09 July, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 29

The Rwandan Genocide
As We Forgive – the movie

ஒரு கற்பனை காட்சியுடன் இன்றைய விவிலியத் தேடலை ஆரம்பிப்போம். மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு குற்றவாளியின் தலையும், முகமும் கறுப்புத் துணியால் மூடப்படுகின்றன. அவரது கழுத்தைச் சுற்றி, தூக்குக் கயிறு மாட்டப்படுகிறது. மற்றொரு காட்சியில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, மின்சார நாற்காலியில் பிணைக்கப்படுகிறார்; அவரது கரங்கள், கால்கள், தலை ஆகிய பகுதிகளில் சக்திமிகுந்த மின்சாரம் பாய்வதற்கு ஏற்றவாறு இணைப்புக்கள் பொருத்தப்படுகின்றன. அவ்வேளையில், திடீரென, மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதென்றும், அவர் சுதந்திரமாகச் செல்லலாம் என்றும் ஓர் ஆணை வந்து சேர்ந்தால், தூக்கு மேடையில், அல்லது மின்சார நாற்காலியில் இருக்கும் மனிதரின் நிலை எப்படி இருக்கும்? நம்பமுடியாத மகிழ்வின் உச்சத்தை அடையும் அவர், பேச்சிழந்து, மூச்சிழந்து ஒருவேளை மயங்கி விழக்கூடும். இல்லையா?

இதையொத்த ஒரு சூழலை, 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'யின் முதல் பகுதியில் இயேசு சித்திரிக்கிறார். 'பத்தாயிரம் தாலந்து' கடன்பட்ட பணியாளரின் கடன் தொகை முழுவதையும் அரசன் தள்ளுபடி செய்து, அவரைச் சுதந்திரமாகப் போக அனுமதித்த வேளையில், இதுபோன்ற ஒரு மகிழ்வு அப்பணியாளரை நிறைத்திருக்க வேண்டும். அந்த மகிழ்வு, அவரை, நன்றி நிறைந்தவராக, அயலவருக்கு நன்மை செய்பவராக மாற்றியிருக்கவேண்டும். ஆனால், நடந்தது என்ன? இவ்வுவமையின் இரண்டாம் பகுதியில் இயேசு விவரிக்கும் காட்சி, வித்தியாசமாக அமைந்துள்ளது. இதோ இவ்வுவமையின் இரண்டாம் பகுதி:
மத்தேயு நற்செய்தி 18: 27-30
அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

இயேசு இவ்வுவமையில் பயன்படுத்தியுள்ள இரு கடன் தொகைகள், பல விவிலிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன என்று குறிப்பிட்டோம். 'பத்தாயிரம் தாலந்து', 'நூறு தெனாரியம்' என்ற இவ்விரு தொகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'பத்தாயிரம் தாலந்து', கடலளவு நீர் என்றால், 'நூறு தெனாரியம்' கையளவு நீர்!
கடலளவு நீரில் மூழ்கி, மூச்சுவிடப் போராடிக்கொண்டிருந்த பணியாளரை, அரசர் கரம் நீட்டி, கரை சேர்த்ததைக் கண்டு நாம் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். அதே கருணையை அவர், தன் உடன் பணியாளருக்கும் காட்டுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அந்தப் பணியாளர், தனக்கு வழங்கப்பட்ட வாழ்வு பிச்சையை மறந்துவிட்டு, தன் உடன் பணியாளரின் மூச்சை நிறுத்த, அவருடைய கழுத்தை நெரித்தார் என்று வாசிக்கும்போது அதிர்ச்சி அடைகிறோம். நாம் அடைந்த அதிர்ச்சியை உடன் பணியாளர்களும் அடைந்தனர். தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை இவ்வுவமையின் மூன்றாம் பகுதியில் இவ்வாறு வாசிக்கிறோம்:
மத்தேயு நற்செய்தி 18: 31-34
அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தி, தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

மன்னிப்பு பெறுவதும், தருவதும் நாம், உள்ளிழுத்து, வெளிவிடும் சுவாசத்தைப் போல, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த செயல்பாடுகள். ஒன்று குறைந்தால், நோயுறுவோம். மன்னிப்பு பெறுவதும், தருவதும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல... ஒரு பக்கம் மட்டுமே உருவங்கள் பதிந்து, மற்றொரு பக்கம் தேய்ந்துபோயிருந்தால், அந்த நாணயம், மதிப்பில்லாமல் போகும். பத்தாயிரம் தாலந்து கடனிலிருந்து மன்னிப்பு பெற்ற பணியாளர், தான் பெற்ற மன்னிப்பை அடுத்தவருக்குத் தர மறுத்தபோது, அவர் பெற்ற மன்னிப்பும், நோயுற்று, விலை மதிப்பற்று போனது. இதையே, இவ்வுவமையின் இறுதியில் இயேசு இவ்விதம் கூறுகிறார்:
மத்தேயு நற்செய்தி 18: 35
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

இறைவன் நம்மை மன்னிக்க மாட்டார் என்று சொல்வதை விட, நாம் மற்றவர்களை மன்னிக்க முடியாதபோது, அந்த உணர்வு, நம்மை நாமே மன்னிக்க முடியாதவாறு நம்மைச் சிறைப்படுத்துகின்றது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். மன்னிக்க மறுப்பதைக் குறித்து Stephanie என்பவர் சொல்லியுள்ள வார்த்தைகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன: "ஒருவரை மன்னிக்க மறுப்பது எவ்விதம் உள்ளதெனில், நஞ்சை நாம் குடித்துவிட்டு, அடுத்தவர் இறப்பார் என்று எதிர்பார்ப்பதைப் போல் உள்ளது." (Refusing to forgive someone is like drinking poison, and waiting for the other person to die).

நாம் ஒவ்வொருவரும் சிறுவயது முதல் பல்வேறு சூழல்களில் மன்னிப்பை பெற்று வளர்ந்துள்ளோம். மன்னிப்பினால் பக்குவம் அடையும் நம் உள்ளம், அடுத்தவரையும் மன்னிக்கப் பழகுகிறது. இதற்கு மாறாக, நாம் பெற்றுள்ள மன்னிப்பை மறந்துவிட்டு, அல்லது, மறுத்து, ஒதுக்கிவிட்டு, பகைமையிலும், வெறுப்பிலும் நம் மனம் நிறையும்போது, அது, ஓர் அமிலத்தைப் போல நம்மைப் புண்ணாக்குகிறது.

1994ம் ஆண்டு, ருவாண்டா நாட்டில் உருவான ஓர் இனக்கலவரத்தில், Tutsi எனப்படும் இனத்தைச் சேர்ந்தவர்களில், 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். Hutu இனத்தைச் சார்ந்த 70,000க்கும் மேற்பட்டவர்கள், இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக ஒத்துக்கொண்டதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஏறத்தாழ 10 ஆண்டுகள் சென்று, 2005ம் ஆண்டு, இக்கொலையாளிகளை அரசு விடுவித்தது. அவர்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே Tutsi மக்கள் மத்தியில் அவர்கள் மீண்டும் வாழ வந்தனர்.
கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த ஒப்புரவை, ‘As We Forgive’நாங்கள் மன்னிப்பது போல் என்ற ஆவணப் படம் காட்டுகிறது. மனதைச் சங்கடப்படுத்தும் பல காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் உள்ளத்தை அதிகம் தொடுகின்றன; நம்பிக்கையைத் தருகின்றன. அதேபோல், அந்தக் கொலையாளிகளும் உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது, மனதைத் தொடும் காட்சிகள். இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வழங்கியவர்கள், பெற்றவர்கள். சுருங்கச் சொல்லவேண்டுமெனில், இவர்கள் மன்னிப்பை வாழ்ந்தவர்கள்.

இந்த ஆவணப் படத்தில் ஒருவர் சொல்லும் கூற்றை மட்டும் இங்கு கூற விழைகிறேன். மன்னிப்பு வழங்கப் போராடிவந்த Tutsi மக்களை வழிநடத்தி வந்த ஓர் அருள்பணியாளர் சொல்லும் இந்த வார்த்தைகள், நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகின்றன: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவற்றிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்துவிடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது, எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதே போல் இவர்களது இந்த கசப்பான எண்ணங்கள், நினைவுகள், இவர்களை முற்றிலும் அழித்துவிடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்ற முடியும்."

மன்னிப்புக்குப் பதில் வெறுப்பு நம் மனங்களில் புரையோடிப் போய் நமது மனதையும் வாழ்வையும் ஓர் அமிலமாய் அரித்துவிட்டால், அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு, செப்டம்பர் 11ம் தேதி ஓர் எச்சரிக்கை நாளாக அமைந்துள்ளது. 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவில், நியூயார்க் நகரில், உலக வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்ச்சி, நம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருந்து வருகிறது.

இந்த வன்முறை நிகழ்வைத் தொடர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு எடுத்த முதல் முடிவு, பழிக்குப் பழி என்ற முடிவு. இந்த அழிவை உருவாக்கியவர்களை, வேரோடு அழிப்போம் என்ற சூளுரையோடு, அமெரிக்க இராணுவம் புறப்பட்டது. முகமும், முகவரியும் அற்ற எதிரியைத் தேடி, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில், அமெரிக்க இராணுவம் பேரழிவை ஏற்படுத்தின. பழிக்குப் பழி என்று உருவான இவ்வலை, உலகெங்கும் பரவி, கோடிக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தது. முகமற்ற இந்த வன்முறை கும்பலின் ஒரே முகவரி என்று சொல்லப்பட்ட ஒசாமா பின் லேடன் என்ற தலைவன் கொல்லப்பட்டார். அவரது மரணம் ஒரு தீர்வாக அமைவதற்குப் பதில், இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கியது. இன்னும் பல அடிப்படைவாதக் குழுக்கள் தோன்ற காரணமானது. பழிக்குப் பழி என்பதை தங்கள் வேதமாகக் கொண்டு செயலாற்றும் ISIS என்ற வன்முறை கும்பல் பரப்பிவரும் வெறுப்பு, உலகின் அனைத்து நாடுகளையும் அமைதியிழக்கச் செய்துள்ளது. இந்த வன்முறை கும்பலின் வலையில் சிக்கிய பங்களாதேஷ் இளையோர், ஜூலை 1, கடந்த வெள்ளியன்று 20 பேரை கொன்ற நிகழ்வு நம்மை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. இரமதான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த புனித நாட்களில் இந்த வன்முறை நிகழ்ந்தது, நம் வேதனையை அதிகரித்துள்ளது.

உலகின் பல இடங்களில், பழிக்குப் பழி என்ற அமிலத்தால், தங்கள் உள்ளங்களை நிறைத்து, அழிந்துகொண்டிருக்கும் வன்முறையாளர்கள், தங்கள் தவறை உணர்ந்து, வெறி என்ற அமிலத்திற்குப் பதிலாக, மன்னிப்பு என்ற மருந்தினால் குணம் பெறவேண்டும் என்று மன்றாடுவோம். மன்னிப்பு வழங்குவதாலும், பெறுவதாலும் உருவாகும் உண்மையான அமைதியை நாம் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம்.


No comments:

Post a Comment