01 December, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 22 – துயர்மிகு புலம்பல், புகழ்ச்சிப்பாடல்

 
The Lord Has Listened to His Cry

அவ்வப்போது, சமூக ஊடகங்களில் வலம்வரும் கூற்றுகளில் ஒன்று: "பாம்பு உயிரோடிருக்கும்போது, எறும்புகளைச் சாப்பிடும். ஆனால், பாம்பு இறந்ததும், எறும்புகள் பாம்பைச் சாப்பிடும்." இறந்த தாவரம், மீன், விலங்கு ஆகியவற்றை உண்பது, மனிதர்களாகிய நாமும், பிற உயிரினங்களும் வளர்த்துக்கொண்ட உணவுப்பழக்கம். ஆனால், உயிரோடிருப்பதை உண்பதென்பது சிறிது அபூர்வமான விடயம்.... ஒரு சில உயிரினங்கள் இப்படி உண்பதாக நாம் அறிவோம். மனிதர்கள் மத்தியிலும் இதுபோல் நடந்ததாக, இன்றும் நடப்பதாக, அதிர்ச்சி தரும் தகவல்கள், அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
உயிரோடு உள்ள ஒன்றை உண்பதைப்பற்றி நினைத்துப் பார்க்கும்போது, குளவிக்கூடுகளும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் புழுக்களும் நம் நினைவுக்கு வருகின்றன. குளவிக்கூடுகளில் வைக்கப்பட்டிருக்கும் புழுக்கள், உயிரோடு இருக்கும்போதே, குளவியின் சந்ததிக்கு உணவாக மாறுகின்றன. அந்தப் புழுக்களைக் குளவி கொட்டும்போது, அந்தப் புழுக்கள் இறப்பதில்லை, உணர்வுகளை மட்டும் இழந்து, உடல் முழுவதும் மரத்துப்போகின்றன. உடல் மரத்துப்போன நிலையில், அந்தப் புழு, உயிரோடு, அந்தக் குளவியின் சந்ததிக்கு உணவாகிறது.

இது, உயிரியல் பற்றிய பாடம் அல்ல... உயிரோடிருக்கும்போதே உணவாக மாறும் அந்தப்புழு, இன்றைய விவிலியத் தேடலுக்கு உதவியாக இருக்கும் ஓர் உருவகம். நாம் இன்று சிந்திக்கவிருக்கும் 22வது திருப்பாடலில் வரும் "நானோ ஒரு புழு; மனிதனில்லை." (திருப்பாடல் 22:6) என்ற சொற்கள், இத்தகையச் சிந்தனைகளை தூண்டுகின்றன.

துன்பத்தைப்பற்றிக் கூறும் விவிலியப்பகுதிகள் பல உள்ளன. யோபு என்ற முழு நூலும், துன்பத்தை மையமாகக் கொண்ட ஒரு தேடல்தானே. துன்பத்தைப்பற்றிய விவிலியப் பகுதிகளில் "யாவேயின் துன்புறும் ஊழியன்" என்ற எண்ணத்தைத் தாங்கிய பகுதிகள் சிறப்பாகப் பேசப்படுகின்றன. இறைவாக்கினர் எசாயா நூலின் 52, 53 ஆகிய இரு பிரிவுகளும், 22, மற்றும் 69 ஆகிய திருப்பாடல்களும், துன்புறும் ஊழியனான மேசியாவைப் பற்றிப் பேசுவதாக, விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர்.

உயிரோடு இருக்கும்போதே, அணு, அணுவாக இறக்கும் ஒருவர், மனதளவில் மற்றவருக்கு இரையாகும் ஒருவர், தன் நிலையை விவரிப்பதாக உள்ளது, 31 இறைவாக்கியங்களைக் கொண்ட 22வது திருப்பாடல். இத்தகைய வேதனையைக் கூறும் இத்திருப்பாடலின் முதல் 21 இறைவாக்கியங்களில், ஒரு சிலவற்றைக் கேட்போம்:
திருப்பாடல் 22:1,6-8,12-13,17-18
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
நானோ ஒரு புழு, மனிதனில்லை: மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்: மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்: தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும் என்கின்றனர்.
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன. அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்: இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள். என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்: என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.

இப்போது நாம் கேட்ட இந்த வரிகள், துயரத்தின் சிகரத்தில், வேதனையின் கொடுமுடியில் இருக்கும் ஒரு மனிதனிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள். இவ்வரிகள் அனைத்தும், இயேசு, கல்வாரியில் அடைந்த வேதனையைக் கூறும் வரிகள் என்று, விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். சிலுவையில் தொங்கியபோது, இயேசு, இந்தத் திருப்பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதும், விவிலிய அறிஞர்களின் கருத்து.
"என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று ஆரம்பமாகும் இந்தத் திருப்பாடலின் வரிகள், இயேசு, சிலுவையில் சொன்ன அந்த அற்புதமான ஏழு வாக்கியங்களில் ஒன்று (மத்தேயு 27:46) என்பதை நாம் அறிவோம். அதேபோல், "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக்கா 23:46) என்று, இயேசு கூறிய இறுதிச் சொற்களும், 31வது திருப்பாடலின் எதிரொலியாக ஒலிக்கின்றன. எனவே, இயேசு, கல்வாரியில், சிலுவைச் சித்ரவதைகளின் கொடுமுடியில், திருப்பாடல்களைச் செபித்தவண்ணம், தனக்கு ஆறுதல் தேடிக்கொண்டார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உடல் வேதனைகளைவிட, உள்ள வேதனைகள், ஒருவரை, இன்னும் அதிகமாய்ப் பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். உடல் வேதனைகளிலும், ஒரு சில வேதனைகள், மிகக் கொடியவை. எடுத்துக்காட்டாக, நகக்கணுக்களில் ஊசியை வைத்து குத்தும்போது, அல்லது, நரம்புகளை மரத்துப்போகச் செய்யும் எவ்வித மருந்தும் செலுத்தாமல், பற்களில் துளைசெய்து, நரம்பு வேர்களைத் தொடும்போது, நாம் அடையும் வேதனைகள், மிகக் கொடியவை. அரசுகளிடமும், குற்றகும்பல்களிடமும், சிக்கிக்கொண்டவர்களிடமிருந்து, உண்மைகளை வரவழைக்க, இத்தகையச் சித்ரவதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
உடல் வேதனைகளில் இப்படி பல நிலைகள் இருப்பதுபோல், உள்ள வேதனைகளிலும், ஒரு சில, சாதாரண வேதனைகள், வேறு சில, வேதனைகளின் சிகரங்கள். நமக்கு மிக நெருங்கியவர்கள், நம்மை வெறுத்து ஒதுக்குதல், காட்டிக்கொடுத்தல், கைவிடல், ஆகியவை, வேதனைகளின் சிகரங்கள் என்பதை, அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்.

திருப்பாடல் 22ன் ஆசிரியர் கூறும் வேதனையின் உச்சி என்ன? இறைவன் அவரைக் கைவிட்டதுதான். அதுவும், பகைவர்கள் தன்னைச் சூழ்ந்த வேளையில், இறைவனும் தன்னைக் கைவிட்டதைப்போல் தாவீது உணர்ந்தது, இத்திருப்பாடலில் வெளிப்படுகிறது.

வேதனையில் துடிக்கும் உள்ளத்தை, அனலில் இட்ட மெழுகு, தணலில் விழுந்த புழு என, நாம் உருவகப்படுத்துகிறோம். திருப்பாடலின் ஆசிரியரும், இவற்றையொத்த உருவகங்களைத் தருகிறார். எலும்புகள் கழன்றுபோன, அல்லது, எலும்புகளே இல்லாத ஒரு புழுவைப்போல் உணர்ந்த தாவீது, இறைவன், தன்னைச் சாவின் புழுதியில் போட்டுவிட்டார் என்றும் கூறுகிறார்:
நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்: என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின: என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று: என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது: என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது: என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். (திருப்பாடல் 22: 14-15)

புழு, புழுதி... ஆகியவை, ஆழமான உருவகங்கள். மனித உள்ளம், மிக, மிகத் தாழ்ந்துப் போனதாய் உணரும்போது, புழுவாகிப்போனதாக, புழுதியில் மிதிபடுவதாகப் பேசுகிறோம். வாழ்வு முடிந்து, அழுகல், அழிவு இவை ஆரம்பமாவதை உணர்த்தும் ஒரு முக்கிய அடையாளமாய் இருப்பவை, புழுக்கள். யோபு, தன் உடல் அழுக ஆரம்பித்துவிட்டதைக் கூறும் வரிகள் நினைவுக்கு வருகின்றன: புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை: வெடித்தது என் தோல்: வடிந்தது சீழ். என் நாள்கள்... நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. (யோபு 7:5-6)

கோபத்தில் சாபமிடுகிறவர்களைப் பார்த்திருக்கிறோம். புழுதியை வாரிஇறைத்து, சாபத்திற்கு ஆளாகும் மனிதர்களின் உடலில், செல்வத்தில் புழுக்கள் நிறையவேண்டும் என்று சாபமிடுவார்கள். யோபுவின் நூலில் இதே போன்ற வரிகள் காணக்கிடக்கின்றன. தீயவர்களின் முடிவைக் கூறுகையில், யோபு பயன்படுத்தும் வார்த்தைகள் இவை: புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்: புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே. (யோபு 21:26)

இப்படி அழிவுக்கும், சாபத்திற்கும் அடையாளமாகும் புழுக்களும், புழுதியும், வியக்கவைக்கும் மாற்றங்களுக்கும், மறு வாழ்வுக்கும் அடையாளங்களாகின்றன. மண்ணோடு, புழுதியோடு தன்னை ஐக்கியமாக்கும் மண்புழு, அந்த மண்ணையும், புழுதியையும், உயிரூட்டும் உரமாக மாற்றும் அற்புதம் நமக்குத் தெரிந்த செய்தி. அதே போல், கூட்டுக்குள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளும் கூட்டுப்புழு, வண்ணத்துப் பூச்சியாக வடிவெடுப்பதும் நாம் கண்டு வியந்திருக்கும் அதிசயம்தானே.

தன்னை, ஒரு புழுவாக, புழுதியில் கிடப்பவராக, உருவகிக்கும் தாவீது, புழுவின் அடையாளங்களாக இருக்கும் அழுகல், அழிவு ஆகியவற்றை மட்டும் மையப்படுத்தி, 22வது திருப்பாடலை உருவாக்கவில்லை. மாறாக, அதேப் புழு, மாற்றங்களையும், மறுவாழ்வையும் கொணரும் என்ற உண்மையையும் மனதில் வைத்தே, தன்னை ஒரு புழுவாக உருவகித்திருக்க வேண்டும். எனவேதான், இத்திருப்பாடல், அவநம்பிக்கையில் முடியாமல், நம்பிக்கை வரிகளுடன் நிறைவடைகிறது.

"இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று, 22வது திருப்பாடலின் ஆரம்ப வரிகளை, சிலுவையில், தன் கதறலாக்கிய இயேசு, எவ்வாறு, இறுதியில், "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக்கா 23:46) என்று, 31வது திருப்பாடலின் நம்பிக்கை வரிகளோடு தன் வாழ்வை முடித்தாரோ, அதேபோல், தாவீதும், இறைவனால் கைவிடப்பட்டதாக உணர்ந்த அந்த வேதனையுடன், 22வது திருப்பாடலின் முதல் பாதியில் புலம்பினாலும், இறுதி 10 இறைவாக்கியங்களில் தன் நெஞ்சையும், நம் நெஞ்சங்களையும் நம்பிக்கையால் நிறைக்கிறார். நம்பிக்கைதரும் இறுதிவரிகள் இதோ:
திருப்பாடல் 22: 22,26,29-30 
உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.

புழுவும், புழுதியும், அழிவுக்கும், அழுகிப்போவதற்கும் இலக்கணமாகலாம். ஆனால், அதே புழுவும், புழுதியும், மாற்றங்கள், மறு வாழ்வு என இலக்கியமாவதும் உண்மை.

No comments:

Post a Comment