து, கைகளைக் கழுவினான். இந்தியா உட்பட, ஒரு சில ஆசிய கலாச்சாரங்களில், கைகளை மட்டும் கழுவாமல், ஒருவர், தன் தலைமீது தண்ணீரை ஊற்றி, உடல் முழுவதையும் கழுவி, பொறுப்பிலிருந்தும், பாவத்திலிருந்தும் விலகிக்கொள்வதை உணர்த்துவார். அல்லது, ஒரு குளத்திலோ, ஆற்றிலோ மூழ்கி எழுந்து, இச்சடங்கை நிறைவேற்றுவதும் உண்டு. கரங்களில், அல்லது உடலெங்கும் ஊற்றப்படும் தண்ணீர், பொறுப்பு, பழி, பாவம் அனைத்தையும் கழுவும் என்ற கருத்தில் இச்சடங்கு பின்பற்றப்படுகிறது.

இதற்கு மாறாக, ஷேக்ஸ்பியர் அவர்கள் உருவாக்கிய 'மாக்பெத்' நாடகத்தில், அரசரைக் கொன்ற தளபதி மாக்பெத்தும், கொலைசெய்ய அவரைத் தூண்டிய மாக்பெத்தின் மனைவியும், செய்யப்பட்டக் கொலைகளின் இரத்தப்பழியை, தண்ணீரைக்கொண்டு கழுவமுடியாமல் தவிப்பதை, நாடக ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.
மாக்பெத்தின் மனைவி, தூக்கத்தில் நடந்தபடியே, தன் கைகளை மீண்டும், மீண்டும் தேய்த்துக்கொண்டு, கைகளில் உள்ள கறை போகவில்லை என்றும், அரேபியாவின் அனைத்து நறுமணப் பொருள்களும் தன் கைகளில் உள்ள இரத்த நாற்றத்தை நீக்காது என்றும் புலம்புகிறார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் 'கைகளை மிகக் கவனமாகக் கழுவுங்கள்' என்ற அறிவுரையை, நம் உள்ளங்களில் ஆழப்பத்திக்க, உலக நலவாழ்வு நிறுவனம் (WHO), இந்தக் காட்சியில் வரும் வசனத்தைப் பயன்படுத்தியது.

யூதர்கள் வெளியிலிருந்து வந்ததும் தங்களையும், வாங்கிவந்த பொருள்களையும் கழுவுவர் என்று, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள சடங்கை, மேலோட்டமாகப் பார்த்தால், இது, மக்களின் உடல்நலனை மனதில்கொண்டு உருவாக்கப்பட்ட வழிமுறை என்று நாம் பொருள்கொள்ளமுடியும். சந்தையிலிருந்து வாங்கிவரும் பொருள்களும், வெளியில் சென்று வீடு திரும்புவோரும், கிருமிகள் பலவற்றைச் சுமந்துவரக்கூடும். எனவே, கைகளையும், பொருள்களையும் கழுவுவது, உடல்நலனுக்கு உகந்தது என்பதை, யாரும் மறுக்கஇயலாது. 'கைகளைக் கழுவுங்கள்' என்ற சொற்கள், கடந்த பல மாதங்களாக, ஓர் எச்சரிக்கையாக ஆழ்மனதில் செதுக்கப்பட்டுள்ள நமக்கு, யூதர்கள் பின்பற்றிய இச்சடங்கு, சரியான வழி என்றே சொல்லத்தோன்றுகிறது.

கைகளைக் கழுவுங்கள், சமுதாய தூரத்தைக் கடைபிடியுங்கள், முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள் என்று, அடுக்கடுக்காய் நமக்கு வழங்கப்பட்ட விதிகள் அனைத்தையும், நலவாழ்வு, தற்காப்பு என்ற அளவில் சிந்திக்கும்போது, அவை சரியென்றே தோன்றுகிறது. ஆனால், இந்த விதிமுறைகளுக்குப் பின்புலத்தில், நாமாகவே உருவாக்கிக்கொள்ளும் ஏனைய சிந்தனை ஓட்டங்கள், நம்மை வேறுசில பாகுபாடுகளுக்குள் அழைத்துச் செல்லக்கூடும். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் கிருமிகளைச் சுமப்பவர்கள் என்ற அச்சத்தை, அளவுகடந்தவண்ணம் நமக்கு நாமே ஊட்டி வளர்த்தால், நாம் 'சுத்தமானவர்கள்' எனவே, 'சுத்தமற்றவர்களை' விட்டு தூரச்செல்ல வேண்டும் என்ற மனநிலை நமக்குள் ஆழப்பதியக்கூடும். 'சுத்தமானவர்கள்' 'சுத்தமற்றவர்கள்' என்ற இத்தகைய பாகுபாட்டு மனநிலையே, யூதர்களின் கழுவும் சடங்குகளின் பின்புலமாக இருந்தது.

பரிசேயர்களும், யூதர்களும் கழுவுதலை ஒரு சடங்காக மேற்கொள்ள அவர்களை அதிகம் தூண்டியது, உடல்நலனைக் காத்துக்கொள்ளும் அக்கறை என்பதைக்காட்டிலும், தங்கள் இனத்தின் மேன்மையை நிலைநாட்டும் ஆணவம் என்றே சொல்லவேண்டும். இதனாலேயே, இதைக்குறித்து இயேசு வேதனையடைந்தார். வெளி உலகில் யூதர்கள் நடமாடிய இடங்கள், சந்தையில் வாங்கிய பொருள்கள், ஆகியவை, புறவினத்தாரும் நடமாடிய இடங்கள், அல்லது, பயன்படுத்திய பொருள்கள் என்பதால், அவை 'தீட்டுப்பட்டவையாக' மாறின. இந்தக் காரணமே, கழுவுதல் சடங்கை மிக கவனமாக மேற்கொள்ள, யூதர்களைத் தூண்டியது. இந்தியாவில், தங்களையே உயர்ந்தவர்கள் என்றும், ஏனையோர் தாழ்ந்தவர்கள், அல்லது, தீண்டத்தகாதவர்கள் என்றும் எண்ணிவரும் பாரம்பரிய பிராமணர்கள் சமுதாயத்தில், இத்தகைய கழுவுதல் சடங்குகள், இன்றும், ஆழமாக வேரூன்றியுள்ளன.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள், மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இத்தகைய ஆபத்து உருவாகக்கூடும் என்பதை உணர்ந்த மோசே, இறைவன் வழங்கிய சட்டங்களைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்று, மக்களுக்கு அறிவுரை வழங்குவதை இன்றைய முதல் வாசகத்தில், இவ்வாறு வாசிக்கிறோம்:
இணைச்சட்டம் 4: 1-2
இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.

மோசே தந்த தெளிவான அறிவுரையை மறந்துவிட்டு, இறைவன் தந்த கட்டளைகளில் புதிய புதிய நுணுக்கங்களைப் புகுத்தி, அவற்றை, சட்டங்களாக மாற்றுவதில், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முழு கவனம் செலுத்தினர். இறைவன் தந்த பத்து கட்டளைகளை சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் 613 சட்டங்களை வகுத்துவைத்தனர். (Hebrew: "613 mitzvot")
இதில் மற்றொரு தவறான போக்கு என்னவென்றால், நுணுக்கமான இச்சட்டங்கள், மதத்தலைவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், மக்கள் மீது இன்னும் அதிக சுமைகளைச் சேர்ப்பதாய் இருந்தது. இதையும் இயேசு ஒருமுறை மக்களிடம் சுட்டிக்காட்டினார்: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள்.” (மத்தேயு 23 : 1-4) என்று கூறினார்.

சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், சட்டங்கள், சடங்குகள் என்ற பல பாரங்களைச் சுமந்து, பழகிப்போகும் ஒரு சமுதாயம், விரைவில், இவற்றை, கடவுள் நிலைக்கு உயர்த்திவிடக்கூடும். இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகும்போது, மக்கள் இறைவனை மறந்துவிட்டு, சட்டங்களை வணங்கும் ஆபத்து உண்டென்று இறைவாக்கினர் எசாயா ஓர் எச்சரிக்கை விடுத்தார்:
என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது! (எசாயா 29 : 13என்று இறைவாக்கினர் எசாயா விடுத்த அந்த எச்சரிக்கையை, இயேசு, இன்றைய நற்செய்தியில் மீண்டும் நினைவுறுத்துகிறார்.

மனப்பாடம் செய்த சட்டங்களை, மந்திரங்களை, உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் இறையுணர்வும், மனித உணர்வும் சிறிதும் இல்லாமல் வாழமுடியும் என்பதை, விவிலிய அறிஞர் வில்லியம் பார்க்லே அவர்கள், ஒரு குட்டிக்கதை வழியே கூறியுள்ளார்.
மதப்பற்று அதிகம் உள்ள ஒருவர், தன் எதிரியைக் கொல்வதற்காக, குதிரையில் ஏறி, அவரைத் துரத்திச்செல்கிறார். அவ்வேளையில், நண்பகல் வழிபாட்டுக்காக அழைப்பு ஒலிக்கிறது. எதிரியைக் கொல்ல துரத்திச் செல்பவர், அந்த அழைப்பைக் கேட்டதும், குதிரையை விட்டு குதித்து, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, சொல்லவேண்டிய மந்திரங்களை அவசரம் அவசரமாகச் சொல்லி முடிக்கிறார். பின்னர், மீண்டும் குதிரையில் ஏறி, கொலைவெறியோடு, தன் எதிரியைத் துரத்திச்செல்கிறார். அவர் உதடுகள் அந்த வழிபாட்டு நேரத்தில் சொன்னது செபமா? சாபமா? தெரியவில்லை.

உதட்டளவில் இல்லாமல், உள்ளத்தளவில் இறைவனை நெருங்கியிருக்கும் உண்மையான மதம், அல்லது சமயம் சார்ந்த வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை, இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு தெளிவாகக் கூறியுள்ளார்:
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும். (யாக்கோபு 1:27)

புனித யாக்கோபு வரையறுத்த இத்தகைய சமயவாழ்வை, முழுமையாகப் பின்பற்றிவறியோருடன் மிக நெருங்கி வாழ்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள் செய்துவந்த பணியைக் கண்டு வியந்த ஒரு பத்திரிகையாளர், அவரிடம் ஒருநாள், "உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்யமுடிகிறது?" என்று கேட்டார். அன்னை அவரிடம், "நான் 18 வயதில் என் குடும்பத்தினரைவிட்டு, துறவறவாழ்வில் இணைந்தபோது, 'இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக்கொள். அவருடன் நடந்துசெல்' என்று சொல்லி, என் அம்மா என்னை வழியனுப்பி வைத்தார்கள். அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளன" என்று சொன்னார்.

உதடுகளால் மட்டுமல்லாமல், உள்ளத்தாலும், தன் முழு வாழ்வாலும், இறைவனுடனும், வறியோருடனும் மிக நெருங்கிவாழ்ந்த புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாளை, செப்டம்பர் 5ம் தேதி, அடுத்த ஞாயிறன்று, நினைவுகூர்கிறோம். அந்த அன்னையின் பரிந்துரையால், நாம், மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து, நம் சொல்லாலும், செயலாலும், இறைவனை நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.

24 August, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 2

 
Lord, hear my just plea

சென்ற வாரம், 17ம் திருப்பாடலில் நம் விவிலியத்தேடலைத் துவங்கிய வேளையில், இத்திருப்பாடலின் முதல் வரிகளில் கூறப்பட்டுள்ள வழக்கு, நியாயம் என்ற சொற்கள், நம் எண்ணங்களை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை நோக்கி திருப்பின. இன்று மீண்டும் அவரைச்சுற்றி நம் நினைவுகள் வலம்வருகின்றன. அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்திய சட்டங்கள்மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார் என்று, அவருடன் சிறையில் ஒரே அறையில் தங்கியிருந்த திருவாளர் Arun Ferreira அவர்கள் கூறியதை, சென்ற விவிலியத்தேடலில் நினைவுகூர்ந்தோம்.

நடுநிலையோடு, இந்திய அறிஞர்கள் வகுத்த சட்டங்கள்மீதும், தான் வாழ்நாளெல்லாம் கடைபிடித்துவந்த உண்மையின்மீதும், நம்பிக்கை கொண்டிருந்த அருள்பணி ஸ்டான் அவர்கள், அந்தச் சட்டத்தின் வழியே தனக்கு கட்டாயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தன் சிறைவாழ்வின் துன்பங்களை ஏற்றுக்கொண்டார். இறுதிவரை, அவர், நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்துக்கிடந்த நீதி கிடைக்காமலேயே, அவர், இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.
"ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்று தாவீது, 17ம் திருப்பாடலின் ஆரம்பத்தில் எழுப்பிய வேண்டுதலை, அருள்பணி ஸ்டான் அவர்களும், சிறையில் இருந்த ஒன்பது மாதக் காலத்தில், வெவ்வேறு வடிவங்களில் எழுப்பியிருப்பார். அவர் எழுப்பிய வேண்டுதலைக் கேட்ட விண்ணகத்தந்தை, அவருக்கு நியாயம் வழங்கும் வகையில், அவரை, விண்ணகத்திற்கு அழைத்துச்சென்றார்.

அருள்பணி ஸ்டான் அவர்கள் மரணமடைந்த ஜூலை 5ம் தேதிக்கு அடுத்தநாள், சதிஷ் ஆச்சார்யா (Satish Acharya) என்ற கேலிச்சித்திரக் கலைஞர், அழகான, பொருள்நிறைந்த கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தார். விண்ணுலகில், தந்தையாம் இறைவன், அருள்பணி ஸ்டான் அவர்களின் தோள்மீது கரத்தை வைத்து, "மகனே, கொடூரமான உலகிலிருந்து உன்னை, பிணையலில் எடுத்துவிட்டேன்" என்று கூறியபடியே, அவரை விண்ணகத்திற்குள் அழைத்துச்சொல்வதுபோல, அச்சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. மும்பைச் சிறையிலிருந்து, தனக்கு, நிபந்தனைகளுடன் கூடிய பிணையலாவது (conditional bail) கிடைக்கும் என்று, ஒன்பது மாதங்களாய் காத்திருந்த 84 வயது நிறைந்த அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு, இறுதியில், கடவுள், நிபந்தனையற்ற விடுதலையைப் (unconditional liberty) பெற்றுத்தந்தார்.

அரசின் அநீதிகளைப்பற்றி குரல் எழுப்பிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்திய நடுவண் அரசால் கொல்லப்பட்டதுபோலவே, ஜெர்ஸ்ட்சி போப்பியெவுஷ்கோ (Jerzy Popielusko) என்ற அருள்பணியாளர், 37 ஆண்டுகளுக்குமுன், போலந்து அரசால் கொல்லப்பட்டார்.
1947ம் ஆண்டு, போலந்து நாட்டில் பிறந்த ஜெர்ஸ்ட்சி அவர்கள், அருள்பணியாளராகப் பணியைத் துவக்கியபோது, போலந்து நாட்டை, வதைத்துவந்த,  கம்யூனிச ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்த்து, கோவில்களில், மறையுரைகளில் குரல்கொடுத்தார். அவரை மௌனமாக்க, கம்யூனிச அரசு மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தன. எனவே, 1983ம் ஆண்டு, அவர்மீது பொய்குற்றம் சுமத்தி, சிறையில் அடைத்தது, கம்யூனிச அரசு. அதை எதிர்த்து மக்கள் மேற்கொண்ட போராட்டத்தால், அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையடைந்து வெளியேறிய அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்களை, ஒரு கார் விபத்தில் சிக்கவைத்து கொலைசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியுற்றது. இறுதியில், 1984ம் ஆண்டு, அக்டோபர் மாதம், கம்யூனிச அதிரடிப் படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், அவரைக் கடத்திச்சென்று, அடித்தே கொன்றனர்.

சென்ற விவிலியத்தேடலில், நாம், அருள்பணி ஸ்டான் அவர்களைப்பற்றி சிந்தித்த வேளையில், அவருக்கு மீண்டும், மீண்டும் மறுக்கப்பட்ட பிணையல், போபால் நகரில் ஏற்பட்ட நச்சுவாயு விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு வெகு எளிதில் கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டோம். அந்த போபால் விபத்திற்கும், அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்களுக்கும் உள்ள ஒப்புமைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.
அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்கள் கொலை செய்யப்பட்ட ஆண்டு, 1984.
போபால் விபத்து நிகழ்ந்த ஆண்டு 1984.
1984ம் ஆண்டு நடைபெற்ற இவ்விரு துயர நிகழ்வுகளுக்கு, 26 ஆண்டுகள் சென்று, 2010ம் ஆண்டு, இருவேறு வகையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. போபால் விபத்தில், 8 பேரை குற்றவாளிகள் என்று, 2010ம் ஆண்டு, ஜூன் 7ம் தேதி, திங்களன்று, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு முந்தைய நாள், ஜூன் 6ம் தேதி, ஞாயிறன்று, அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை, அருளாளர் என்ற தீர்ப்பை வழங்கி, பெருமைப்படுத்தியது.

இவ்வாண்டு, ஜூலை 5ம் தேதி இறையடி சேர்ந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள்மீது சுமத்தப்பட்ட பொய்குற்றத்திலிருந்தும், அதனால் அவருடைய பெயருக்கு ஏற்பட்டக் களங்கத்தையும் நீக்கும் முயற்சியை, இந்தியாவில் பணியாற்றும் இயேசு சபையினர், துவக்கியிருப்பதாக, ஆகஸ்ட் 19, கடந்த வியாழனன்று, Live Law என்ற இணையவழி இதழில் வெளியான ஒரு செய்தி கூறுகின்றது. தன் வாழ்நாளெல்லாம், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும், அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழங்குடியின இளையோரின் விடுதலைக்காகவும் போராடிவந்தவர், அருள்பணி ஸ்டான் சுவாமி. இறுதியில், அவரே, அந்த இளைஞர்களைப்போல், அநீதியான முறையில் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டார். தற்போது, அவர், தீவிரவாதிகளுடன் தொடர்பற்றவர், வன்முறைகளைத் தூண்டாதவர் என்பதை, இந்திய நீதிமன்றங்களே அறிவித்து, அவரது பெயர்மீது சுமத்தப்பட்டக் களங்கத்தை நீக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், இந்திய இயேசு சபையினர், தங்கள் முயற்சிகளைத் துவக்கியுள்ளனர்.

போபால் நச்சுவாயு விபத்து, அருள்பணியாளர் ஜெர்ஸ்ட்சி அவர்களின் கொலை, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் கொலை என்ற மூன்று துயர நிகழ்வுகளிலும், உலக அளவில், மனிதர்கள் நடுவில், நீதி, நியாயம் கிடைத்துள்ளதா என்பது பெரும் கேள்விக்குறியே. ஆனால், இந்த துயர நிகழ்வுகளின்போது, ஒரு சில நல்லவைகளும் நடந்திருக்கின்றன என்பது நமது நம்பிக்கை.

போலந்து நாட்டில் அருள்பணி ஜெர்ஸ்ட்சி அவர்கள் கொலையுண்ட செய்தி, பலரை, இறைவன் பக்கம் இழுத்து வந்துள்ளதென்பது தெளிவாகிறது. இவரது சாவுக்கு சட்டப்படி நீதி கிடைத்ததா? தெரியவில்லை. ஆனால், இவரது சாவினால் பல்லாயிரம் பேருக்கு நிறை வாழ்வு, இறை வாழ்வு கிடைத்தது என்பதை, அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு அருளாளர் என்ற நிலையை, திருஅவை வழங்கியுள்ளது. அதேபோல், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு திருஅவை பின்னொரு காலத்தில், அங்கீகாரம் வழங்கலாம், வழங்காமலும் போகலாம். ஆனால், அவரது  வாழ்வும், மரணமும், பல இளையோருக்கு, பெரும் சவாலாக அமைந்துள்ளது என்பது உறுதி.

உலகின் நீதிமன்றங்களில் உண்மையான, நீதியான தீர்ப்பு கிடைக்காமல், மனிதர்கள், அதிலும் முக்கியமாக, நீதியை விலைகொடுத்து வாங்கமுடியாத ஏழைகள், அணுகும் நீதி மன்றம்... கடவுளின் சந்நிதி.
நீதி தேடி கடவுளின் சந்நிதியை நாம் எப்போது, எவ்வாறு நாடுகிறோம்? அவநம்பிக்கையின், தோல்வியின் உச்சத்தில் இறைவனை நாடுகிறோமா அல்லது நடக்கும் அனைத்திற்கும் அந்த ஆண்டவனே நாயகன் என்ற நம்பிக்கையோடு நாடுகிறோமா? "ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்ற சொற்களுடன் ஆரம்பமாகும் 17ம் திருப்பாடல், நமக்குப் பாடங்கள் சொல்லித் தரட்டும்.

இத்திருப்பாடலுக்கு, “மாசற்றவனின் மன்றாட்டு” என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில், இத்திருப்பாடல், ஒரு சில பதிப்புகளில், Prayer of the innocent man என்றும், வேறு சில பதிப்புகளில், Prayer of the perfect man என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தத் திருப்பாடல் “மாசற்றவனின் மன்றாட்டு” அல்லது “உன்னதமான, மனிதனின் மன்றாட்டு” என்று கூறப்படுகிறது. இந்த உன்னதமான மனிதன் இயேசு என்றும், இயேசுவின் மனநிலையை முன்னறிவிக்கும்வண்ணம், தாவீது, இந்தத் திருப்பாடலைப் பாடியிருக்கலாம் என்றும், விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இயேசு, திருப்பாடல்களை, தன் வாழ்வில் பயன்படுத்தினார் என்பதை ஏற்கனவே அறிவோம். கல்வாரியில், சிலுவையில் அறையப்பட்டு, விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் மரணப்போராட்டம் நிகழ்த்திய அவ்வேளையிலும், இயேசு, திருப்பாடல்களைப் பயன்படுத்தினார் என்பதை நாம் அறிவோம் (காண்க. திருப்பாடல் 22:1; 31:5). அந்தக் கோணத்திலிருந்து பார்க்கையில், இயேசு, நிச்சயம், 17ம் திருப்பாடலை, பல வேளைகளில், தன் வேண்டுதலாக எழுப்பியிருப்பார்.

பெரும்பாலான திருப்பாடல்களில் காணப்படும் முன் குறிப்பைப்போல், 17ம் திருப்பாடலிலும், 'தாவீதின் மன்றாட்டு' என்ற முன்குறிப்பு இடம்பெற்றுள்ளது. திருப்பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ள 150 பாடல்களில், 'தாவீதின் புகழ்ப்பா', 'தாவீதின் அறப்பாடல்', அல்லது, 'தாவீதின் கழுவாய்ப் பாடல்' என்ற முன்குறிப்புகள் பல திருப்பாடல்களின் முன்குறிப்பாக இடம்பெற்றுள்ளன. 17 மற்றும் 86 ஆகிய இரு திருப்பாடல்களில் மட்டுமே, 'தாவீதின் மன்றாட்டு' என்ற முன்குறிப்பு இடம்பெற்றுள்ளது.

'தாவீதின் மன்றாட்டு' என்ற சிறப்பான முன்குறிப்பைப் பெற்றுள்ள 17ம் திருப்பாடலின் முதல் இறைவாக்கியத்தில், ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும் என்று தாவீது தன் மன்றாட்டைத் துவக்கியுள்ளார். இதில், 'என் வேண்டுதலை உற்றுக்கேளும்' (திருப்பாடல் 17:1) என்று அவர் கூறியிருப்பது, ஆங்கிலத்தில், "Attend to my cry", அதாவது, "என் அழுகையைக் கவனித்தருளும்" என்று ஆண்டவரிடம் தாவீது கூறுவதுபோல் அமைந்துள்ளது.
17ம் திருப்பாடலின் முதல் இறைவாக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள அழுகைஎன்ற சொல்லுக்கு, Charles Spurgeon என்ற விவிலிய மறையுரையாளர் கூறியுள்ள அழகானதொரு விளக்கத்துடன், நாம், அடுத்தவாரத் தேடலை ஆரம்பிப்போம்.