18 October, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 44

Touching Jesus’s garments

அக்டோபர் 15, கடந்த சனிக்கிழமை, இந்தியாவின் வாரணாசியில் கூடிய 1 இலட்சத்திற்கு அதிகமானோர் நடுவில் திடீரென ஏற்பட்ட ஒரு நெரிசலில், 25 உயிர்கள் பலியாயின; 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ஊர்வலமாக, ஒரு பாலத்தைக் கடந்துகொண்டிருந்த கூட்டத்தில், பாலம் இடிந்து விழப்போகிறது என்று யாரோ கிளப்பிவிட்ட ஒரு வதந்தியால் இந்த விபத்து நிகழ்ந்ததெனச் சொல்லப்படுகிறது.
எந்த ஓர் ஊர்வலத்திலும், பல்வேறு எண்ணங்கள் வலம்வரும். ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள், எதற்காகச் செல்கிறோம், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பர். ஆனால், ஊர்வலம் செல்லும்போது, ஆர்வத்தால் தூண்டப்பட்டு, வழியில் இணைபவர்களும் உண்டு. இன்னும் சிலர், ஊர்வலத்தில் கலகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இணையக்கூடும்.
கூட்டங்களை, ஊர்வலங்களைப் பற்றி இன்றைய விவிலியத் தேடலில் எண்ணிப்பார்க்க இரு காரணங்கள் உண்டு. வாரணாசியில் ஏற்பட்ட அந்த துயர நிகழ்வில் இறந்தோர், மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் நமது அனுதாபங்கள் நிறைந்த செபங்களை எழுப்புவது, முதல் காரணம். நாம் கடந்த சில வாரங்களாகச் சிந்தித்து வரும் புதுமையிலும் ஓர் ஊர்வலம் இடம்பெறுகிறது என்பது இரண்டாவது காரணம்.

இறக்கும் நிலையிலிருந்த தன் மகளை, இயேசு குணமாக்கவேண்டும் என்று, தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் வேண்டியதையடுத்து, யாயிரையும், இயேசுவையும் பின்தொடர்ந்து ஒரு கூட்டம் ஊரவலமாகக் கிளம்பியது.
யாயிரின் இல்லம் நோக்கிச் சென்ற அந்த ஊர்வலத்தில், பல்வேறு நோக்கங்கள் கொண்டவர் கலந்துகொண்டனர். சாகக்கிடக்கும் மகளைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம், யாயிர் மனதிலும், இயேசுவின் மனதிலும் மேலோங்கியிருக்க வேண்டும். தொழுகைக்கூடத் தலைவரின் மகள் சாகக்கிடக்கிறார் என்ற செய்தியும், அவரைக் குணமாக்க இயேசு செல்கிறார் என்ற செய்தியும் ஊரெங்கும் பரவியதால், 'என்னதான் நடக்கப்போகிறது' என்று காண ஆர்வம் கொண்டவர்கள், அந்த ஊர்வலத்தில் இணைந்திருக்கவேண்டும். தொழுகைக்கூடத் தலைவரே தங்கள் தலைவர் இயேசுவின் முன் மண்டியிட்டுவிட்டார், இனி தங்கள் புகழ் நாடெங்கும் பரவப்போகிறது என்ற பெருமையுடன், சீடர்கள் அந்த ஊர்வலத்தில் சென்றிருக்கவேண்டும். இயேசுவின் பணிகளில் குறைகாண்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்த மதத் தலைவர்கள், மீண்டும் குறைகாணும் நோக்கத்துடன், அந்த ஊர்வலத்தில் கலந்திருக்கவேண்டும்.
வேதனை, எதிர்பார்ப்பு, பெருமை, குறைகாணும் ஆர்வம் என்ற பல்வேறு உணர்வுகள் கலந்திருந்த அந்த ஊர்வலத்தில், நம்பிக்கை என்ற உணர்வும் நுழைந்தது. பன்னிரு ஆண்டுகளாய் தன்னை வதைத்துவந்த இரத்தப்போக்கு நோயை, இயேசு குணமாக்குவார்; அவரது ஆடையின் ஓரங்கள் போதும் தன்னைக் குணமாக்குவதற்கு என்ற அபார நம்பிக்கையுடன், ஒரு பெண், இயேசுவை நெருங்கினார். பன்னிரு ஆண்டுகளாய் பல வழிகளிலும் தனிமைபடுத்தப்பட்டு, நடைப்பிணமாக வாழ்ந்துவந்த அவர், இந்தக் கூட்டத்திலும் தனிமையை உணர்த்திருக்கவேண்டும். எனினும், அவர் மனதில் எரிந்த நம்பிக்கைச் சுடர், அவரை இயேசுவின் அருகில் கொண்டு சேர்த்தது. இயேசுவின் "ஆடையைத் தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்று போயிற்று" (மாற்கு 5:29) என்று நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ளார்.

எந்த ஒரு புதுமையிலும், உடல் அளவில் நோயை குணமாக்குவது மட்டும் இயேசுவின் நோக்கமல்ல, மாறாக, அந்தப் புதுமை வழியே, சமுதாயத்திற்கு நன்மை கொணர்வதையும் இயேசு விரும்பினார் என்பதை அறிவோம். இந்தப் புதுமையிலும், சமுதாயத்தை குணமாக்கும் புதுமையை இயேசு தொடர்கிறார். நோயுள்ள பெண் இயேசுவைத் தொட்டதும், அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் மாற்கு இவ்விதம் விவரிக்கிறார்:
மாற்கு 5:30-32
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!" என்றார்கள்.

இயேசுவுக்கும், சீடர்களுக்கும் இடையே நிகழ்ந்த அந்த உரையாடலில், பொருள் நிறைந்த கருத்து ஒன்று பொதிந்துள்ளது. "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்பது, இயேசுவின் கேள்வி. "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!" என்பது, சீடர்களின் பதில். சீடர்களின் பதிலைக் கேட்ட இயேசு, வியப்புடன் புன்னகை செய்திருக்கவேண்டும். அந்த வியப்புக்கும், புன்னகைக்கும் பின்புலத்தில், இயேசுவின் மனதில் ஓடிய எண்ணங்களை நான் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கிறேன்:
"சீடர்களே, 'என் மேலுடையைத் தொட்டவர் யார்?' என்று நான் கேட்ட வார்த்தைகளை மாற்றி, என்னைத் தொட்டவர் யார்?’ என்று நான் கேட்டதாகக் கூறினீர்களே, நீங்கள் சொன்னதுதான் முழுமையான உண்மை. இக்கூட்டத்தில் ஒருவர், என் ஆடையைத் தொட்டதன் வழியே, என்னையேத் தொட்டுவிட்டார்" என்ற எண்ணங்கள் இயேசுவின் புன்னகை வழியே வெளிப்பட்டன. தன்னைத் தொட்ட அந்தப் பெண்ணை, இயேசு, கூட்டத்தின் மையத்திற்குக் கொணர்ந்தார்.

இயேசுவின் ஆடையைத் தொட்டதால், அப்பெண், உடலளவில் குணமானார். இயேசுவின் இந்த அழைப்பு, அவர் மனதையும் குணமாக்கியது. பன்னிரு ஆண்டுகளாக உள்ளத்தில் வேரோடியிருந்த வேதனைகள், தலைமுதல் கால்வரை புரையோடிப் போயிருந்த வெறுப்புக்கள் எல்லாம் அப்போது கரைந்தன.
இரத்தப்போக்கு நோயுற்ற பெண்ணென்று தன்மீது தீட்டுக்களைச் சுமத்தி, தன்னை ஒதுக்கிவைத்த சமுதாயத்தின் மேல்... அச்சமுதாயத்தை இந்நிலைக்குக் கொண்டுவந்திருந்த சட்டங்கள், சம்பிரதாயங்கள் மேல்... அச்சட்டங்களை இம்மியும் பிசகாமல் காப்பாற்றிய மதத்தலைவர்கள் மேல்... இப்படிப்பட்ட ஒரு மதத்தின் மையமென்று சொல்லப்பட்ட அந்தக் கடவுள் மேல்... பன்னிரு ஆண்டுகளாய், அந்தப் பெண் வளர்த்து வந்திருந்த வெறுப்பு, வர்மம், வேதனை வெறி எல்லாம் அக்கணத்தில் விடைபெற்று மறைந்தன. முழுமையான விடுதலை பெற்றார் அவர்.

தன்னைக் கண்டதும், தன் கதையைக் கேட்டதும், அந்தக் கூட்டம் கொதித்தெழும், அவர்களைத் தீட்டுப்படுத்திய தன்னைத் தீர்த்துக்கட்ட கல்லெடுக்கும் என்பதை அப்பெண் அறிந்திருந்தார். கல்லால் சமாதியே கட்டினாலும் பரவாயில்லை. தன் மீட்பைப்பற்றி அவர்களிடம் சொல்லவேண்டும் என்று, அந்தப் பெண், கூட்டத்தின் நடுவே நின்று, தன் கதையைச் சொன்னார். "நிகழ்ந்தது அனைத்தையும் அவர் சொன்னார்" (மாற்கு 5:33) என்று நற்செய்தி சொல்கிறது. அவரது கதையைக் கேட்ட கூட்டம், அதிர்ச்சியில் உறைந்திருக்க வேண்டும். தங்கள் அனைவரையும் தீட்டுப்படுத்திய அந்தப் பெண்ணை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற வெறியில், மதத் தலைவர்கள் கற்களைத் தேடியிருக்கவேண்டும். தங்கள் தலைவரின் ஆடையைத் தொட்டதால், அவரையேத் தீட்டுப்படுத்திவிட்ட அப்பெண் மீது, சீடர்களுக்கும் கோபம் எழுந்திருக்க வேண்டும். கோபமும், கொலைவெறியும் தலைதூக்கிய அவ்வேளையில், அங்கு நிகழ்ந்ததை நற்செய்தியாளர் மாற்கு இவ்விதம் கூறியுள்ளார்: இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார். (மாற்கு 5:34)
இச்சொற்களை இயேசு கூறிய வேளையில் அவரது மனதில் மேலும் பல வார்த்தைகள் எழுந்திருக்கவேண்டும். "உன்னால் இன்று இக்கூட்டத்தில் பலர் குணம் பெற்றனர். சட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமையாகி, மனிதரை மதிக்கத்தெரியாமல் மக்கிப்போயிருந்த பலர், இன்று உன்னால் குணம் பெற்றனர். அமைதியுடன் போ!" என்று அசீர் வழங்கினார் இயேசு.

அப்பெண்ணின் நம்பிக்கையை இயேசு கூட்டத்தின் நடுவே பாராட்டியதைத் தொடர்ந்து, கூட்டத்தின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றது.
மாற்கு 5:35-36
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார்.

Christ raising the daughter of Jairus

யாயிரின் இல்லத்தில் இருந்தவர்கள், நம்பிக்கை இழந்திருந்ததால், சிறுமியின் அடக்கத்திற்கு ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன. அவ்வேளையில் அங்கு சென்ற இயேசு, சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறார் என்று சொன்னதும், ‘அவர்கள் நகைத்தார்கள்  என்பதை, மூன்று நற்செய்தியாளர்களும் கூறுகின்றனர். நம்பிக்கை இழந்து நகைத்த அக்கூட்டத்தை வெளியேற்றிவிட்டு, இயேசு, அச்சிறுமியின் கரங்களைப் பற்றி உயிர் கொடுத்து, அவரை எழச் செய்தார்.

இரத்தப்போக்கு நோயுள்ள பெண் நலமடைந்த புதுமையிலும், யாயிரின் மகள் உயிர்பெற்ற புதுமையிலும் 'தொடுதல்' என்பது மையமான நிகழ்வாகிறது. இஸ்ரயேல் சட்டங்களின்படி, நோயுள்ள பெண்ணைத் தொடுவதும், அவரால் தொடப்படுவதும் பிறரைத் தீட்டுப்படுத்தும். அதேபோல், இறந்த உடலைத் தொடுவதும் ஒருவரைத் தீட்டுப்படுத்தும். தன்னைத் தொட்டு, தீட்டுப்படுத்திய பெண்ணைக் கடிந்துகொள்வதற்குப் பதில், அவரை 'மகளே' (மாற்கு 5:34) என்று பரிவுடன் இயேசு அழைத்ததன் வழியே, சட்டத்தைத் தாண்டிய மனிதாபிமானத்திற்கு இயேசு முதலிடம் தருகிறார் என்பது தெளிவாகிறது. அதேபோல், யாயிரின் மகளை, கையைப்பிடித்து எழுப்பியதன் (லூக்கா 9:54) வழியே, இறந்த உடலைத் தொடுவது கூடாது என்று கூறும் சட்டத்தை இயேசு கேள்விக்குள்ளாக்குகிறார்.

யாயிரின் மகளை இயேசு குணமாக்கும் புதுமையைக் காண்பதற்காக, பெருந்திரளாக, ஊர்வலமாகப் புறப்பட்ட கூட்டம், ஐந்து பேர் மட்டுமே கொண்ட ஒரு சிறு குழுவாக மாறியது. பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்கள், சிறுமியின் தாய், தந்தை என்ற ஐந்து பேர் மட்டுமே இந்தப் புதுமையைக் கண்டனர். தனிப்பட்ட வகையில் இந்தப் புதுமை நிகழ்ந்திருந்தாலும்தொழுகைக் கூடத் தலைவரின் மகள் உயிர்பெற்ற நிகழ்வு, அடுத்தநாள் தலைப்புச் செய்தியாக ஊரெங்கும் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இயேசு, “‘இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது' என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்" (மாற்கு 5:43) என்று இப்புதுமை முடிவடைகிறது.

ஆரவாரமாக, கூட்டமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் இரத்தப்போக்கு நோயுள்ள பெண் ஆரம்பித்த ஒரு முயற்சியை புதுமையாக்கி, அந்தப் புதுமையை, இயேசு, ஊரறியச் செய்கிறார். ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.


No comments:

Post a Comment